Wednesday, December 28, 2005

பா.ஜ.க. வெள்ளிவிழா சிறப்பிதழ்

ஆட்சியில் இல்லாததால் வறுமையில் வாடும் பா.ஜ.க (ஊழல் முன்னேற்ற முன்னனி) எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியது, உமாபாரதியின் சண்டித்தனங்கள், ஜோஷியின் அஜால் குஜால் வேலைகளால் கலகலத்துள்ள RSS+BJP கூடாரம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் "பல" சாதனைகளைப் படைத்து விட்டு, கடந்த இருபத்தைந்து வாரங்களாக நடக்கும் உள்குத்துகள் வருத்தமளிப்பதாக அத்வானி பா.ஜ.கவின் வெள்ளி விழா மாநாட்டில் ஆதங்கப்பட்டுள்ளார்.

மதத்தின் பெயரால் மக்களை கூறு போட்டு ஓட்டு வேட்டையாடி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க பலமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடி என்பதை அறிவோம்.
13 நாட்களில் தொடங்கி பிறகு 13 மாதங்கள் ஆட்சி செய்து இறுதியாக ஐந்து வருடங்களை ஓட்டிய பா.ஜ.கவின் சாதனைகளையும் அதற்கு பின்னனியில் இருந்த சிந்தனைச் சிற்பிகளையும் அறிந்து கொள்வோம்.

அடல்பிகாரி வாஜ்பாய்

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை ஆங்கிலேய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்ததிலிருந்து (பார்க்க) திருவாளர் வாய்பாய் அவர்களின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. முதல்நாள் ஒரு அறிக்கை விட்டுவிட்டு மறுநாள் RSS இன் நெருக்குதலால் நான் அப்படிச் சொல்லவில்லை; பத்திரிக்கையாளர்கள் திரித்து எழுதிவிட்டார்கள்" என்று அந்தர் பல்டி அடிப்பதில் மன்னன்.

லால் கிருஷ்ண அத்வானி

400 ஆண்டுகால இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான பாபர் மசூதியை இடித்ததில் முக்கிய குற்றவாளியாக இருந்து பிறகு இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்?! இவர் கட்டுப்பாட்டின் கீழிருந்த CBI மறுமுறையீடு செய்யவில்லை. நாட்டிற்கு மட்டும் இவர் வில்லனல்ல தன் வீட்டிலும் வில்லனாகத்தான் இருந்திருக்கிறார்.

சுஷ்மா ஸ்வராஜ்

சானியா மிர்ஜா தொடையைக் காட்டி பொதுவில் விளையாடுவது, உடை ஒழுக்கம் பேணும் இஸ்லாமிய ஒழுக்கநெறிக்கு எதிரானது என்று முஸ்லிம் பெரியவர் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணுரிமை பேசிய இவர், நம் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த ராஜீவ் காந்தியின் துணைவி அன்னை சோனியா பிரதமரானால் மொட்டை அடித்து விதவைக் கோலம் பூண்வேன் என்று மிரட்டி தன் பெண்ணுரிமைப் போராட்டத்தின் முரண்பட்ட பக்கங்களைக் காட்டிக் கொண்டவர்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த போது அரசுமுறைப்பயனமாக அமெரிக்கா சென்றபோது, அமெரிக்க ஏர்போர்ட்டில் நிர்வாண சோதனை செய்யப்பட்ட உலகின் ஒரே பாதுகாப்பு அமைச்சர். டெகல்கா வெளிப்படுத்திய ஊழலிலும் கலந்து கொண்ட பெருமை இவருக்குண்டு.

