Wednesday, November 30, 2005

ஓர் வழிப்போக்கனின் புலம்பல்கள்

திருவாளர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் பா. ஜனதா சிறுபான்மை(!) அணியின் தேசிய பயிற்சி முகாமில் பேசிய வித்தியாசமான சில கருத்துக்களும் ஓர் வழிப்போக்கனின் புலம்பல்களும்:

//சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பா.ஜனதா பற்றி காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் தவறாகப் பிரசாரம் செய்து வருகின்றன.//

அப்படியா! சே! ரொம்ப தப்பாச்சே!

//இந்தியா அனைத்துத் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ஜனதா கட்சியின் நோக்கம்.//

அது தான் கடந்த உங்கள் ஆட்சியில் நடந்த சவப்பெடி ஊழல் பற்றி அறிந்த போதே தெரிந்து கொண்டோமே!

//அப்படி இருக்கும் போது, சிறுபான்மையினரின் நலனைக் கருதாமல் இருக்கமாட்டோம்.//

ஓ! உங்கள் குடும்பத்தில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் போன்ற, சிறுபான்மையினரின் நலனிற்காகவே இயங்கும் - சிறுபான்மை அழிப்பு அமைப்புகளைப் பற்றி நன்றாகத் தெரியுமே.

//குறிப்பிட்ட இனத்தை மட்டும் உயர்த்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல.//

காஞ்ஜி மடத்தின் காதுகளில் இது விழவில்லையே? (விழுந்தாலும் பரவாயில்லை. கேட்டால் "மற்ற இனத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல" என்று கூறியதாக கூறி சமாளித்துக் கொள்ளலாம்.)

//உடலில் சிறிய உறுப்புதானே என்று அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் முழுமையான உடல்நலனைப் பெறமுடியாது.//

இது சாகா (தடி, சூலாயுதம், வாள், துப்பாக்கி, குண்டு போன்றவற்றால் சிறுபான்மையினரை பாதுகாக்க(!) கொடுக்கப் படும் பயிற்சி) வகுப்புகளில் சங்பரிவார உறுப்பினர்களுக்கு கொடுக்கப் படும் ஆரோக்கிய ஆலோசனையல்லவா?

//அதுபோல்தான் இந்தியா முன்னேற வேண்டும் என்றால் சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும்.//

உயிரோடு இருந்தால் தானே முன்னேறுவதற்கு!

//பா.ஜனதா பற்றி சிறுபான்மையினரிடம் காணப்படும் தவறான கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்.//

எப்படி?

//இந்தக் கட்சியுடன் சிறுபான்மையினர் இணைந்து செயல்பட வேண்டும்.//

அதற்காக "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எல்லோருக்கும் ஆளுக்கொரு பதவி கொடுக்க முடியுமா?

//அப்போதுதான் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பா.ஜனதா கட்சி முற்படும்.//

ஆகா எப்படிப் பட்ட முற்போக்கான கருத்து. ஒரு நாட்டில் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை இவர்களைக் கண்டு படிக்க வேண்டும். நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் ஒன்று போல் பாவிக்கும் இந்த உயர்ந்த உள்ளம் இங்கு எந்த கட்சிக்கு இருக்கிறது - எங்களுக்கு ஓட்டளித்தால் மட்டுமே உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படுவோம் என்று கூறும் உயர்ந்த உள்ளம்.
நான் இதற்கு தயார். ஆனால் ஒரு நிபந்தனை "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எனக்கும் ஒரு பதவி வேண்டும் - பா.ஜனதா அகில இந்திய தலைவர் பதவி, ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி.(தலையை சொறிந்து கொண்டு ஹி ஹி கூறுவதாக நினைத்துக் கொளுங்கள்)


//சிறுபான்மையினரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஓட்டு வங்கிகளாகத்தான் கருதுகின்றன.//

அப்ப இதற்கு முந்தைய வரியின் அர்த்தம் என்ன? ஓ! இது கோரிக்கைக்ளை நிறைவேற்ற தரப் படும் லஞ்சமா? ஆமாம் நாட்டின் உயிர் மூச்சான ராணுவத்தினரின் இன்னுயிரை இழந்த உடம்பை வைக்கும் சவப்பெட்டி விஷயத்திலேயே லஞ்சம் வாங்கியவர்களாயிற்றே நீங்கள். சரி! சரி! நீங்கள் ஓட்டுக்காக கட்சி நடத்துபவர்களல்ல, ஊழலுக்காக கட்சி நடத்துபவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

//உண்மையிலேயே இந்த மக்கள் மீது இந்தக் கட்சிகளுக்கு கரிசனம் இருந்து இருந்தால் கடந்த 58 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களை முன்னேற்றி இருப்பார்கள்.//

ஆ! உங்களால் இப்படி கூட சிந்திக்க முடியுமா?

//முஸ்லிம், கிறிஸ்தவர்களில் படிப்பறிவு விகிதம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் இன்னும் குறைவாகவே உள்ளது.//

அட இங்கப் பார்ரா! ஆடு நனைகிறதென்று ஓநாய் ...............

//இந்தக் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக இருப்பதில் இருந்து சிறுபான்மை மக்கள் அனைவரும் விடுபட வேண்டும்.//

கண்டிப்பாக சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டிய விசயம் தான். விடுபட்டு பின் என்ன செய்வதாம். ஆங்! நம்ம பழைய சித்தாந்தம். ஓட்டளித்தால் உங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். அல்லது யாருக்கும் ஓட்டளிக்காமல் பேசாமல் இருந்து விட வேண்டும். என்ன ஒரு கரிசனம் சிறுபான்மையினர் மீது!

//இந்தியாவில் 35 சதவீதம் பேர் இன்னும் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள்.//

அது தானே உங்கள் பலம்.

//2 லட்சத்து 60 ஆயிரம் கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதிகள் இல்லை. பீகாரில் 60 சதவீத வீடுகளுக்கு இன்னும் மின்சார இணைப்பு தரப்படவில்லை.//

அப்ப இதெல்லாம் உங்களுக்கும் தெரியுமா? "முஸ்லிம் தீவிரவாதிகளையும்","பாகிஸ்தான் உளவாளிகளையும்" பற்றி மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரி தவறாக நினைக்காதீர்கள் ஒரு கேள்வி - நீங்கள் மத்தியில் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது இந்தியா ஒளி வீசியதாக கூறினார்களே? நீங்கள் ஆட்சியிலிருந்து இறங்கியவுடன் கிராம சாலைகளையும், வீட்டு மின் இணைப்புகளையும் துண்டித்து விட்டார்களோ?

//"கமர்கட்'' மிட்டாய்களை குழந்தைகளிடம் காட்டுவது போல் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தரப் போவதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.//

அது ஏமாற்றத்துடனேயே வளரும் குழந்தை, வளர்ந்த பின் எப்படி தன்னிடம் பரிமாறும் என்பதைக் குறித்து சிந்திக்காத பெற்றோர் செய்யும் தவறு. அக்குழந்தைக்கும் ஒரு எதிர்காலம் உண்டு என்றும், நாளை தமது வயோதிக காலத்தில் தம்மை அதிகாரம் செய்யப் போவது இக்குழந்தை தான் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத இன்றைய அதிகாரத்தில் இருப்பவர் செய்யும் மிகப் பெரிய சந்திப் பிழை.

//நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி செய்யாததை சோனியா செய்யப் போகிறாரா? //

அதானே. செய்து விடுவாரா என்ன? அல்லது நாங்கள் இருக்கும் போது செய்ய விட்டு விடுவோமா என்ன?. வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடப்பாக்க முயற்சித்த போது எங்கள் முழு ஒத்துழைப்பும் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பிய எங்கள் வீர வரலாற்றை அந்தளவுக்கு சோனியா அறியாமலா இருப்பார்?

//எதையாவது கூறி சிறுபான்மையின மக்களை சமாதானப்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.//

அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன் நம்முடைய கோர முகத்தை மறைக்கவேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது கூட, "தவறான இடத்தில் உள்ள சரியான" ஆளான அன்பர் வாஜ்பாய் அவர்களும், தன் தாய் நாட்டில்(பாகிஸ்தான்) போன போது அடக்க முடியாத தாய்நாட்டுப் பற்றில் தன்னை மறந்து உண்மைகளை கூறிய ர(த்)த யாத்திரை விரும்பி அத்வானி அவர்களும் தங்களை உருவாக்கி விட்ட தாய்(ஆர்.எ.எஸ்) சங்கத்தின் நாக்பூர் மாநாட்டில் தாங்கள் ஒரு நாட்டின் முதன்மையான - முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், உலகம் தங்களை உற்று நோக்கும் என்பதை கூட சட்டை செய்யாமல் அரை –டவுசருடன் நின்று உறுதி மொழி எடுத்தது போல் அவ்வபோது தாய் சங்கம் போய் உறுதி மொழி எடுத்துக் கொண்டு நம் நிலைபாட்டில் உறுதியுடன் நிலைத்து நிற்க வேண்டும்.

