Saturday, October 15, 2005

மதமாற்றமல்ல - மனமாற்றம் - 6

*****************************************************
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2 ல் நடைபெற்ற "தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு" என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு.
*****************************************************

அடுத்து கிறிஸ்தவ-பௌத்த மார்க்கம் இழிவு நீங்க வழி காட்டுமா?

அரசியல் கட்சி தலைவர்களினால் நமது சமுதாய தலைவர்களினால் சமூக இழிவை போக்க இயலாது என்றால் கிறிஸ்துவ பௌத்த மார்க்கம் சேர்ந்தால் இழிவு போய்விடுமா என்ன? கிறிஸ்தவ மார்க்கம் - சாதி அமைப்பிலோ, சமூக அமைப்பிலோ சமூக இழிவிலோ நம்பிக்கை கொள்ளாதது. ஆனால், இந்திய நாட்டில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்ப முன்வந்தவர்கள் இந்துக்களின் எல்லா பழக்கவழக்கத்தையும் அனுமதித்ததன் பலனாக கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயும் சாதிகள் தோன்றின. அந்தோணி பர்ணான்டஸ், மரியசூசை செட்டியார், லூர்துசாமி பிள்ளை, சந்தோச நாடார். இன்று கிறஸ்தவ மதம் ஏறக்குறைய சிலுவை அணிந்த இந்து மதமாக மாறிவிட்டது.
இதில் வேதனை என்னவென்றால், கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்த நமது சகோதரர்கள் அங்கு இந்து மதத்தில் இருந்த மாதிரி ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சர்ச் வழிபாட்டிலே கூட வேற்றுமை காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்கள் பிளவுபட்டு மனமொடிந்து மதம் மாறி அங்கே அதிசய விநாயகர் தோன்றியது நாடறியும்.

ஆம், இப்போது அங்கே பிள்ளையார் போய் பெத்த பெருமாள் வந்த கதை தான்.

திருச்சி கிறிஸ்தவ இடுகாட்டில், பிள்ளைமார் இடுகாடு ஆதி திராவிடர் இடுகாடு என்று பிரிக்கப்பட்டு சுவர் கூட எழுப்பப்பட்டுள்ளது. எனவே, சமூக இழிவு வேறு உருவத்தில் கிறிஸ்தவ மார்க்கத்திலும் இருக்கவே செய்கிறது. அந்த மார்க்கமும் நமது இழிவை போக்கிட முடியவில்லை. இந்து மத-ஜாதி கொடுமைகள் தாங்காமல், சமூக இழிவு நீங்க பௌத்த மார்க்கமே சிறந்தது என்று 7 லட்சம் மக்களுடன் பௌத்த மதம் சேர்ந்தார் டாக்டர் அம்பேத்கர்.

அவர் பௌத்த மதம் சேர்வதற்கு முக்கிய காரணம் என்ன?

இந்தியாவில் அன்று இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த நேரம். இங்கு ஜாதி இந்துக்களின் கொடுமையில் இருந்து நம் சமூக மக்களை பாதுகாக்க அவர் எண்ணினார். பக்கத்தில் சீனா, ஜப்பான், பூட்டான், நேபாள், இலங்கை போன்ற நாடுகள் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள். பௌத்த மதம் இந்தியாவில் தோன்றியது. அவர்கள் உதவி நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று பெரிய திட்டத்தையே வைத்திருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தமதம் சார்ந்த சில நாட்களுக்குள் காலமாகிவிட்டார். இங்கேயும் பௌத்த மதத்தில் சார்ந்த நமது மக்களை அங்கு நியூ புத்திஸ்ட் என்று அழைக்கிறார்கள். ஆகவே, பௌத்த மதத்திலும் இழிவு நீங்க வாய்ப்பில்லை. எனவே. நமது சமூக இழிவு நீங்க சமுதாய மாற்றம் ஏற்பட்டு இன்று நமக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்கு விஞ்ஞான மெஞ்ஞான பூர்வமான இறுதி தீர்வு காண "இஸ்லாம் மார்க்கம்" நமக்கு உதவுமா? வழி காட்டுமா? இஸ்லாத்தை படிப்போம்! அதை ஆழமாக சிந்திப்போம்!!

இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

"இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் ஆராயட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள். "

மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் செய்த சேவைகள் மகத்தானவை. அதை நாம் கண்ணியத்தோடு ஆராயும் போது தற்கால உலகை கண்ணோட்டமாக வைத்து பார்க்காமல் இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நமது சிந்தனையை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் இஸ்லாத்தின் பெருமையையும், அதன் சேவையையும் நம்மால் உணரமுடியும்.

கல்வி, அறிவு மற்றும் நாகரீகம் வளர்ச்சியடையாத விஞ்ஞானம் வான சாஸ்திரம் என்னவென்றே தெரியாத ஒரு பாகத்து மக்கள் மறு பாகத்தை அறிந்து கொள்ளாத நிலையில் மக்கள் இருந்தனர். பொதுவாக சரித்திரத்தில் அக்காலத்தை இருண்ட காலம் என்பர். அநாகரீகம், காட்டுமிராண்டித்தனம், அதர்மம் நிறைந்த காலமாக அதை வர்ணிக்கப்படுகிறது. அதற்கு மகுடம் வைத்தாற்போல் அன்றைய அரேபிய நாட்டில் மக்கள் மூட பழக்கவழக்கத்தில் மூழ்கியிருந்தனர்.