நரேந்திர மோடி

குஜராத் கலவரத்தின் பிதாமகன். ஆர்.எஸ்.ஏஸின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செல்லப்பிள்ளை. இவர் தலைமையிலான பரிவாரக் கும்பலின் அட்டகாசங்களால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி சர்வதேச தலைவர்களை சந்திப்பேன்? என்று வாய்பாயே வருந்தும் அளவுக்கு தன் மாநில முஸ்லிம்களை நரலி கொடுத்து இரண்டாம் முறையாக முதல்வரானவர். தற்போதைய நிலவரப்படி இவர் ஆட்சியில் நடந்த கலவரத்தில் காணாமல் போனவர்களை கும்பலாக எரித்து புதைத்த சடலங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

உமாபாரதி:

பெண் துறவி என்று சொல்லிக் கொண்டாலும் RSS இன் கோவிந்தாச்சார்யாவை காதலித்து, கருத்த தோலுடைய தமிழரான கோவிந்தாச்சார்யவை உமாபாரதியின் அண்ணன் நிராகரித்தால் துறவியாகவே காலம் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்கும் இவருக்குள்ளது. இவரால் முதல்வராக நியமிக்கப்பட்ட பாபுலால் கவுர், கடைசியில் இவரையே கவுத்திய பெருமையும் அதனால் எழுந்த சச்சரவுகளால் பி.ஜே.பியிலிருந்து அடிக்கடி அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி-2006 இல் புதிய கட்சி தொடங்கவும் திட்டம் உள்ளதாம்.

வெங்கய்யா நாயுடு
இவரும் உழல் மன்னன் தான். ரூரல் மந்திரியாக இருந்தபோது 40 கோடியை சுருட்டியதாக இத்தளம் சொல்கிறது.

இப்படி பல அரிய சாதனையாளர்களை தன்னுள்ளே கொண்ட கட்சி வெள்ளி விழா கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள்.

Sunday, December 25, 2005

கேள்வி கேட்டவன் எங்கே?


கீற்றின் சிரிப்பூ பகுதியில் கண்ட ஒரு ஜோக்.

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், "கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்" என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

புஷ் : "உன் பெயர் என்ன?"

மாணவன் : "டேவிட்"

புஷ் :  "கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?"

மாணவன் :  "3 கேள்விகள் கேட்கப்போகிறேன்.
1. ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்?
2. கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்?
3. பின் லேடன் இப்போது எங்கே?"

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். "கேள்விகள் கேட்கலாம்" என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

மாணவன் :  "ராபர்ட்"

புஷ் :  "உன் கேள்விகள் என்ன?"

மாணவன் :  "5 கேள்விகள் கேட்கப் போகிறேன்.
1. ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்?
2. கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்?
3. பின் லேடன் இப்போது எங்கே?
4. வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது?
5. முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?"

நன்றி - கீற்று.

படித்த போது எனக்கு சிரிப்பு வரவில்லை; ..................! உங்களுக்கு?

Tuesday, December 20, 2005

கறுப்பு சட்டைக் காரர்கள் கவனத்திற்கு!

சமீபத்தில் படித்ததில் பிடித்த கி.வீரமணி அவர்களின் கடிதம்:

நீ தமிழன்; எப்படி? மொழியால், இனத்தால் பண்பாட்டால் நீ தமிழன். இந்த அளவுகோல்படி நீ தமிழனாக இருக்கிறாயா? இது என் கேள்வியல்ல _ தந்தை பெரியாரின் கேள்வி.

அறிஞர் அண்ணா தமிழர்கள் என்பதற்கு விளக்கம் சொன்னார் _ மொழியால், வழியால், விழியால் (பண்பாட்டில்) தமிழர் என்றார்.

உன் பெயர் முதலில் உன் தாய்மொழியில் இருக்கிறதா? உன் தாய்மொழி உன் வீதியில் இருக்கும் கோயிலுக்குள் ஒலிக்கிறதா?

உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?

தமிழா, நீ கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் உள்ளே சென்று பூசை செய்ய முடியுமா?

முடியாது! காரணம் என்ன? நீ ''சூத்திரன்'', ''பஞ்சமன்'' _ சாஸ்திரப்படி மட்டுமல்ல; இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும் கூட!
அதனால்தானே தந்தை பெரியாரும் 10 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்களும் 1957 நவம்பர் 26_இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26_வது மதப் பாதுகாப்பு பிரிவினை _ ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தினர். மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையும் ஏற்றனர்.
இன்று வரை அதில் மாற்றம் இல்லையே _ பின் எப்படி நாம் மானமுள்ள தமிழர்கள்?