//இந்துத்துவா என்பது மத ரீதியான அடையாளம் கிடையாது. கலாசார ரீதியான அடையாளம் அது.//

எந்த கலாச்சாரம்? ஆரிய கலாச்சாரமா? கண்டிப்பாக இந்திய கலாச்சாரம் இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!

//மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது.//

இத முதலிலேயே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே. அதற்காக இவ்வளவு சுற்றி வளைக்க வேண்டுமா?

//அப்படி அளித்தால் நாடு மீண்டும் பிளவு பட்டுவிடும்.//

நாடு பிளவு படுமா? அல்லது ஆரிய வந்தேறிகளின் பிழைப்பில் மண் விழுமா? நாட்டை பிளவு படுத்தியவர்கள், பிளவு படுத்துபவர்கள் நாடு பிழவு பட்டு விடும் என்று கவலைப் படுகிறார்கள். எங்கோ உதைக்கவில்லை?

//பெண்களுக்கு அனைத்திலும் உரிமை உண்டு.//

அப்ப ஆண்களுக்கும், அரவாணிகளுக்கும்.?

//நாங்கள் பாலினப் பாகுபாடு பார்ப்பதில்லை.//

மேலே உள்ள கேள்வியை திரும்பப் பெறுகிறேன். அதோடு இனி ஆண்களும், அரவாணிகளும் குழந்தைப் பெற முயற்சிக்க வேண்டும் என்ற கட்டளையை உங்கள் தீர்மானங்களில் சேர்க்க கோரிக்கை வைக்கிறேன்!

//திருமணம், விவாகரத்து, ஒருவனுக்கு ஒருத்தி, சொத்து விவகாரத்தில் சமத்துவம் ஆகியவற்றுக்காக பொது சிவில் சட்டம் தேவை.//

ஒருத்திக்கு ஒருவன் என்பதை சேர்க்கவில்லையே ஏன்? நடைமுறை சாத்தியமில்லாத விஷயமோ?

//மத விஷயங்களில் இந்தச் சட்டம் தலையிடாது.//

அப்ப இந்த சட்டம் இஸ்லாமியர்களைப் பாதிக்காதா? பின் எப்படி அது "பொது" சிவில் சட்டமாகும். சட்டம் பொதுவாக இல்லையெனில் "பொது" என்ற வார்த்தை எதற்காக? எடுத்து விடலாமே? (பாவம் தலைவர், இஸ்லாம் எல்லா காரியங்களுக்கும் முஸ்லிம்களுக்கு தீர்வு கூறுகிறது என்பதை அறியாமல் இந்த வார்த்தையை விட்டு விட்டார்!)

//சிறுபான்மையினரின் மத நம்பிக்கை , சடங்குகள், நடவடிக்கைகள் அனைத்துக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும்.//

மதசார்பற்ற இந்தியா இவ்வுரிமையை இந்தியா சுதந்திரம் அடைந்த போதே இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் கொடுத்து விட்டது. இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி அந்த அடிப்படை உரிமையை 58 வருடங்களுக்கு பிறகு அங்கீகரித்திருப்பதாக கூறுகிறது. என்ன கொடுமையப்பா இது?

//மத விஷயங்களில் நாங்கள் தலையிடமாட்டோம்.//

அப்ப இது வரை தலையிட்டிருந்தீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

//ஆனால் மத மாற்றம் செய்வதை ஏற்க முடியாது.//

எந்த கேடுகெட்டவன் அதைச் செய்கிறான். விஷ்வ ஹிந்து பரிஷத் மற்ற மதத்தினரை ஹிந்துவாக (நிச்சயமாக பிராமணனாக அல்ல மக்களே!) மத மாற்றம் செய்கிறார்களே! அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஓ! அது மதம் மாறியவர்களை தாய் மதத்திற்கு(எது சூத்திரனாகவா) மாற்றுவதல்லவா?

//கிரிக்கெட்டில் அசாருதீன், டென்னிஸ் விளையாட்டில் சானியா மிர்சா ஆகியோரால் நாங்கள் பெருமை அடைகிறோம்.//

எதற்கு? எங்களுக்கு விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்தை "சூதாட்டம்"(மேட்ச் பிக்சிங்) மூலம் கெடுத்ததற்காகவும், ஏற்கெனவே கலை என்ற பெயரில் ஆபாசத்தை கூவி விற்று, இந்நாட்டின் இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல், வக்கிர எண்ணங்களிலேயே ஊறவைத்து நாட்டிற்கு மிகப் பெரிய சேவையாற்றிக் கொண்டிருக்கும் சினிமாத் துறையை மிஞ்சும் அளவில் விளையாட்டுத் துறையையும் ஆக்கியதற்கா? பட்டியலில் தமிழ் நாட்டின் தன்மான சிங்கங்கள் குஷ்பு, சுகாசினி பெயர்கள் விடுபட்டு விட்டனவே! மறந்து விட்டதோ?

//காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்.//

காஷ்மீர் பிரச்சினையில் நடுநிலையாளர்கள் காஷ்மீர் மக்களின் சார்பாக பேசுவதற்கு, காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றதல்ல - அந்நாட்டு மக்கள் இரு நாட்டு அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப் பட்டார்கள் என்பதற்கான ஒரே தெளிவிது. கண்டிப்பாக இச்சட்டம் மாற்றப் பட்டே ஆகவேண்டும்.

ஆமாம் அது என்ன? காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு மாநில அந்தஸ்து. அப்படியெனில் காஷ்மீர் இன்னும் முறையாக இந்தியாவுடன் இணைக்கப் படவில்லையா? எனில் நம் நாட்டு இராணுவம் எதற்காக அங்கு போய் நிற்கிறது? ஏன் நம் பட்ஜெட்டில் பெரும் பங்கு அவர்களுக்கு செலவளிக்க வேண்டும்? ஏன் நம் நாட்டு இராணுவ வீரர்களின் பொன்னுயிர்கள் அனாவசியமாக அங்கு இழக்கப் பட வேண்டும்? என்ன தான் நடக்கிறது நாட்டில்? என்னமோ போ!

//அங்கு யாராலும் இப்போது ஒரு செண்டு நிலம் கூட வாங்க முடியாது.//

அப்படி சட்டம் வைத்திருப்பது நம் இந்திய அரசா? அல்லது காஷ்மீர் அரசா? காஷ்மீர் அரசு எனில், அதை மாற்றும் உரிமை கூட நம் இந்திய அரசுக்கு இல்லையா? இந்திய அரசு எனில், எதற்காக அவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு சட்டம். காஷ்மீரிகளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?(ஹி ஹி நான் சுகாசினி இல்லீங்க! இது சிந்திப்பதற்காகத் தான் - காஷ்மீர் விஷயத்தில் இரு அரசுகள் செய்யும் அநியாயங்களை)

//பா.ஜனதா கட்சி இனி ஆட்சிக்கு வரும்.//

இந்திய மக்கள் கோம்பயர்களாக இருந்தால்.......

//சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதாதான் உண்மையான பாதுகாப்பைத் தரும்.//

இது தான் வசனங்களிலேயே டாப்புங்கோ!
எப்படி? என்று கேட்காதீங்க! பாருங்க - குஜராத்தை. அப்படி சவக்குழியிலும், அகதிகள் முகாமிலும் உண்மையான பாதுகாப்பை நிச்சயம் தருவார்கள்!

Saturday, November 26, 2005

இது தான் பத்திரிக்கை சுதந்திரம்!

அல் ஜசீரா!

ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை!

பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் பிடித்த தொலைக் காட்சி சானல்.

உண்மைகள் உரைப்பவர்களையும், அதற்கு துணை நிற்பவர்களையும் என்று தான் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் பிடித்திருக்கிறது? வழக்கம் போலவே உண்மையை வெளிக் கொணர்ந்த ஒரே காரணத்திற்காக அல் ஜசீரா தொலைக் காட்சி அமெரிக்காவிற்கு "தொல்லைக் காட்சி"யாக மாறிப் போனது. அன்றிலிருந்து இன்று வரை பல இடையூறுகளையும் சமாளித்து நீதிக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கும் அல் ஜசீராவின் இந்த குறுகிய கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமானால் நாம் அதிசயித்து நின்று விடுவோம்.

ஆப்கன் யுத்தத்திற்குப் பிறகு சமாளித்துக் கொண்ட அமெரிக்கா ஈராக் யுத்தத்தின் போது பாக்தாதினுள் நுழைந்த பிறகு, அவர்களின் சிங்கியடி சானல்களைத் தவிர மற்ற எல்லா சானல்களையும் வெளியேற உத்தரவிட்டது. அதையும் மீறி பல யுத்தச் செய்திகளை - அப்பாவி மக்களுக்கு அமெரிக்கப் படையால் இழைக்கப் பட்ட அநியாயத்தை - வெளியிட்ட ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடம் ஆப்கன் யுத்தத்தின் போது தாக்கப் பட்டது போல் தாக்கப் பட்டது. அமெரிக்கப் படையினர் அட்டூளியம் செய்து கொண்டிருப்பதை நேரடியாக ஒளி பரப்பிக் கொண்டிருந்த ஒரு ஜசீரா நிருபர் அமெரிக்க வல்லூறுகளால் தாக்கி கொல்லப் பட்டதை அதே ஜசீரா நேரடியாக ஒளிபரப்பியது.