அந்த காலத்தில் தான் இறைவனின் பிரதிநிதியாக, தீர்க்கதரிசியாக பரிசுத்த முகமது (ஸல்) அவர்கள் உலகின் மத்திய பாகமான அரேபிய பாலைவனத்தில் தந்தை அப்துல்லாஹ்வுக்கும், தாய் ஆமீனாவுக்கும் மகனாக பிறந்தார்கள். சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்த நாயகம் அவர்கள், தாய், தந்தையரை இளம் வயதில் இழந்தார்கள். தந்தை வழி வந்தோரின் அரவணைப்பில் வளர்ந்த நாயகம் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததினால் கல்வி அறிவு அற்ற நிலையில் வளர்ந்தார்கள். இருப்பினும், புத்தி கூர்மையும் தெளிவான ஞானமும் அளப்பறிய அறிவாற்றலும் கொண்ட நாயகம் அவர்கள் மனிதாபிமான மேலீட்டால் பிறருக்கு பெரும் தொண்டு செய்து மங்கா புகழ் பெற்ற அல்-அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பட்டத்தை மக்களாலே பெற்றார்கள்.

மனித சமுதாய அமைப்பிற்கு தான் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி நடைமுறையில் இருந்து வந்த மக்களுக்கு முற்றிலும் மாறாக வாழ்ந்தார்கள். பரிசுத்தமான நிலையிலும் உயர்ந்த அமைப்பிலும் ஏக இறைவனைப் பற்றிய சிந்தனையிலும் வளர்ந்து வந்த நாயகம் அவர்களுக்கு தமது 40 வயதில் இறைவன் புறமிருந்து நபிப்பட்டம் அருளப்பட்டது. அன்று தொட்டு நபி மணிக்கு 63 வயது வரை 23 ஆண்டுகள் பரிசுத்த திருக்குர்ஆன் என்ற இறை வாக்குகள் சிறுக சிறுக அருளப்பட்டது.

இடைவெளி விட்டும் தொடர்ச்சியாகவும் 23 ஆண்டுகள் கொண்டு நபி மணி மூலம் பரிசுத்த குர்ஆன் என்ற கிரந்தம் உலகிற்கு அருளப்பட்டது. ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள் என்ற தத்துவத்தை இதன் மூலம் நபிமணி அவர்களால் உலகிற்கு பிரகடனப்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு அன்று உண்டாயிற்று. உற்றார், உறவினர், நண்பர்கள் நாட்டு மக்கள் ஆகிய எல்லோரும் நபிகள் நாயகம் அவர்களை எதிர்க்கவும், துன்புறுத்தவும் தொடங்கினர்.

ஆனால் நாயகம் அவர்கள் மனைவியாகிய கதீஜா பிராட்டியும் அவரைத் தொடர்ந்து ஏழை எளியோரும், இளைஞர்களும், அடிமைகளும் தான் நபியவர்களின் கொள்கைகளை முதன்முதலில் ஒப்புக்கொண்டனர்.

கற்றவர்களோ, படித்தவர்களோ, பணம் படைத்த செல்வந்தர்களோ கோத்திரப் பெருமை பேசி நாயகத்தின் கொள்கைதனை செவி மடுக்க மறுத்துவிட்டனர். மக்கத்து அதிபதியும் அவர் தம் அடியாட்களும் நபிகள் நாயகத்திற்கு எல்லையில்லா துன்பத்தினையும் தினம் தினம் செய்து வந்தனர்.

துன்பத்தையும் துயரத்தையும் தாங்கிக் கொண்டு தம் கொள்கைதனை தீவிரமுடன் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பரிசுத்த திருக்குர்ஆனின் கொள்கைகளை பிறருக்கு பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல் தானும் தன் தோழர்களும் அதனை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றிய அந்த சிறிய முஸ்லிம் சமுதாயமானது எல்லாவிதமான துன்ப துயரங்களையும் எதிர்ப்புகளையும் வெற்றிக் கொண்டு வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் முன்னேறி உலகிற்கு முன்மாதிரியாக சிறந்து பெருகி அரேபியா முழுவதும் ஆட்கொண்டது. இரத்தவெறி பிடித்த அநாகரீகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து வந்த அரேபிய சமுதாயத்தை பரிசுத்த குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்க தான் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்த அறிவுச்சுடராகவும், வீரத்தின் பாசறையாகவும், அறிவு ஆராய்ச்சியின் சுரங்கமாகவும் மாற்றி அமைத்தார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் மேன்மையை எல்லா மட்டத்திலும் அரசியல், பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், கலை, கலாச்சாரம், சமூக நலம், நிர்வாகம், நீதி, வீரம், வாணிபம், விளையாட்டு ஆகிய எல்லா துறைகளிலும் ஒப்புயர்வற்ற மேலான சிறப்புமிக்க ஒரு புதிய உலகை சிருஷ்டித்து அக்கடல் முதல் இக்கடல் வரை, ஸ்பெயின் முதல் சீனா வரை உலகை இஸ்லாமியக் கொடியின் கீழ் கொண்டு வந்தார்கள்.

No comments:

Post a Comment