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் ''நீச்ச பாஷை'' என்பவர்தானே உமக்கு ஜெகத்குரு?
நீ கொண்டாடுவது ''பண்டிகைகளே'' தவிர விழாக்கள் அல்லவே!
தீபாவளியாக இருந்தாலும், வேறு எந்தத் தெருப் புழுதியாக இருந்தாலும் ''தேவர்கள், அசுரர்களைக் கொன்றார்கள்'' என்கிற கதை வராத பண்டிகைகள் உண்டா?

அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று விவேகானந்தர் முதல் நேரு உள்ளிட்டு பி.டி.சீனிவாச அய்யங்கார்கள் வரை எழுதியுள்ளனரே _ அவற்றைப் பற்றி ஒரு நொடி நேரம் அறிவைச் செலுத்தி சிந்தித்தது உண்டா?

சுரர்கள் அசுரர்களைச் சூழ்ச்சியால் அழித்தார்கள் என்று எழுதி வைத்த கதைகளை நம்பி அசுரர்களாக்கப்பட்ட நாமே நமது அழிவைப் பெருமைப்படுத்திக் கொண்டாடுவது, ஒரு இனத்தின் தன்மானத்துக்கு அழகாக இருக்க முடியுமா?

இதனைத் தானே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 60 ஆண்டு காலத்திற்குமேல் படித்துப் படித்துச் சொன்னார். _ இதற்கு மேலும் நம் தோல் மரத்துக் கிடக்கலாமா?

தமிழன் படிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றுதானே ஓயாது பாடுபட்டோம். குலக் கல்வியை பெரியார் ஒழித்ததால்தானே தமிழன் இன்று படிப்பும், பதவியும் பெறும் நிலை!
ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறாயே! தமிழா, நீ தமிழனாக, மானம் உள்ள மனிதனாக இருக்கவேண்டாமா? அதனைத் திசை திருப்பும் ஜாதிச் சாவுக் குழி வெட்ட வேண்டாமா? உன் உடன்பிறப்பையே ''தீண்டத்தகாதவன்'' என்கிறாயே _ உன்னைச் சூத்திரன் என்பவனை 'சாமி' என்கிறாயே!

படித்த இளைஞனே _ இரண்டு பேர் நீங்கள் சந்தித்தால் உங்களின் உரையாடல் என்ன? நம் இனத்தைப் பற்றியா _ மொழி உணர்வைக் குறித்தா? பண்பாட்டுத் தளத்தைப் பற்றியா? இல்லையே!

சினிமாவைப்பற்றிதானே சிரித்துச் சிரித்துப் பேசுகிறாய்!

சீரழிக்கும் சினிமாக்கள்தான் உன் குருதி ஓட்டமா? சினிமாக்காரர்கள்தான் உங்கள் கனவு லோக லட்சியப் புருடர்களா?

உலகில் சினிமாக்காரர்களுக்காக டிக்கெட்டுகளை விற்பதும், திரைப்படப் பெட்டிகளுக்கு ஊர்வலம் விடுவதும், அதில் யார் முந்தி என்பதில் அடித்துக் கொண்டு கொலை வரை நடப்பதும் இங்கல்லாமல் வேறு எங்கு?

இந்த நாட்டைப் பீடித்துள்ள அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறியதை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாயா?

விஞ்ஞானம் வளர்ந்தால் அறிவு வேட்கை வளரும் என்பது பொது நியதி. ஆனால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?

தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனம் மற்றும் ஏடுகள், இதழ்கள் மூடத்தனத்தின், பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகையாகத்தானே செயல்படுகின்றன?

அஞ்ஞானத்தை, விஞ்ஞானத்தின் மூலம் பரப்புகிறார்களே _ இது அறிவு நாணயமா? படித்த தமிழனே, பகுத்தறிவை இழந்து இந்த வலையில் வீழ்வது விவேகம் தானா?

செல்போன், இணைய தளம் என்பது தேவையான விஞ்ஞான சாதனங்கள்தான். சினிமாக் கலாச்சாரத்தால் சீரழிந்துபோன உன் சிந்தனை அவற்றில் எவற்றைத் தேடிக் கொண்டு இருக்கிறது?