உலகத்திற்கு ஜனனாயகத்தைப் படிப்பித்துக் கொடுக்க வந்தவர்களாலேயே இந்த ஜனனாயக அத்துமீறல், பத்திரிக்கை சுதந்திரத்தை அடித்து ஒடுக்கும் செயல் நடத்திக் காட்டப் பட்டது. இதனையே மற்றொரு நாடு செய்திருக்குமானால் அதற்கு எதிராக இதே ஜனனாயக காவலன் தலைமையில் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படும் மற்ற ஜனனாயக காவலர்களும் திரண்டிருப்பார்கள்.

என்ன செய்தாலும் அதனை வெளிக்கு கொண்டு வரும் ஜசீராவை எப்படி இத்தனை நாளும் விட்டு வைத்தார்கள் என்று பல முறை நினைத்ததுண்டு. தனக்கு எதிராக நிற்கும் எந்த சக்தியையும் அழித்தே பழக்கப் பட்ட புஷ்ஷிற்கு மற்ற காரியங்களில் இறங்கியது போல் ஜசீராவிற்கு எதிராக இறங்க முடியவில்லை அல்லது அதற்கு எதிராக குற்றங்களை அடுக்க முடியவில்லை(இடையில் உசாமாவிற்கும் ஜசீராவிற்கும் தொடர்புண்டு என்று ஒரு செய்தியை எப்பொழுதும் போல் வெள்ளோட்டமாக விட்டுப் பார்த்தார். அது மற்றவர்களிடமிருந்து எதிபார்த்த ஆதரவைப் பெற்றுத் தரவில்லை).

யோசித்த புஷ் இனி மற்றவர்களின் ஆதரவுடன் அதனை ஒழிப்பது நடக்காத காரியம் என்பதைப் புரிந்து, தனது செல்லப் பிள்ளையின் துணையுடன் ஜசீராவின் எல்லா அலுவலகங்கள் மீதும், கத்தரில் இருக்கும் அதன் தலைமையகம் மீதும் ஒரே நேரத்தில் குண்டு போட்டு ஒழிக்க திட்டமிட்டிருக்கிறார். இது நடந்தது ஒரு வருடத்திற்கு முன். என்ன காரணத்தினாலோ அதனை உடனே நிறை வேற்றவில்லை. அல்லது அதனை நிறைவேற்ற காலம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனை எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிக்கை எல்லா விதமான ஆதாரங்களையும் சேகரித்து இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தது.

பிளைர் 16 ஏப்ரல் 2004 அன்று வாஷிங்டன் சென்றிருந்த போது புஷ் பிளைரிடம் "கத்தரில் இருக்கும் ஜசீராவின் தலைமையகத்தின் மீது குண்டு வீச வேண்டும்" என்று கூறியதாக டெய்லி மிர்ரர் கூறுகிறது.

சுதாரித்துக் கொண்ட புஷ் உடனே பிளேரை பிடித்து உலுக்க தற்போது இங்கிலாந்து அரசாங்கத்தால் இங்கிலாந்து கேபினட் அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் கியோகின் மற்றும் லெயோவின் மீது அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். மட்டுமல்ல தொடர்ந்து இது சம்பந்தமான தகவல் வெளியிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அச்செய்தியை தொடர்ந்து வெளியிட முடியாமல் செய்துள்ளனர்.

பாக்தாதில் அமெரிக்கப் படையினரால் குண்டு வீசி

கொல்லப் பட்ட அல் ஜசீரா நிருபர் தாரிக் அயுப்.

இதிலிருந்து தெளிவாக அல் ஜசீராவைத் தாக்க திட்டமிட்டது தெரிய வருகிறது. மட்டுமல்ல இப்பொழுது, இதற்கு முன் ஏப்ரல் 2003 ல் பாக்தாதில் வைத்து அமெரிக்கப் படையினரால் குண்டு வீசி கொல்லப் பட்ட ஜசீரா நிருபர் தாரிக் அயுபின் மரணத்தின் மீதும், நவம்பர் 2001 ல் ஆப்கன் தலைநகர் காபூலில் ஜசீரா நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது மிசைல் மூலம் தாக்குதல் நடத்தியதிலும் கூறப் பட்ட காரணத்தின் மீது சந்தேகம் வலுக்கிறது.

தான் கூறுவதை மட்டும் வெளியிடும் ஊடகங்களை வளர விடுவதும், உண்மைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்களை அழிக்க முற்படும் இந்த ஏகாதிபத்திய, சர்வாதிகார செயல் பாடு நல்லதற்கல்ல. இப்படியே உண்மைகள் மறைக்கப் பட்டு, அதற்காக பாடுபடுபவர்கள் அழித்தொழிக்கப் படுவதும், அதனைக் கண்டு உலகம் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதும் உலகின் அழிவிற்கே வழி வகுக்கும்.

வாழ்க அமெரிக்க ஜனனாயகம்!

அமெரிக்காவிற்கு என்றுமே எழுதப் படாத ஓர் சட்டம் உண்டு. உலகின் ஒரே வல்லரசாக தான் மட்டுமே விளங்க வேண்டும் என்பது தான் அது. "ஒரு உறையில் இரண்டு கத்தி" இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கமே தான். அதற்கு எந்த கீழ் தரமான வேலையை செய்வதற்கும் அதன் அதிபராக வருபவர்கள் தயங்கியதில்லை.

எதிரியாக நினைக்கும் நாட்டை ஒன்று எலும்புத்துண்டைக் காட்டி தனக்கு விசுவாசமான வளர்ப்பு நாயாக ஆக்கி விடுவார்கள். அல்லது ஏதாவது காரணங்களைக் கூறி அந்த நட்டின் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.(அயல் நாட்டு காரியங்களில் தலையிடக் கூடாது என்ற சட்டம் எல்லாம் அவர்களுக்கு இல்லை!).19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை சோவியத் யூனியனை உடைப்பதற்கு "பனிப் போர்" நடத்தியது இதனடிப்படையில் தான்.

சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கு தன்னால் பாலூட்டி, சீராட்டி வளர்த்து விடப்பட்ட உசாமா என்ற வளர்ப்பு குழந்தை சோவியத் உடைந்து போன பிறகு தன் நெஞ்சிலேயே அது ஏறி மிதிக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. சோவியத் சின்னாபின்னமான பிறகு உலகின் ஒரே வல்லரசு என்று நினைத்துக் கொண்டிருந்த அதன் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது ஒசாமா என்ற அதன் செல்லக் குழந்தை.

20 ஆம் -ணூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகில் அதி வேகமாக வளர்ந்த இஸ்லாத்தைக் கண்ட போது அதற்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது. இனி தன் இடத்தை பிடிக்க ஒன்று வரும் எனில் அது நிச்சயமாக அமைதிப் புரட்சியின் வழி முன்னேறும் இஸ்லாமாகத் தான் இருக்கும் என சரியாக கணித்த அது அன்றிலிருந்து இஸ்லாத்தினை அழிப்பதற்கான எல்லா வழிகளையும் ஆராயத் தொடங்கியது.

அதில் மிக இலகுவான வழியாகத் தோன்றியது தான், தான் ஏற்கெனவே உருவாக்கி விட்டு தன் மார்பில் ஏறி குதித்துக் கொண்டிருக்கும் செல்லப் பிள்ளையான உசாமாவைப் பயன்படுத்திக் கொள்வது. ஆம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தான் அளிப்பதை மட்டும் செய்தியாக வாந்தியெடுக்கும் சில ஊதுகுழல் ஊடகங்களை வைத்துக் கொண்டு மிகச் சரியாக ஓங்கியடித்தது அமெரிக்கா.

கை மேல் பலன் மிக எளிதில் கிடைத்தது. விளைவு ஆப்கன், ஈராக் யுத்தங்கள். அது மட்டுமல்ல ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டத்துடன் கல்லெறிந்த அமெரிக்காவிற்கு ஒரே கல்லில் மூன்று நான்கு மாங்காயாக கனியத் தொடங்கியது. துவண்டுக் கிடந்த பொருளாதாரம் புதிதாக உற்பத்திச் செய்த ஆயுதங்களைப் பரிசீலனையில் செய்துக் காட்டி மற்ற நாடுகளுக்கு விற்று நிமிர்த்திக் கொண்டது. போதாததிற்கு எண்ணெய் வேறு.

இதில் பரிதாபகரம் என்னவெனில் இவ்வளவு மறைமுக திட்டங்களை வைத்துக் கொண்டு "தீவிரவாதத்திற்கு எதிரானப் போர்" என்ற முகமூடியுடன் களத்தில் இறங்கிய அமெரிக்காவிற்கு நடுநிலையாக சிந்திக்க வேண்டிய, நீதிக்கு துணை நிற்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் அதனுடைய வஞ்சக எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் ஆமாம் சாமி போட்டு அது செய்த அக்கிரமங்களுக்கு துணை நின்றது தான். குறைந்த பட்சம் "சோவியத்திற்கெதிராக நீ வளர்த்த உன் செல்லப் பிள்ளைத் தானே உசாமா" என்ற ஓர் சாதாரண எல்லாருக்கும் தெரிந்த கேள்வியைக் கூட அது கேட்க வில்லை.

