Saturday, November 19, 2005

என்ன தான் நடக்குது .......... நடக்கட்டுமே!

பிறந்த வீட்டுக்கு சீமந்தம் கொண்டு வந்த செல்வ மகளுக்கு பிறந்த வீடு எடுத்த ஆரத்தி விழாவினை அவர்களுடைய பிரச்சார தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள்.

மொத்த திரையுலகமும் திரண்டு வந்து (தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாலும் கூட காப்பாத்த முடியாது என்று தீர்க்கதரிசனம் உரைத்த "சூப்பர்!!!!" நடிகர் உட்பட) அடக்க முடியாத ஆனந்தத்தில் தன்னிலை மறந்து வாயில் வந்ததையெல்லாம் கூறி "அன்னையைப்" பாராட்டி நன்றி கூறிய நிகழ்ச்சியை உள்ளம் புழகாங்கிதமடைய யான் கண்டு மகிழ்ந்ததை "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் பரந்த நற்மனப்பான்மையில் என் மனதை விட்டு நீங்காத சரித்திரத்தில் பொறிக்கப் பட வேண்டிய சில காட்சிகளை இங்கு தருகிறேன்.

படித்து விட்டு தமிழ் நாட்டின் தலை எழுத்துக்காக இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமாவது உதிருங்கள்.

"அம்மையாருக்கு" பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப் பட்டது. இதை "தங்கத் தாரகை", கலைத்தாய்", "புரட்சித் தலைவி" அவர்களுக்கு பூரணக் கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்த காட்சி கண்கொள்ளா "திருக்காட்சி"யாக இருந்தது என பிரச்சார தொலைக்காட்சி வர்ணித்தது.

நன்றி கூற வந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் செல்வியின் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் அவரை அழைக்கும் பிரபலமான வார்த்தையைக் கூறி (அம்மா) அழைத்து நன்றி கூறினர்.

அவற்றில் புதிதாக என் மனதைக் கவர்ந்த சில சிங்கிகளும், டுங்கிகளும்:

* எஸ்.வி.சேகர் -- நம்முடைய கலைத் தாய்

* கே.எஸ். ரவிக் குமார் -- திரை உலகின் "பிரம்மா" "நம்ம அம்மா"

பங்சிங் டயலாக் : தியேட்டரெல்லாம் இப்போது "ஜெ ஜெ" வென்று கூட்டம்.

* வரவேற்பு பாடலில் டச்சிங் வார்த்தைகள் : கோட்டைக்கு ராணி நீங்க தாங்க, வெற்றித் தங்கம், போயஸ் தோட்ட அன்னை...

* ஒய். ஜி. மகேந்திரன் -- அன் பாரலல் ஸ்டார் (Un Parallal Star)

* விவேக் -- தமிழ் தாய் வாழ்த்து - எங்கள் தாய்க்கு வாழ்த்து

கவி(ழு)தை : சினிமா என்னும் குழந்தை பசித்த போது விசித்து அழுதது, அய்யோ என்றது, அந்தோ எந்தரற்றியது, குய்யோ முறையோ என்று கதறியது. கவனிப்பார் யாருமில்லை. முதல் முறையாக "அம்மா" என்றழைத்தது அடுத்த நொடியில் அம்மா மடியில் - லேட்டாக கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுத்திருக்கிறீர்கள்.

அழைப்பு : ஒளி விளக்கே, கலங்கரை விளக்கே, சேலைக் கட்டிய சிங்கமே, தாயே, தருமமே

சென்டிமென்ட் : பிறந்த வீட்டுக்கு புகுந்த வீட்டிலிருந்து சீமந்தம் கொண்டு வந்த தாயே!

புதிய விளக்கம் : சி.எம்.(CM) சினிமா மினிஸ்டர்(Cinema Minister!!!!).

வாக்குறுதி : கலையுலகுக்கு நீங்கள் அளித்தீர்கள் O2(ஆக்சிஜன்), அதனால் உங்களுக்குத் தான் எங்கள் O2(ஓட்டு).

பட்டம் : தமிழ் நாட்டுக்கு நீங்கள் புரோகிரஸ் கார்ட்(Progress Card).

* எஸ்.வி. சேகர் -- "காந்தின்னா அவர் ஒருவர் தான் காந்தி, அம்மான்னா அவர் ஒருவர் தான் அம்மா"

புதிய விளக்கம் : கேள்வி - தமிழ் மொழி, செம்மொழிக்கு உதாரணம்? பதில் - புதுசு கண்ணா புதுசு - தமிழ் மொழி
பெஸ்ட் கண்ணா பெஸ்ட் - செம்மொழி
கேள்வி - என் மகன் எப்பவும் பொய் சொல்கிறானே?
பதில் - சன்னுன்னா அப்படித்தான்! கேள்வி - சும்மா என்னிடம் சண்டைக்கு வருகிறானே?
பதில் - அம்மா சன்னுக்கு பயப்படலாமா? சன் எப்பவுமே அம்மாக்கு கீழே தான்.

* வடிவேல் : விட்டால் ஒடிந்து விழுந்து விடுவதைப் போல் ஆயிரம் அம்மாக்களை விழித்து கூனி குறுகி ஏங்கி அழுது தரையில் புரண்டு ஒரு வேண்டுதலை வைத்தார் - பார்த்திபனிடமிருந்து தன்னைக் காப்பாற்ற - படு அருவருப்பாக இருந்தது - தன்னை ஒரு மனிதப் பிறவியாகவே நினைக்காமல் அப்படி கூனி குறுகி நின்றார்.