இளைஞனே, இலட்சியங்கள் உன்னை கொள்ளை கொள்ள வேண்டாமா? அவற்றிற்கு மாறாக பல்வேறு ''போதைகள்'' அல்லவா உன்னைப் பாதை மாற்றத்திற்குச் செலுத்துகின்றன.

போதைகளால் தடுமாறும் உனக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன _ சமுதாயம் சீரழிந்தால் என்ன _ மொழி மூக்கறுபட்டால் என்ன _ பண்பாடு பாழ்பட்டால்தான் என்ன?

அளவுக்கு மீறி கேளிக்கை உணர்ச்சிகள் ஒரு சமூகத்தில் புகுத்தப்படுவதற்கு உள்நோக்கம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால், உப்பே உணவாகலாமா?

தமிழனிடத்தில் இன உணர்வும், நாட்டு உணர்வும், இலட்சியக் கோட்பாடுகளும் ஆட்கொண்டு விடக் கூடாது என்கிற சூழ்ச்சிதானே!

கறுப்புச் சட்டை உனக்குச் சுயமரியாதையை ஊட்டியது _ பகுத்தறிவைக் கொடுத்தது _ சமூக நீதியைச் சொல்லிக் கொடுத்தது _ பெண்ணுரிமையைப் பேணும் பண்பாட்டை உணர்த்தியது.

அந்த மண்ணில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்ட காவிகள் காலடி எடுத்து வைத்தால், பழைய சரிதம் மறந்து, அவற்றிற்கு நடைபாவாடை விரிக்க மல்லுக்கட்டி நிற்கலாமா?

உன் இனத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்களை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்த சிலர் துடிக்கும் பொழுது, 'ஏதோ ஒரு மயக்கத்தில்' அவர்களுக்குக் கைலாகு கொடுக்கிறாய். கேட்டால் விமர்சனம் என்கிறாய் _ விமர்சனத்தின் விளக்கம் தெரியுமா உனக்கு?

திராவிடன், தமிழன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கடைசியில் எதிரிகளின் காலடிக்குள் உன்னை அறியாமல் பதுங்கப் பார்க்கிறாய். புத்தம் அழிந்த வரலாறு தெரியுமா உனக்கு?

நண்பன் யார்? பகைவன் யார்? என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் உன் எதிர்காலம் எங்கே போய் முடியும்?

'போதை'யை விடு _ சமுதாயப் பாதையை தேர்ந்தெடு! இலட்சிய மிடுக்குடன் வீறு நடை போடு!

5 நட்சத்திர ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுகிறாய். சிக்கனம் என்பதைச் சிறுமையாகக் கருதுகிறாய் _ இது உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று சிந்திக்க மறுக்கிறாய்.

தாயை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு, தாய் மூகாம்பிகைக் கோயிலுக்குக் கடன் வாங்கிக் குடும்பத்துடன் செல்கிறாய்!
ஏனிந்த போதைகள்?

உரத்தின் மூலம் உணவு விளையும் உண்மைதான்; அதற்காக உரத்தையே உண்ண முடியுமா?

எண்ணிப் பார் தமிழா!

நன்றாகத் தான் உள்ளது. ஆனால் என்ன செய்ய! இப்படி சிந்திக்கக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டார்களே! நாளை இதே கறுப்புச் சட்டைகள் அவரை கடவுளாக்காமல் இருந்தால் சரி தான்.

புத்தரை இந்நாட்டை விட்டு ஓட்ட ஆரியர்கள் செய்த தந்திரம் தான் சிலை வணக்கத்தை எதிர்த்த புத்தருக்கே சிலை வைத்து அவரை பின்பற்றியவர்களுக்கு அவரை கடவுளாக்கியது. ஆரியர்களின் மும்மூர்த்தி தெய்வங்களும், அவர்களுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்நாட்டில் மற்றொரு கடவுளால் பிடித்து நிற்க முடியுமா என்ன?