ஆப்கானுக்கு எதிரான யுத்ததின் போது "உசாமாவை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் நோக்கம்; அது வரை யுத்தம் முற்று பெறாது" என்று கூறி ஆரம்பித்த அமெரிக்கா தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறங்கும் வரை தனது எல்லாவித ஆயுதங்களையும் பரிசீலித்து விட்டு, தாலிபான்கள் ஆட்சியை விட்டு இற்ங்கி உசாமாவைப் போல் ஒளிந்து கொண்டவுடன் அங்கு தனக்கு ஓர் பொம்மையை உட்கார வைத்ததோடு தனது போரை நிறுத்திக் கொண்டது.

உசாமா எங்கே? இன்று வரை கேள்விக்கு பதிலில்லை. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் கண்காணிக்கும் விதத்தில் பூமிக்கு வெளியே சாட்டிலைட்களை நிறுவி உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு சாதாரள அதுவும் தன்னால் வளர்த்தி விடப் பட்ட ஒரு மனிதனை பிடிப்பது முடியாத காரியமா என்ன? நிச்சயம் முடியும். ஆனால் அதுவல்லவே அவர்களது நோக்கம்.

எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அது நிறைவேறியவுடன் வெளியேறினார்கள் அவ்வளவே. இந்த உசாமா உயிரோடு இருக்கும் வரை அமெரிக்காவிற்கு அது இலாபமே! மற்றொரு சமயம் வேறொரு நாட்டிற்கெதிராக உபயோகப் படலாம். நம் நாட்டு அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை தேர்தலுக்குப் பின் அவர்கள் மறப்பது போல், அவர்கள் செய்யும் ஊழல்களை தேர்தல் நேரத்தில் மக்கள் மறப்பது போல் எந்த நோக்கத்தைக் கூறி ஆப்கன் மீது அமெரிக்க போர் தொடுத்ததோ அதனை உலகமே மறந்தது. இப்பொழுதும் இந்த பரிதாப முஸ்லிம் உலகிற்கு இது உறைக்க வில்லை.

எண்ணையில் கண்ணை வைத்து அடுத்து ஈராக்கிற்கு ஓடியது அமெரிக்கா!. இப்பொழுது கூறிய காரணம்: "சதாமிடம் உயிர் கொல்லி ஆயுதங்கள் உள்ளன; அடிமையாக வாழும் ஈராக் ஜனங்களுக்கு சுதந்திரம்"; இந்த நிமிடம் வரை இந்த இரண்டுமே நடக்கவில்லை. என்ன நோக்கத்திற்காக வந்ததோ அந்த நோக்கம் நல்லமுறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஆம் ஈராக் ஜனதைக்கு சுதந்திரம் என்று கூறி இருந்த சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கியது.

தினமும் நூற்று கணக்கான அப்பாவி மக்கள் "தீவிரவாதி" என்ற பெயரால் அமெரிக்க கூட்டுப் படையினராலும், "தேச விரோதி" என்றப் பெயரால் சுதந்திரப் போராளிகளாலும், யாருக்கு அதிகாரம் என்ற பெயரில் மத மௌடீகவாதிகளாலும், வீடு பற்றியெரியும் போது அதில் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளாலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லோருடைய கவனமும் இங்கு இருக்க தான் நினைத்து வந்த எண்ணையில் சரியாக கண்ணை வைத்து காரியங்களை ஆற்றிக் கொண்டிருக்கிறது உலகின் அமைதி விரும்பி.

அமெரிக்காவின் இந்த அதிகார வெறியில் இது வரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தோமானால் உசாமாவும், ஹிட்லரும், சதாமும் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எனினும் தற்போதும் அமெரிக்கா தான் மக்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குகிறது!!! அது போன்ற நடுநிலையான நாடு உலகில் இல்லை!!! வாழ்க அமெரிக்க ஜனனாயகம்! வாழ்க அமெரிக்க சுதந்திரம்! வாழ்க அமெரிக்கா!

Monday, November 21, 2005

சட்டங்கள் ஆள்வதும், பட்டங்கள் செய்வதும்............. எப்பொழுது?

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் மனித குலம் எவ்வளவு தான் வளர்ச்சியடைந்திருந்தாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவது மட்டும் இன்று வரை குறைந்த பாடில்லை. எதில் சமத்துவம் வேண்டுமோ அதைப் பற்றி பேசாமல் எதில் சமத்துவம் காண்பித்தால் பெண்ணினம் சீரழிக்கப் படுமோ அதைக் கூறி, ஆண் பெண் இருபாலரும் உடல் ரீதியாக ஒரே தன்மையினரல்ல என்பதை கண்டுகொள்ளாமல் எங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் கலந்துறவாட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளனரோ அங்கெல்லாம் பெண்கள் ஏதாவதொரு முறையில் கொடுமைப் படுத்தப் படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமிருந்து மானத்தைக் கருதி பெரும்பாலான கொடுமைகள் வெளிப்படுத்தப் படாமல் மறைக்கப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இதில் துணிச்சலுள்ள சில பெண்களால் எப்பொழுதாவது சில விஷயங்கள் வெளிப்படுவதுமுண்டு. இவ்வாறு கூறும் பொழுது சில படித்த முற்போக்குவாதிகளாகவும், பெண்ணியவாதிகளாகவும் தன்னை காட்டிக்கொள்பவர்கள் உடனே இதற்கு எதிராக களமிறங்குவதும் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடும் போது அதற்கு ஏதாவது நொண்டி காரணங்களை கூறுவதும் வாடிக்கை.

அதில் முக்கியமாக பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதற்குக் காரணம் படிப்பறிவின்மையும், முற்போக்கு மனப்பான்மையில்லாததுமே என்று சில படித்த முற்போக்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிய அறிவு ஜீவிகள் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட படித்த முற்போக்கு அறிவு ஜீவிகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதன்மையானதும் அறிவுஜீவிகளும், முற்போக்குவாதிகளும்(லெஸ்பியனுக்கு முதலாவதாக இயக்கம் கண்ட மாநிலம்) நிறைந்த கேரளாவில் சமீபத்தில் வெளிப்பட்டு தற்போது கேரளாவையே கலக்கிக் கொண்டிருக்கும் செய்தியை அப்படியே கீழே தருகிறேன்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்வி பள்ளியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த சுதி என்ற மாணவி சக மாணவர்களால் ராக்கிங் என்ற போர்வையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ரஞ்சித், ஆஷ்லி வர்கீஸ் என்ற 2 மாணவர்களும் சம்பவம் குறித்து தெரிந்திருந்தும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த குற்றத்திற்காக பள்ளி பெண் முதல்வர் மதியம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பள்ளி, தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மிகவும் கொடூரமான முறையில் ராக்கிங் நடந்து வந்துள்ளதாக மாணவ - மாணவிகளின் பெற்றோர்களே கண்ணீர் மல்க கூறியுள்ளனர். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்து பள்ளியில் நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி உயரதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்களும் கண்டும், காணாமலும் இருந்து விட்டனர். வருடந்தோறும் பல மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டிய பிறகு, ராக்கிங் கொடுமையை தாங்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.

இப்படி மாணவர்களின் ராக்கிங் கொடுமை ஒருபுறமென்றால் மறுபுறம் இந்தப்பள்ளியில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக கூறி ஆசிரியர்களே மாணவிகளுக்கு …செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இறுதி தேர்வில் செய்முறை தேர்வுக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் அந்தந்த ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் நினைத்தால் மதிப்பெண்களை கூட்டவோ, குறைக்கவோ முடியும். இந்த ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு பல ஆசிரியர்கள் அப்பாவி மாணவிகளை தங்களது ஆசைக்கு இணங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. …செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் வேண்டுமா? தனியாக என்னை வந்து பார்! என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் கூறுவார்களாம்.

எதுவுமே தெரியாத அப்பாவி மாணவிகளும் ஆசிரியரை சென்று பார்த்தால் தன்னுடைய அறைக்கு வரவழைத்து பிறகு மிரட்டி தனது பசியை தீர்த்துக்கொள்வார்களாம். மிரட்டலுக்கு பணியாவிட்டால் அந்த தேர்வில் பெயில்தான். இப்படி ஏராளமான மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கொடுத்துள்ள செக்ஸ் டார்ச்சர் இப்போது வெளிவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி சில மாணவிகள் தங்களை ஆசிரியர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி தக்க ஆதரங்களுடன் துணைவேந்தரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு மாணவிகளின் புகார் உண்மைதான் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோட்டயம் எஸ்.பி.யிடம் புகார் செய்ய அறிவுறுத்தி பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.யிடம் புகார் செய்ய பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் சில உயர்மட்ட அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பு இருந்தது தான்.

