Saturday, November 26, 2005

இது தான் பத்திரிக்கை சுதந்திரம்!

அல் ஜசீரா!

ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை!

பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் பிடித்த தொலைக் காட்சி சானல்.

உண்மைகள் உரைப்பவர்களையும், அதற்கு துணை நிற்பவர்களையும் என்று தான் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் பிடித்திருக்கிறது? வழக்கம் போலவே உண்மையை வெளிக் கொணர்ந்த ஒரே காரணத்திற்காக அல் ஜசீரா தொலைக் காட்சி அமெரிக்காவிற்கு "தொல்லைக் காட்சி"யாக மாறிப் போனது. அன்றிலிருந்து இன்று வரை பல இடையூறுகளையும் சமாளித்து நீதிக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கும் அல் ஜசீராவின் இந்த குறுகிய கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமானால் நாம் அதிசயித்து நின்று விடுவோம்.

ஆப்கன் யுத்தத்திற்குப் பிறகு சமாளித்துக் கொண்ட அமெரிக்கா ஈராக் யுத்தத்தின் போது பாக்தாதினுள் நுழைந்த பிறகு, அவர்களின் சிங்கியடி சானல்களைத் தவிர மற்ற எல்லா சானல்களையும் வெளியேற உத்தரவிட்டது. அதையும் மீறி பல யுத்தச் செய்திகளை - அப்பாவி மக்களுக்கு அமெரிக்கப் படையால் இழைக்கப் பட்ட அநியாயத்தை - வெளியிட்ட ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடம் ஆப்கன் யுத்தத்தின் போது தாக்கப் பட்டது போல் தாக்கப் பட்டது. அமெரிக்கப் படையினர் அட்டூளியம் செய்து கொண்டிருப்பதை நேரடியாக ஒளி பரப்பிக் கொண்டிருந்த ஒரு ஜசீரா நிருபர் அமெரிக்க வல்லூறுகளால் தாக்கி கொல்லப் பட்டதை அதே ஜசீரா நேரடியாக ஒளிபரப்பியது.

உலகத்திற்கு ஜனனாயகத்தைப் படிப்பித்துக் கொடுக்க வந்தவர்களாலேயே இந்த ஜனனாயக அத்துமீறல், பத்திரிக்கை சுதந்திரத்தை அடித்து ஒடுக்கும் செயல் நடத்திக் காட்டப் பட்டது. இதனையே மற்றொரு நாடு செய்திருக்குமானால் அதற்கு எதிராக இதே ஜனனாயக காவலன் தலைமையில் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படும் மற்ற ஜனனாயக காவலர்களும் திரண்டிருப்பார்கள்.

என்ன செய்தாலும் அதனை வெளிக்கு கொண்டு வரும் ஜசீராவை எப்படி இத்தனை நாளும் விட்டு வைத்தார்கள் என்று பல முறை நினைத்ததுண்டு. தனக்கு எதிராக நிற்கும் எந்த சக்தியையும் அழித்தே பழக்கப் பட்ட புஷ்ஷிற்கு மற்ற காரியங்களில் இறங்கியது போல் ஜசீராவிற்கு எதிராக இறங்க முடியவில்லை அல்லது அதற்கு எதிராக குற்றங்களை அடுக்க முடியவில்லை(இடையில் உசாமாவிற்கும் ஜசீராவிற்கும் தொடர்புண்டு என்று ஒரு செய்தியை எப்பொழுதும் போல் வெள்ளோட்டமாக விட்டுப் பார்த்தார். அது மற்றவர்களிடமிருந்து எதிபார்த்த ஆதரவைப் பெற்றுத் தரவில்லை).

யோசித்த புஷ் இனி மற்றவர்களின் ஆதரவுடன் அதனை ஒழிப்பது நடக்காத காரியம் என்பதைப் புரிந்து, தனது செல்லப் பிள்ளையின் துணையுடன் ஜசீராவின் எல்லா அலுவலகங்கள் மீதும், கத்தரில் இருக்கும் அதன் தலைமையகம் மீதும் ஒரே நேரத்தில் குண்டு போட்டு ஒழிக்க திட்டமிட்டிருக்கிறார். இது நடந்தது ஒரு வருடத்திற்கு முன். என்ன காரணத்தினாலோ அதனை உடனே நிறை வேற்றவில்லை. அல்லது அதனை நிறைவேற்ற காலம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனை எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிக்கை எல்லா விதமான ஆதாரங்களையும் சேகரித்து இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தது.

பிளைர் 16 ஏப்ரல் 2004 அன்று வாஷிங்டன் சென்றிருந்த போது புஷ் பிளைரிடம் "கத்தரில் இருக்கும் ஜசீராவின் தலைமையகத்தின் மீது குண்டு வீச வேண்டும்" என்று கூறியதாக டெய்லி மிர்ரர் கூறுகிறது.