ஒரு பாடல் வேறு - லட்சிய தேவதையே, வெற்றி நாயகியே, தங்கத் தாரகையே, சிங்கத் தாரகையே....

* பால சந்தர் - இது காணிக்கை விழா , அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

* முரளிதரன் - இது தாய்க்கு குழந்தைகள் பாடும் குழலோசை, இமயத்துக்கு கோடம் பாக்கம் செய்யும் காணிக்கை, புற நானூற்று புரட்சித் தாய், சென்னைக்கு அன்னை, தொழுகிறோம், பூஜிக்கிறோம், அன்னையே, சரித்திரமே!, நடமாடும் தெய்வமே!!!????

* ராதா ரவி - தாயின் தாழ் பணிந்து, பாதங்களைத் தொட்டு வணங்கி, கடவுள் நீங்கள், உங்களால் மட்டும் தான் முடியும், தெய்வம்மா நீங்க, உங்களை நம்பினவர்கள் கெட்டதில்லை, நீங்கள் பார்க்காத கடவுளுக்கு சமம், கிண்டல் பண்றாங்க அம்மா!

* எஸ். ஏ. சந்திர சேகர் - புரட்சித் தலைவி அம்மா, தாயுள்ளத்தின் உதாரணம்

* மனோரமா - தமிழகத்தின் முடிசூடா ராணி, தென்னாட்டின் ஜான்சி ராணி, பொன்மன செல்வி, பூமாதேவி(!), சத்தியபாமா(பூமா தேவி) நரகாசுரனை கொன்றது போல் நவீன நரகாசுரன் வீரப்பனை(ஆமாம் வீரப்பன் எப்பொழுது, தான் தன்னுடைய அன்னையால் தான் சாக வேணும் என்று வரம் வாங்கினான்?) கொன்ற பூமா தேவி!.

இன்னும்......... விசிய காந்த், ரசினி காந்த், கமல், எஸ்.எஸ். சந்திரன், பார்த்திபன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உலகத்தில் ஒரு நாட்டிலும் தங்களுடைய முதலமைச்சருக்கு இப்படி ஓர் நன்றி அறிவிப்பு விழாவை யாரும் நடத்தியிருக்க மாட்டார்கள். கண்டிப்பாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் - தமிழ் சினிமாத் துறையால்.

கடைசியாக "தாயின்" சபதம் - சினிமா அழிவதைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்!.

கண்ணீர் வராதவர்கள் ஒரு முறை கூட மனோரமாவின் டயலாக்கை படித்து விட்டு வீரப்பனை அதிரடிப் படையினர் கொன்ற காட்சியினை நினைவுப் படுத்திப் பாருங்கள். கண்களில் தானே கண்ணீர் வரும்(சிரிப்பை அடக்க முடியாமல்).

6 comments:

  1. ராதா ரவி - கிண்டல் பண்றாங்க அம்மா!//

    Some Time he told about this blog!!!

    Be Careful!

    ReplyDelete
  2. நடமாடும் தெய்வமே!!!????//

    ம்ம்! நாற்காலி பறிபோனாலும் தொழிலுக்கு பஞ்சமில்லை!

    ReplyDelete
  3. மாமே! நீ இன்ன தாங் பினாத்திக்கினாலும் இங்க ஒண்ணும் எடுபடாது மாமு!

    ReplyDelete
  4. போன தபா தமிழினத் தலைவருன்னு அவருக்கு விழா எடுத்தாங்களே, வசதியா அதை மறந்திட்டீங்களேன்னா!

    ReplyDelete
  5. //போன தபா தமிழினத் தலைவருன்னு அவருக்கு விழா எடுத்தாங்களே, வசதியா அதை மறந்திட்டீங்களேன்னா!//

    எனக்கு அந்த "கண்கொள்ளாக் காட்சி" யையும் காணும் பாக்கியம் கிடைக்கவில்லையண்ணா!. அனானிமஸ் அண்ணனிடம் "மஞ்சள் துண்டு" சிறுபான்மையின(!), "குடும்ப" தலைவரின் விழா காட்சிகள் கோப்பு வடிவில் இருப்பின் அனுப்பித் தாருங்களேன். பார்த்து விட்டு மறக்காமல் அதற்கும் சேர்த்து ஒரு பதிவிடுகிறேன்!:-)))

    ReplyDelete
  6. "தாயின்" சபதம் - சினிமா அழிவதைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்!.//


    சரியாத்தாம்ப்ல அம்மெ சொல்லியிரிக்காவிய! பின்ன அந்த
    பீல்டு நாசமாப் போனா ஓட்டு போட்ட கேப்மாரியள எல்லாங் மறக்க வச்சியது எப்படியாங்! பேசாம போயி "சிவகாமி"ய பாத்துப்புட்டு அத வச்சி ஏதயாது கிறுக்குவியளா, அத்த விட்டும்போட்டு.

    ஆமா நா தெரியாமத்தய்ங் கேக்கியங் ஒமக்கு வேற வேலயும் சோலியும் இல்லியா?........!

    ReplyDelete