இதன் பிறகும் வழக்கம்போல் அந்த ஆசிரியர்கள் தங்கள் …விளையாட்டுக்களை! தொடர்ந்துள்ளனர். பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவாதத்தோடு அந்த விவகாரம் முடிந்து போனது.

மாணவி சுதி கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு பேபி குரியன், கிரண் என்ற 2 ஆசிரியர்களை பல்கலைக்கழகம் சஸ்பெண்டு செய்தது. ஆனால் அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


முதலில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு வெறிபிடித்த ஆண்கள் மனதில் அந்த சிந்தனையை தூண்டாமல் இருக்க பெண்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இஸ்லாம் பெண்களுக்கு உடலை மறைக்கும் படி அறிவுறுத்துகிறது! இதனை அனுபரீதியாக உணர்ந்து கூறியவர்கள் பலபேர் உண்டு.

பல சரித்திரம் படைப்பதற்கு நல்ல பெண்ணாக வாழ்ந்தால் முடியாது என்ற கருத்துடைய சானியாவையும், கர்ப்பப்பை சுதந்திரத்தை விரும்பும் தஸ்லீமாவையும் போன்றவர்கள் இதற்கு விதி விலக்கு - இப்படிப் பட்ட எண்ணமுடையவர்கள் தனுடலை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதும், இவர்களைப் போன்றவர்கள் தான் இப்படிப் பட்ட ஆண்களுக்கு இடையில் புழங்குவதற்கு அருகதையுடையவர்கள் என்பதும் என் கருத்து - ஏனெனில் அவர்களுக்குத் தான் அதெல்லாம் ஒருப் பிரச்சினையே இல்லையே.

எவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தோன்றுகிறதோ, எவருக்கு மற்றவர் தன்னை கண்ணியமாக பார்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அவர்களையே இஸ்லாம் தன்னுடைய உடலை மூடச் சொல்கிறது.

இதை அனுபவத்தில் உணர்ந்த பிரபல கேரள பெண் எழுத்தாளர் இஸ்லாத்தை ஏற்றபிறகு (இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு தஸ்லீமாவின் கருத்துடைய பல நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், "நான் இப்பொழுது பாதுகாப்பாக உணர்கிறேன்; பர்தா எனக்கு கண்ணியம் வழங்கியுள்ளது;".

இதை இஸ்லாம் கூறினால் அது தவறு. அதையே அண்ணா பல்கலைக் கழகம் கூறினால் அது சரி. என்ன ஒரு கண்ணோட்டம்.

அதுபோல் இப்படிப்பட்ட கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்(அதுவும் இஸ்லாம் கூறிய முறைப்படி தன்னுடலை வெளிக்காட்டாமல் வாழும் பெண்களிடம் கொடுமைப் புரியும் காமக்கொடூரர்களை) என்று இஸ்லாம் கூறினால் அது ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமற்ற செயல்.

அதுவே (தவறு செய்ய எல்லா சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சூழலில்) இத்தவறு செய்யும் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்க வழி செய்யும் படி சட்டமியற்றப் படவேண்டும் என்று திரு. அத்வானி அவர்கள் கூறினால் அது சரி. என்ன மனிதர்கள் ஒன்றுமே புரியவில்லை!

Saturday, November 19, 2005

நாடு முன்னேற - ஒரு சுய பரிசோதனை!

நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவரா நீங்கள்?

எனில் உங்களுக்கொரு சவால்! தமிழ்நாட்டு மந்திரி சபையில் இருந்த, இருக்கின்ற சில மந்திரிகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு மந்திரியின் பெயர்களின் மீதும் அழுத்தி அவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக எவ்வாறெல்லாம் கஷ்டப் படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது மட்டுமே. பின்னர் இவற்றில் எந்த மந்திரியின் செயல் உங்களுக்கு பிடித்துள்ளதோ அவருக்கு உங்கள் ஆதரவினை பின்னூட்டம் மூலம் குறிப்பிடுங்கள்.

உங்களில் எத்தனை பேர் நம் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் என்பதை அறியும் சிறு முயற்சியே இது!.

திரு. அன்வர் ராஜா

திரு. தனபால்

திரு. ஜீவானந்தம்

திரு. ஜெயக்குமார்

திரு. பாண்டு ரங்கன்

திரு. பன்னீர் செல்வம்

திரு. பொன்னையன்

திரு. செம்மலை

திரு. சண்முகநாதன்

திரு. தம்பி துரை

திரு. வைத்தியலிங்கம்

திரு. வளர்மதி

திரு. வேலுச்சாமி

உங்களுக்கு பிடித்த மந்திரியின் உழைப்பினை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கும் முன் இப்பதிவினுள் கடந்தவர்களைப் பற்றிய ஓர் சிறு கண்ணோட்டம்:

1. மேலோட்டமாக பார்வையிட்டவர்கள் :- சுற்றுலாப் பயணிகள்!

2. ஒன்றிரண்டை திறந்து பார்த்து விட்டு இவனுக்கு வேற வேலையே இல்லை என்று முடித்துக் கொண்டவர்கள் :- இவ்வாறு நாட்டுக்காக குறுக்கு முறிந்து வேலைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் வாழவைக்கும் அப்பாவி குடிமக்கள்!

3. அனைத்தையும் பொறுமையுடன் பார்த்து விட்டு மவுனமாக செல்பவர்கள் :- வெள்ளுடை தரித்த கனவான்கள்(சாக்கடை தன் மீது தெறிக்காமல் கவனமாக இருப்பவர்கள்). இவ்வாறு நாட்டுக்காக குறுக்கு முறிந்து வேலைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் வாழவைப்பதில் இவர்களுக்கு சமப் பங்குண்டு!.

4. அனைத்தையும் பொறுமையுடன் பார்வையிட்டு பிறந்த நாட்டின் மீதுள்ள அக்கறையால் இந்த அவலமான நிலைக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு குறைந்த பட்சம் இப்பதிவினையாவது அனைவருக்கும் தெரிய வைக்கலாம் என்ற நோக்குடன் "+" குறியினை அழுத்தியும், பின்னூட்டமும் இடுபவர்கள் :- வேறு வேலையில்லாத சோம்பேறிகள், பயங்கரவாதிகள், நாட்டைத் துண்டாட நினைப்பவர்கள், அரசைக் கவிழ்க்க சதி செய்பவர்கள் etc....

5. இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள் :- நாட்டில் நடக்கும் அவலங்களை கண்டு மனம் வெம்பி அதனை மாற்ற என்னேரமும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் மட்டுமே!

ஆகா படம் காட்டுறாங்க!

என்ன தான் நடக்குது .......... நடக்கட்டுமே!

பிறந்த வீட்டுக்கு சீமந்தம் கொண்டு வந்த செல்வ மகளுக்கு பிறந்த வீடு எடுத்த ஆரத்தி விழாவினை அவர்களுடைய பிரச்சார தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள்.

மொத்த திரையுலகமும் திரண்டு வந்து (தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாலும் கூட காப்பாத்த முடியாது என்று தீர்க்கதரிசனம் உரைத்த "சூப்பர்!!!!" நடிகர் உட்பட) அடக்க முடியாத ஆனந்தத்தில் தன்னிலை மறந்து வாயில் வந்ததையெல்லாம் கூறி "அன்னையைப்" பாராட்டி நன்றி கூறிய நிகழ்ச்சியை உள்ளம் புழகாங்கிதமடைய யான் கண்டு மகிழ்ந்ததை "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் பரந்த நற்மனப்பான்மையில் என் மனதை விட்டு நீங்காத சரித்திரத்தில் பொறிக்கப் பட வேண்டிய சில காட்சிகளை இங்கு தருகிறேன்.

படித்து விட்டு தமிழ் நாட்டின் தலை எழுத்துக்காக இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமாவது உதிருங்கள்.

"அம்மையாருக்கு" பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப் பட்டது. இதை "தங்கத் தாரகை", கலைத்தாய்", "புரட்சித் தலைவி" அவர்களுக்கு பூரணக் கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்த காட்சி கண்கொள்ளா "திருக்காட்சி"யாக இருந்தது என பிரச்சார தொலைக்காட்சி வர்ணித்தது.

நன்றி கூற வந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் செல்வியின் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் அவரை அழைக்கும் பிரபலமான வார்த்தையைக் கூறி (அம்மா) அழைத்து நன்றி கூறினர்.

அவற்றில் புதிதாக என் மனதைக் கவர்ந்த சில சிங்கிகளும், டுங்கிகளும்:

* எஸ்.வி.சேகர் -- நம்முடைய கலைத் தாய்

* கே.எஸ். ரவிக் குமார் -- திரை உலகின் "பிரம்மா" "நம்ம அம்மா"

பங்சிங் டயலாக் : தியேட்டரெல்லாம் இப்போது "ஜெ ஜெ" வென்று கூட்டம்.

* வரவேற்பு பாடலில் டச்சிங் வார்த்தைகள் : கோட்டைக்கு ராணி நீங்க தாங்க, வெற்றித் தங்கம், போயஸ் தோட்ட அன்னை...