சுதாரித்துக் கொண்ட புஷ் உடனே பிளேரை பிடித்து உலுக்க தற்போது இங்கிலாந்து அரசாங்கத்தால் இங்கிலாந்து கேபினட் அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் கியோகின் மற்றும் லெயோவின் மீது அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். மட்டுமல்ல தொடர்ந்து இது சம்பந்தமான தகவல் வெளியிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அச்செய்தியை தொடர்ந்து வெளியிட முடியாமல் செய்துள்ளனர்.

பாக்தாதில் அமெரிக்கப் படையினரால் குண்டு வீசி

கொல்லப் பட்ட அல் ஜசீரா நிருபர் தாரிக் அயுப்.

இதிலிருந்து தெளிவாக அல் ஜசீராவைத் தாக்க திட்டமிட்டது தெரிய வருகிறது. மட்டுமல்ல இப்பொழுது, இதற்கு முன் ஏப்ரல் 2003 ல் பாக்தாதில் வைத்து அமெரிக்கப் படையினரால் குண்டு வீசி கொல்லப் பட்ட ஜசீரா நிருபர் தாரிக் அயுபின் மரணத்தின் மீதும், நவம்பர் 2001 ல் ஆப்கன் தலைநகர் காபூலில் ஜசீரா நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது மிசைல் மூலம் தாக்குதல் நடத்தியதிலும் கூறப் பட்ட காரணத்தின் மீது சந்தேகம் வலுக்கிறது.

தான் கூறுவதை மட்டும் வெளியிடும் ஊடகங்களை வளர விடுவதும், உண்மைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்களை அழிக்க முற்படும் இந்த ஏகாதிபத்திய, சர்வாதிகார செயல் பாடு நல்லதற்கல்ல. இப்படியே உண்மைகள் மறைக்கப் பட்டு, அதற்காக பாடுபடுபவர்கள் அழித்தொழிக்கப் படுவதும், அதனைக் கண்டு உலகம் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதும் உலகின் அழிவிற்கே வழி வகுக்கும்.

11 comments:

  1. அபூ ஸாலிஹாNovember 26, 2005 at 8:37 AM

    //உண்மைகள் மறைக்கப்பட்டு அதற்காக பாடுபடுபவர்கள் அழித்தொழிக்கப்படுவதும் அதனைக் கண்டு உலகம் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதும் உலகின் அழிவிற்கே வழி வகுக்கும்.//

    உள்ளத்தைப் பதற வைக்கும் சத்திய வார்த்தைகள்!

    ReplyDelete
  2. //தான் கூறுவதை மட்டும் வெளியிடும் ஊடகங்களை வளர விடுவதும், உண்மைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்களை அளிக்க முற்படும் இந்த ஏகதிபத்திய, சர்வாதிகார செயல் பாடு நல்லதற்கல்ல.//

    100% true

    ReplyDelete
  3. இறை நேசன்,
    இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் இதைப் பற்றி பதியவேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் செய்துவிட்டீர்கள்.

    மிகவும் அபாயகரமான போக்கு இது. நம் நாட்டில் நக்கீரன் தாக்கப்பட்டதைப் போல. பிடிக்காததை எழுதுவதற்காக பாம் போட்டு அழிக்க வேண்டும் என்று நினைக்கும் புத்தியை என்ன செய்வது? ஈராக் போரில் அமெரிக்க ஊடகங்கள் எல்லாம் embedded journalism என்ற பெயரில் emotionally manipulate செய்யப்பட்டு புஷ்ஷிற்கு வால் பிடித்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அல் ஜசீரா வடிகாலாய் இருந்தது. இந்த விஷயம் இன்னும் பூதாகாரமாக ஆக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளியில் வரும்.

    ReplyDelete
  4. எந்தச் சர்வாதிகாரத்துக்கும் கருத்துச்சுதந்திரம் பிடிப்பதில்லை. இப்போது அமெரிக்காவுக்கு.

    ReplyDelete
  5. இறைநேசன் அருமையாக எழுதியிருக்கீங்க.

    அல் ஜசீராவின் மீதான அமெரிக்காவின் அடக்குமுறையினை உலகிற்கு ஆதாரங்களோடு சொல்லியாச்சு, இனிமேல் நடுநிலையில் இருக்கும் செய்தி ஊடகங்கள் எல்லாம் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை எதிர்க்க வேண்டியது தானே.

    ஈராக் யுத்தத்தின் போதும் சரி, அதன் பின்னரும் சரி, பிபிஸி, சிஎன்என் தினம் தினம் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று அளந்துக் கொண்டிருந்த போது உண்மை நிலவரத்தை அப்படியே சொன்னவர்கள் அல்ஜசிராவும், யூரோநியூஸ¤ம் தான்.