* ஒய். ஜி. மகேந்திரன் -- அன் பாரலல் ஸ்டார் (Un Parallal Star)

* விவேக் -- தமிழ் தாய் வாழ்த்து - எங்கள் தாய்க்கு வாழ்த்து

கவி(ழு)தை : சினிமா என்னும் குழந்தை பசித்த போது விசித்து அழுதது, அய்யோ என்றது, அந்தோ எந்தரற்றியது, குய்யோ முறையோ என்று கதறியது. கவனிப்பார் யாருமில்லை. முதல் முறையாக "அம்மா" என்றழைத்தது அடுத்த நொடியில் அம்மா மடியில் - லேட்டாக கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுத்திருக்கிறீர்கள்.

அழைப்பு : ஒளி விளக்கே, கலங்கரை விளக்கே, சேலைக் கட்டிய சிங்கமே, தாயே, தருமமே

சென்டிமென்ட் : பிறந்த வீட்டுக்கு புகுந்த வீட்டிலிருந்து சீமந்தம் கொண்டு வந்த தாயே!

புதிய விளக்கம் : சி.எம்.(CM) சினிமா மினிஸ்டர்(Cinema Minister!!!!).

வாக்குறுதி : கலையுலகுக்கு நீங்கள் அளித்தீர்கள் O2(ஆக்சிஜன்), அதனால் உங்களுக்குத் தான் எங்கள் O2(ஓட்டு).

பட்டம் : தமிழ் நாட்டுக்கு நீங்கள் புரோகிரஸ் கார்ட்(Progress Card).

* எஸ்.வி. சேகர் -- "காந்தின்னா அவர் ஒருவர் தான் காந்தி, அம்மான்னா அவர் ஒருவர் தான் அம்மா"

புதிய விளக்கம் : கேள்வி - தமிழ் மொழி, செம்மொழிக்கு உதாரணம்? பதில் - புதுசு கண்ணா புதுசு - தமிழ் மொழி
பெஸ்ட் கண்ணா பெஸ்ட் - செம்மொழி
கேள்வி - என் மகன் எப்பவும் பொய் சொல்கிறானே?
பதில் - சன்னுன்னா அப்படித்தான்! கேள்வி - சும்மா என்னிடம் சண்டைக்கு வருகிறானே?
பதில் - அம்மா சன்னுக்கு பயப்படலாமா? சன் எப்பவுமே அம்மாக்கு கீழே தான்.

* வடிவேல் : விட்டால் ஒடிந்து விழுந்து விடுவதைப் போல் ஆயிரம் அம்மாக்களை விழித்து கூனி குறுகி ஏங்கி அழுது தரையில் புரண்டு ஒரு வேண்டுதலை வைத்தார் - பார்த்திபனிடமிருந்து தன்னைக் காப்பாற்ற - படு அருவருப்பாக இருந்தது - தன்னை ஒரு மனிதப் பிறவியாகவே நினைக்காமல் அப்படி கூனி குறுகி நின்றார்.

ஒரு பாடல் வேறு - லட்சிய தேவதையே, வெற்றி நாயகியே, தங்கத் தாரகையே, சிங்கத் தாரகையே....

* பால சந்தர் - இது காணிக்கை விழா , அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

* முரளிதரன் - இது தாய்க்கு குழந்தைகள் பாடும் குழலோசை, இமயத்துக்கு கோடம் பாக்கம் செய்யும் காணிக்கை, புற நானூற்று புரட்சித் தாய், சென்னைக்கு அன்னை, தொழுகிறோம், பூஜிக்கிறோம், அன்னையே, சரித்திரமே!, நடமாடும் தெய்வமே!!!????

* ராதா ரவி - தாயின் தாழ் பணிந்து, பாதங்களைத் தொட்டு வணங்கி, கடவுள் நீங்கள், உங்களால் மட்டும் தான் முடியும், தெய்வம்மா நீங்க, உங்களை நம்பினவர்கள் கெட்டதில்லை, நீங்கள் பார்க்காத கடவுளுக்கு சமம், கிண்டல் பண்றாங்க அம்மா!

* எஸ். ஏ. சந்திர சேகர் - புரட்சித் தலைவி அம்மா, தாயுள்ளத்தின் உதாரணம்

* மனோரமா - தமிழகத்தின் முடிசூடா ராணி, தென்னாட்டின் ஜான்சி ராணி, பொன்மன செல்வி, பூமாதேவி(!), சத்தியபாமா(பூமா தேவி) நரகாசுரனை கொன்றது போல் நவீன நரகாசுரன் வீரப்பனை(ஆமாம் வீரப்பன் எப்பொழுது, தான் தன்னுடைய அன்னையால் தான் சாக வேணும் என்று வரம் வாங்கினான்?) கொன்ற பூமா தேவி!.

இன்னும்......... விசிய காந்த், ரசினி காந்த், கமல், எஸ்.எஸ். சந்திரன், பார்த்திபன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உலகத்தில் ஒரு நாட்டிலும் தங்களுடைய முதலமைச்சருக்கு இப்படி ஓர் நன்றி அறிவிப்பு விழாவை யாரும் நடத்தியிருக்க மாட்டார்கள். கண்டிப்பாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் - தமிழ் சினிமாத் துறையால்.

கடைசியாக "தாயின்" சபதம் - சினிமா அழிவதைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்!.

கண்ணீர் வராதவர்கள் ஒரு முறை கூட மனோரமாவின் டயலாக்கை படித்து விட்டு வீரப்பனை அதிரடிப் படையினர் கொன்ற காட்சியினை நினைவுப் படுத்திப் பாருங்கள். கண்களில் தானே கண்ணீர் வரும்(சிரிப்பை அடக்க முடியாமல்).

Tuesday, November 15, 2005

நெஞ்சு பொறுக்குதில்லையே.....!

நமது பிரதமர் "இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் கிராமப் புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. கிராமப் பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமக்கு முன்பு உள்ள மிகப்பெரிய சவால். கடந்த நுற்றாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஆராய்ந்தால், பெரிய நகரங்கள் அடைந்த வளர்ச்சியிலிருந்து கிராமப்புற இந்தியா வெகுதொலைவில் உள்ளது." என்று கூறியிருக்கிறார்.

மிகுந்த ஆதங்கத்துடனும் கவலையுடனும் இவ்வாறு தெரிவித்த பிரதமர் இந்நிலைமையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் எனவும் தெளிவாக கூறினார். அது என்ன?.

"மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாநில அரசுகளுக்குத் தான் உண்மையான பொறுப்பு உள்ளது(அதாவது மத்திய அரசுக்கு உண்மையான பொறுப்பு இல்லையாம்). அனாவசியமான மானியங்களை கட்டுப்படுத்த வேண்டும். சொற்ப அளவிலாவது அரசுக்கு வரி செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்."

இது தான் அந்த அபூர்வமான அருமையான ஆலோசனை!

பின் எதற்காக மத்திய அரசு? அப்படியெனில் மக்கள் இதுவரை குறைந்த அளவில் கூட வரி செலுத்துவதில்லையா என்றெல்லாம் மடத்தனமான கேள்விகளைக் கேட்கக் கூடாது!

சரி மக்கள் ஒழுங்காக குறைந்த அளவிலாவது(!!!) வரி செலுத்தினால் அப்பணத்தைக் கொண்டு எவ்வாறெல்லாம் கிராமப் புறங்களை முன்னேற்றுவார்கள் என்பதைப் பார்க்க வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

அபு சலீம் தொடர்பான சில புள்ளி விவரங்கள்:

* மும்பை குண்டு வெடிப்பு, ஆயுத கடத்தல், ஆயுத சப்ளை, மிரட்டல் என்று 54 வழக்குகள் தொடர்பாக 12 ஆண்டுக்கு முன்பில் இருந்தே தேடப்பட்டவன் அபு சலீம்.

* கடந்த 2002ம் ஆண்டு, போர்ச்சுகல் நாடு, அபு சலீமையும், மோனிகா பேடியையும் கைது செய்தது. போலி பாஸ்போர்ட் வழக்கு உட்பட சில வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்தது.

* போர்ச்சுகல்லில் சிறையில் அடைக்கப்பட்ட சலீம் பற்றி தகவல் தெரிந்ததும், துதரகம் மூலமும், சட்ட ரீதியாகவும் போர்ச்சுகல் அரசை மத்திய அரசு அணுகியது.

* ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு உள்ளதால், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வாதிட்டு, மீட்டுச் செல்லும் படி போர்ச்சுகல் அரசு கூறிவிட்டது. அதன்படி, போர்ச்சுகல் கோர்ட்டில் வழக்கு போட்டது சி.பி.ஐ.

* போர்ச்சுகல் கோர்ட்டில் வாதாட, சீனியர் வக்கீல்களை அணுகியது சி.பி.ஐ. அந்த நாட்டின் நடைமுறைப்படி, மேல் கோர்ட்களில் வாதாடும், சீனியர் வக்கீல்களுக்கு மணிக்கு ரூ. 10 லட்சமும், ஜூனியர் வக்கீல்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பீஸ் என்று கூறப்பட்டது.