    யூரோ நியூஸில் தினம் தினம் அமெரிக்க வாகனங்கள் எரிந்துக் கொண்டிருப்பதையும், அதனை மக்கள் காரி துப்புவதையும், ஏறி நடனம் ஆடுவதையும், அமெரிக்கர்களின் சடங்களை தெருவில் இழுத்துச் செல்வதையும் காட்டினார்கள்.

    ReplyDelete
  6. போரிடும் இருதரப்பும் பத்திரிக்கையாளரை தாக்குவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள்.அல்ஜசீராவின் சுதந்திரம் இங்கு பறிக்கப்படுவதுபோல் ஆலந்தில் டைரக்டர் தியோ வான்கோவின் உயிரையே ஜிகாதிகள் பறித்துவிட்டார்கள்
    இருதரப்பு மோதலில் முதல் களப்பலி எழுத்து சுதந்திரம் தான் போலும்.

    ReplyDelete
  7. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. முக்கியமாக பரஞ்ஜோதி அவர்களுக்கு - முதன் முதலாக நானும் "எழுதுகிறேன்" என்று கூறியதற்காக(எழுத்தாளர்கள் கோபப்பட வேண்டாம்- பாவம் பரஞ்ஜோதி விட்டுவிடுங்கள்).

    //இந்த விஷயம் இன்னும் பூதாகாரமாக ஆக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளியில் வரும்.//

    பூதாகரம் ஆக்குவதற்கு - உலகம் நிம்மதியாக நிலைநிற்க தீர்வு காணப்படவேண்டிய ரொம்பவும் முக்கியமான பிரச்சனைகளான குஷ்பு, சுகாசினி, சானியா விஷயங்கள் இருக்க இதையெல்லாம் யார் பூதாகாரப் படுத்தப் போகிறார்கள்.

    //அல் ஜசீராவின் மீதான அமெரிக்காவின் அடக்குமுறையினை உலகிற்கு ஆதாரங்களோடு சொல்லியாச்சு, இனிமேல் நடுநிலையில் இருக்கும் செய்தி ஊடகங்கள் எல்லாம் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை எதிர்க்க வேண்டியது தானே.//

    அப்படி ஏதாவது ஊடகங்கள் உள்ளனவா? அந்த அளவிற்கு போவானேன்! நமது தமிழ்மணத்திலேயே பாருங்களேன். குஷ்புவின் கேடுகெட்ட வக்கிரமான எண்ணத்திற்கே "அது அவருடைய கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், ஆ, ஈ, ஊ" என்று சரமாரியாக எத்தனை பதிவுகளும், பின்னூட்டங்களும் வந்தன. அதற்கே அத்தனை சர்ச்சை நடந்தது எனில் பேச்சு, எழுத்து சுதந்திரத்தின் ஆணிமூடான ஊடகத்துறையின் கழுத்து இங்கு நெரிக்கப்படுவதற்கு எவ்வளவு சர்ச்சைகளும், கண்டனங்களும் பதிந்திருக்க வேண்டும். இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டியது தான் நடுநிலை என்பது என்ன என்பதை.

    ReplyDelete
  8. இங்கிலாந்து கேபினட் அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் கியோகின் மற்றும் லெயோவின் மீது அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். மட்டுமல்ல தொடர்ந்து இது சம்பந்தமான தகவல் வெளியிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அச்செய்தியை தொடர்ந்து வெளியிட முடியாமல் செய்துள்ளனர்.

    இந்தியாவில் சவப்பெட்டி ஊழலை வெளிக்கொணர்ந்தவர்களின் மீதும் இதே விதமான வழக்குகள் போடப் பட்டு அந்த சம்பவத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  9. //பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம்//

    இப்ப மட்டும் என்ன வாழுதாம்.

    ReplyDelete
  10. //ஆலந்தில் டைரக்டர் தியோ வான்கோவின் உயிரையே ஜிகாதிகள் //

    இப்பல்லாம் நேசகுமாரும் நீலகண்டனும் அனானிமசா வந்து முசுலிம்களின் பதிவுல துப்பிட்டு போறதே பொழைப்பாப்போச்சு.

    ஹ்ஹும் என்ன செய்யிறது?

    ReplyDelete
  11. தமிழ் செல்வனின் சுட்டியில் "என்னைத் தேடி வருபவர்களுக்கு அல்வா.....", நொந்த குமாரின் சுட்டியில் யாஹூ தளம்:-)

    ஹ்ஹும் இத என்ன செய்யிறது?:)

    ReplyDelete