* லிஸ்பனில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வாதாட மட்டும், இந்திய வக்கீல்களை அழைத்து வருவது என்று சி.பி.ஐ., முடிவு செய்தது. அதன்படி, இந்தியாவில் இருந்து இரு வக்கீல்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் செலவாக, ஒரு மணி நேர வாதத்துக்காக, ஒரு வக்கீல், இரு உதவியாளர்கள் செலவு என்று பார்த்தால், மணிக்கு ரூ. 10 லட்சம் செலவானது. லாட்ஜ் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் அடக்கம்.

* ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் வாதம் நடந்தது. அதனால், 40 லட்சத்தில் இருந்து 60 லட்சம் ரூபாய் வரை செலவானது.

* கீழ்க்கோர்ட்டில் 15 விசாரணை அமர்வுகள் நடந்தன. அதன்படி பார்த்தால், ஒரு நாளைக்கு அதிகபட்ச செலவு ரூ. 60 லட்சம் என்ற வகையில், 15 நாளுக்கு ரூ. ஒன்பது கோடி செலவாகியது.

* இதைத் தொடர்ந்து, போர்ச்சுகல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாட, ஒரு சீனியர் போர்ச்சுகல் வக்கீல், இரு ஜூனியர் வக்கீல்கள் அமர்த்தப்பட்டனர். இந்த வகையில், மணிக்கு ரூ. 30 லட்சம் செலவானது.

* தினமும் ஆறு மணி நேரம் வாதம் நடந்தது. இப்படி ஆறு அமர்வுகள் நடந்தன. இப்படி பார்த்தால், ரூ. 1.80 கோடி செலவு.

* ஆறு அமர்வுகளுக்கு தலா ஆறு மணி நேர செலவுகளை சேர்த்தால் மொத்தம் போர்ச்சுகல் வக்கீல்கள் மூவருக்கும் மொத்த செலவு ரூ. 10 கோடியே 80 லட்சம்.

* சுப்ரீம் கோர்ட்டை தொடர்ந்து மனித உரிமை கோர்ட்டில் வாதாடப்பட்டது. அங்கும், போர்ச்சுகல் வக்கீல்கள் மூவரும் அமர்த்தப்பட்டனர். அங்கு, ஒரு நாளைக்கு ரூ. 1.80 கோடி என்று, நான்கு அமர்வுகளுக்கு மொத்தம் 7.20 கோடி ரூபாய் செலவானது.

* மனித உரிமை கோர்ட்டில் ஜெயித்ததும் தான், போர்ச்சுகல் பார்லிமென்ட்டில், கைதிகள் பரஸ்பரம் ஒப்படைக்கும் மனு கையெழுத்தானது. அதன்படி தான் அபு சலீம் ஒப்படைக்கப்பட்டான்.

* போர்ச்சுகல்லுக்கு சென்று அபு சலீம் விவகாரத்தில் விசாரணை செய்ய 20 பேர் கொண்ட சி.பி.ஐ., குழு சென்றது. அவர்கள் அடிக்கடி சென்று வந்தனர். அவர்கள் செலவு மட்டும் மூன்று கோடி ரூபாய்.

* இத்தனைக்கும் மேலாக, எல்லாம் முடிந்து அபு சலீமை தனி விமானத்தில் அழைத்து வர ஆன செலவு என்ன தெரியுமா? 75 லட்சம் ரூபாய். போர்ச்சுகல் நாட்டு லிஸ்பன் விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு மேற்கொண்ட விமான போக்குவரத்து செலவு தான் இது.

இங்கே செலவளித்திருக்கும் இவ்வளவு பணமும் யார் அப்பன் வீட்டு பணமாம். ஒரு படத்திற்கு அங்கும் இங்கும் கையை காலை உதறுவதற்கு 1 கோடி ரூபாய் வாங்கும் "சூப்பர்(!)" நடிகர் அன்பளிப்பாக தந்ததோ அல்லது ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து பிடித்தெடுத்த கறுப்பு பணமோ இல்லையே?

இனி இவ்வளவு பணம் தண்டத்திற்கு செலவழித்து பிடித்துக் கொண்டு வந்த இவன் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் அவனுக்கு அதிக பட்ச தண்டனையையும் தரக்க்கூடாதாம். பின் எதற்காக இவ்வளவு பணம் செலவளித்தார்கள். ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அப்படியெனில் கிராமப் புறங்கள்? சே! சே! அதை மறக்க முடியுமா?

அவைகள் அல்லவோ நாட்டின் முதுகெலும்புகள். எனவே......

மக்கள் சிறிது கூட வரி செலுத்தட்டும். கண்டிப்பாக கிராமப் புறங்கள் முன்னேறும்!

Sunday, November 13, 2005

திருப்பதியில் பூவுக்கு வேட்டு!

திருமலை ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் பொழுது பெண்கள் தலையில் பூவைத்து செல்வது வழக்கம்.

ஆனால் இப்போது கோவிலுக்குள் செல்லும் போது பெண்கள் தங்களது தலையில் பூ வைக்கக்கூடாது. பெண்கள் பூவைக்க கோவில் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது. இதைப்போல திருமலையில் யாரும் பூவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழ் திருப்பதியில் அலிபிரி சோதனை சாவடியிலேயே அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு யாராவது பூ வைத்திருந்தால். அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள்.

ஆகம விதிப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இன்று (திங்கட் கிழமை) முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது பெண்கள் யாராவது தலையில் பூ வைத்திருந்தால் அவற்றை எடுத்து விட்டு கோவிலுக்குள் செல்லும்படியும் கோவில் ஊழியர்கள் அறிவுறுத்துவார்களாம்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக திருமலை முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் `மைக்' மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பூக்களும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பக்தி என்ற பெயரில் கூறினால் பாமரர்கள் எதையும் ஏற்பார்கள் என்பதற்காக இப்படியுமா?
தேவைகள் ஏதும் அவசியமில்லாத கடவுளுக்கு தேவைகளை உருவாக்குவது இந்த மனிதர்கள் தான் என்பதை மக்கள் எப்போது புரியப்போகிறார்களோ.

Saturday, November 12, 2005

கஷ்டகாலம்!

நடிகர் சத்ருகன் சின்கா தனியார் டெலிவிஷனுக்கு நவ.12 அன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரிசபையில் குற்ற பின்னணி கொண்ட மந்திரிகள் பிரச்சினை பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி பேசுவதற்கு முன்பு, நீங்கள் நன்றாக சிந்தித்து பார்க்கவேண்டும். பா. ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்துவிட்டு, நாளை அவர்கள் வெற்றி பெற்று மந்திரிகளாகிவிட்டால், குற்ற பின்னணி உள்ள மத்திய மந்திரிகள் பற்றி பாராளுமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி பேச முடியும்?

நான் இப்படி கூறுவதற்காக என்னை கட்சியை விட்டு தூக்கி எறிந்தால், நான் வெளியேற தயார்.

இரட்டை வேடம் போடும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரிசபையில், குற்ற பின்னணி உள்ள மந்திரிகள் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டார்கள்.

ஏ.சி. அறைக்குள் இருந்து கொண்டு, பீகார் பிரச்சினை பற்றி தெரியாமலேயே அருண்ஜெட்லி போன்றவர்கள், பீகார் அரசியலை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு நடிகர் சத்ருகன் சின்கா கூறினார்.

உண்மைகள் சில நேரங்களில் வெளிப்பட்டாலும் காலப்போக்கில் அவை மறக்கப்படுகிண்றன அல்லது மறக்கடிக்கப் படுகின்றன. பாவம் சத்ருக்கனன் இன்னும் அரசியலை சரியாக புரிந்து
கொள்ளவில்லை போலிருக்கிறது. கஷ்டகாலம் சத்ருக்கனனுக்கா அல்லது சங்க்பரிவாரத்திற்கா?

Thursday, November 10, 2005

ஒரு பயோடேட்டா!

இந்திய அரசியல் என்பது எளிதில் பணம் சம்பாதிக்கும் கிரிமினல் குற்றவாளிகள் நிறைந்த கூத்தாடிகளின் கூடாரம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஒரு சர்வே எடுத்ததில் கிடைத்த தகவல்கள்:

* மோசடி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.

* பெண் கடத்தல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 29.

* பல குற்றங்களில் மூன்று வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.

* கொலை, கொள்ளை, கற்பளிப்பு, லஞ்சம், ரவுடிசம் போன்ற குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 117.

* பழைய கடனை திருப்பி செலுத்தாததின் பெயரில் வங்கிகளில் கடனோ, லோணோ பெற முடியாத மோசமான ஹிஸ்டரி கொண்டவர்களின் எண்ணிக்கை 71.

* பல்வேறு சட்டங்களை மீறியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21.

* அடிதடி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கோர்ட்டில் அபராதம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 84.

நாட்டு மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் இவர்கள் அவையில் இருந்து என்ன செய்வார்கள் என்பதை குறித்து ஆலோசனை செய்து பார்த்தால் மயக்கம் வருகிறது.

எல்லா வளங்களும் உள்ள நம் தாய்நாடு எதனால் உலக அரங்கில் முன்னேற இவ்வளவு சிரமப்படுகிறது என்பது புரிகிறதா?

Wednesday, November 9, 2005

ஆஹா! இன்றைய இரை கிடைத்து விட்டது!

உலகில் சாத்வீகத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும் பெயர்போன மற்றவர்களின் சொத்தை மனதில் போலும் எண்ணிப் பார்க்காத அப்பாவி நாடான இஸ்ரேலில் வசிக்கும் ஒரு முஸ்லிம் இஸ்ரேலிய இராணுவத்தினரின் கையில் கிடைத்தால் என்ன ஆவார் என்பதை கீழே பாருங்கள்.


1. சந்தேகப் பட்டு பிடிக்கப் படுகிறார்.

2. ஆயுதங்கள் ஏதாவது வைத்திருக்கிறாரா? என்று சோதனை

3. அடடா ஒன்றும் இல்லையே! அப்பாவியை பிடித்து விட்டோமோ?

4. இவர்களை நம்பவே முடியாது! ஜட்டியில் பாம் செய்து அணிந்தாலும் அணிந்திருப்பார்கள். எதற்கும் ஆடையை களைந்தும் சோதனை செய்து விடலாம்!

5. ஒன்றும் இல்லையே! இவனை கொல்வதற்கு ஒரு காரனமும் கிடைக்கவில்லையே! ஆங் கிடைத்து விட்டது. வயிற்றினுள் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்த பலஸ்தீன் தீவிரவாதி!. சரி இனி நாம் செய்வதை செய்து விடு.


அப்பாடா ஒரு வழியாக மற்றொரு முஸ்லிம் குடும்பத்தை இஸ்ரேலிலிருந்து விரட்டியாகி விட்டது. பணத்திற்கு ஆசைப் பட்டு போயும் போயும் நம்மிடம் தங்களுடைய சொத்துக்களை விற்றார்களே இவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஹா! ஹா! ஹா!

Tuesday, November 8, 2005

யார் ஐ.எஸ்.ஐ உளவாளிகள்

தேசவிரோதம் என்றால் என்ன? ஒருவனை தேசவிரோதி என்று கூறுவதற்கு இங்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. தீவிரவாதி, தீவிரவாதம் என்பதற்கு எவ்வாறு நம்மிடம் சரியான அளவு கோல் இல்லையோ அதுபோல் தான் தேசவிரோதிக்கும் தேசவிரோதத்திற்கும் நம்மிடம் சரியான அளவுகோல் இல்லை அல்லது நடுநிலையான பார்வை இல்லை.

இந்தியாவில் எந்த மூலைமுடிக்கில் ஏதாவதொரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடன் முந்திக்கொண்டு செய்திகளைத் தரும் சில பத்திரிக்கைகள் எந்த ஆதாரமும் இன்றி தொட்டதற்கெல்லாம் ஐ.எஸ்.ஐ சதி என்று பிரச்சனையை திசை திருப்பி சங்க் பரிவாரத்திற்கும், அரசியலை வைத்து பிழைப்பு நடத்தும் சில கிரிமினல் கட்சிகளுக்கும் அப்பட்டமாக துணை போய் கொண்டிருக்கின்றன.

இதனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயமே மற்றவர்களின் கண்களுக்கு குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு அநியாயம் இழைக்கப் படுகின்றனர் என்பதைப்பற்றிய கவலை எல்லாம் அவர்களுக்கு இல்லை.

அவர்களின் பார்வையில் நாட்டின் அரசியல் சாசனச் சட்டப்படி நாட்டின் ஆணி மூடான நீதிமன்ற தீர்ப்பினை அங்கீகரிக்க மாட்டோம் என்று தெளிவாக அறிக்கை வெளியிடும் சாதுக்கள்(சாமியார்கள்) தேசவிரோதிகளல்ல - தேசபக்த்ர்கள். மறித்து நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறும் முஸ்லிம் சமூகம் - அது இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக வைத்திருக்கும் ஒரே காரணத்தினால் - தேச விரோதிகள், பாகிஸ்தான் உளவாளிகள்.

நாட்டில் நடக்கும் விபத்துக்களிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பளிப்பு அனைத்திற்கும் ஐ.எஸ்.ஐ தொடர்பு என்று அதிகார வர்க்கத்தின் அங்கீகாரத்துடன் அவசரமாக செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளின் முக்கிய நோக்கம் இன்னாட்டின் எதிரிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப் படவேண்டும் என்பதே.

ஆனால் யதார்த்தத்தில் நம்நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் அன்றும் இன்றும் கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்புக்காக வந்தேறிய ஆரிய, பார்ப்பன கூட்டம் தான் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதனை தெளிவிப்பது போன்ற சம்பவங்களும் அவ்வபோது நாட்டில் நடக்கின்றன. ஆனால் இவை எல்லாம் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு தெரியாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. சமீபத்திய செய்தி ஒன்றை பாருங்கள்.

இந்திய கப்பற்படையில் கேப்டனாக பணியாற்றி வந்தவர் காஷ்யப் குமார். இதே துறையில் வினோத்குமார் ஜா, விஜயேந்திர ராணா அகிய இருவரும் கமாண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த மூவரும் கப்பற்படை இயக்குனர் அலுவலகத்தில் முக்கியப் பதவிகளை வகித்து வந்தனர். மாதச் சம்பளத்தோடு, சகலவித சலுகைகளையும் அனுபவித்து வந்த இம்மூவரும், இந்திய கப்பற்படை ரகசியங்களை வேறு நாடுகளுக்கு விற்று தேசத் துரோகம் செய்து வந்தனர்.

இவர்கள் மீது கப்பற்படை இலாகா விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் இம்மூவரும் தேசத் துரோகம் செய்தது உறுதிபடுத்தப்பட்டது. குற்றச் செயலில் ஈடுபட்ட இம்மூவர் மீதும் ஜனாதிபதிதான் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு விசாரணை மன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனால் ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தின் கீழ் இம்மூவரையும் டிஸ்மிஸ் செய்ய கப்பற்படை இலாகா உத்தரவிட்டது.

ராணுவத்தில் பணிபுரியும் பல உயர்சாதி அதிகாரிகள் பதவியின் போது இதுபோல் இந்திய ராணுவ ரகசியங்களை பிற நாடுகளுக்கு விற்று, தேசத்துரோகம் செய்கின்றனர். இல்லையேல் பதவிக்காலம் முடிந்த பிறகு பாஜக போன்ற மதவாதக் கட்சிகளில் சேர்ந்து பசையான பதவிகளை பிடித்துக் கொள்கின்றனர். இது கவலையளிக்கும் விஷயமாகும். இதைக் களைய இப்போதைய மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நன்றி: உணர்வு வார இதழ் 04/11/2005


ஆனால் இவை எல்லாம் இவர்களுக்கு நிச்சயம் தேச விரோதமாக தெரியப்போவதில்லை. முன்பு ஒருமுறை இதுபோல் கேரளா ஐ.எஸ்.ஆர்.ஓ மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணனும் ஒரு ஐ.ஜியும் சேர்ந்து இது போல் ராணுவ ரகசியங்களை ஒரு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு கைமாறிய சம்பவம் நடந்தது. பின்னர் அந்த விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது. அது போல் தான் இதுவும் ஆகும் என்பதில் நமக்கு யாதொரு சந்தேகமும் இல்லை.

Sunday, November 6, 2005

உலகின் மிகச் சிறந்த படங்கள்!!!.

அதிகார மமதை கொண்டவர்களின் கையில் ஆட்சி இருந்தால் அது குரங்கு கையில் பூமாலை தான் என்பதற்கு மிக சிறந்த உதாரணம், தன்னை உலக வல்லரசு என்று வளர்ப்பு நாயின்(டோனி) உதவியுடன் பயந்தவர்களின் காதில் பூசுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் அழிவிற்கு காரணமாக வந்து வாய்த்திருக்கும் இளைய புஷ் என்றால் அது மிகையில்லை.

உலகின் மிகச் சிறந்த(!!???!!!) அதிபர் என்று தனக்கு ஒத்து ஊதும் சில கைக்கூலி மேற்கத்திய ஊடகங்களையும், அவை என்ன உளறுகிறதோ அதை அப்படியே எவ்வித ஆராய்ச்சியும்(குறைந்த பட்சம் அச்செய்தி சரியா இல்லையா என்று கூட ஆராய்சி) செய்யாமல் வாந்தி எடுக்கும் மூன்றாம் நாடுகளின் சில ஊடகங்களின் துணையுடனும் லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களின் மீது அகந்தையுடன் வலம் வரும் புஷின் சுயரூபம் பல சமயங்களில் எதேச்சையாக வெளிவருவதுண்டு.

அவை புஷின் யதார்த்த ரூபங்களையும் வெளிபடுத்துவதாக அமைவதுண்டு.
அதில் ஒன்று தான் இங்கே காணப்படுவது.

உலகின் மிகச் சிறந்த(!!!?) அதிபர் எதை எப்படிப் பார்த்து எப்படி முடிவுகள் எடுக்கிறார் என்பதை இங்கு பாருங்கள்.

உலகின் மிகச் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கலாம்.