எனவே "அவாள்"களுக்கு எதிரான கருத்துக்களோடு வரும் சிந்தனாவாதிகளை ஒழிக்க "அவாள்"கள் செய்யும் தந்திரங்களில் ஒன்று தான் அச்சிந்தனாவாதிகளுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் முதலில் சிலை வைத்து கொடுப்பது. நம் நாட்டு மக்கள் தானே பின்னர் அவர்களாகவே அச்சிந்தனாவாதிகளை கடவுளாக்கிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் இல்லாமல் ஆக்குவது ஒன்றும் "அவாள்"களுக்கு கடினமல்ல.

இஸ்லாத்தில் இவ்வாறு முஹம்மது நபிக்கு ஒரு சிலை வைத்து கொடுக்க முடியவில்லையே என்ற கவலை தான் "அவாள்"களுக்கு இஸ்லாத்தின் மேலும், இஸ்லாமியர்களின் மேலும் இவ்வளவு "கரிசனத்திற்கு" காரணம்.

கவனம் கறுப்பு சட்டைக் காரர்கள்!

Saturday, December 17, 2005

நம்பினால் நம்புங்கள்!










மதிப்பிற்குரிய பாகிஸ்தான் உளவாளி!

இன்றைய தினத் தந்தியில் வந்த ராஜஸ்தானில் பிடிபட்ட ஓர் பாகிஸ்தான் உளவாளியைப் பற்றிய செய்தி:

பாகிஸ்தான் உளவாளி ராஜஸ்தானில் கைது!
2 ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல்
அனுப்பியவர்!

2 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் அனுப்பிய பாகிஸ்தான் உளவாளியை போலீசார் கைது செய்தார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் பாகிஸ்தான் உளவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி ராஜஸ்தான் போலீசாரும்,மத்திய உளவு படை போலீசாரும் இணைந்து ஜோத்பூரில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அங்குள்ள ஓட்டல்கள், பங்களாக்கள், மற்றும் சில ரகசிய இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள ஏராளமான இ-மெயில் முகவரிகளுக்கு ரகசிய தகவல்களை ஒருவர் அனுப்பியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி நடந்த விசாரணையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் ஜோத்பூர் நகரில் பதுங்கி இருக்கும் விவரம் தெரிய வந்தது.

அப்போது ஜோத்பூர் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த மகேந்திர குமார் ரிஷி (வயது28) என்பவரை போலீசார் கைது செய்தார்கள். அவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் மாவட்டம் சிந்து நகரை சேர்ந்தவர்.

2 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு உளவு வேலை பார்த்து, பல தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவர் அனுப்பி வந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

வங்காளதேசத்துக்கு போவதற்காக காலாவதியான விசாவை அவர் வைத்திருந்ததை, புனேயில் உள்ள தெற்கு ராணுவ உளவு பிரிவும், மத்திய உளவு பிரிவும் கண்டுபிடித்தது. இவர் அஜ்மீரில் தங்கி, ராஜஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள், நசிராபாத், பார்மர், ஜெய்சால்மர், அகமதாபாத், மற்றும் உ.பி. மாநிலத்தில் சில பகுதிகளையும். குஜராத் மாநிலம் சூரத், மராட்டிய மாநிலம் புனே, மும்பை ஆகிய நகரங்களையும் பார்வையிட்டு, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஏராளமான தகவல்களை மகேந்திரகுமார் ரிஷி அனுப்பி வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

இன்டர்நெட் மற்றும், எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவர் பல ரகசிய தகவல்களை அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி மகேந்திரகுமார் ரிஷி, ஜோத்பூரில் உள்ள உளவு போலீசின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.

விட்டால் அவருக்கு ஆரத்தி எடுத்து பூவும் தண்ணியும் வைத்து கும்பிட்டு விடுவார்கள் போலுள்ளது. இரண்டு வருடங்களாக நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை செய்த ஓர் உளவாளிக்கு இந்தளவிற்கு மரியாதை தரப்பட வேண்டிய அவசியமென்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

பெயரில் முஸ்லிம் அடையாளம் இருந்தால் அவன் எந்தளவிற்கு சிறிய தவறு செய்தாலும் அவன், இவன் என்று எழுதுவதும் முஸ்லிம் அடையாளம் இல்லாத போது அவன் ஏதோ இந்திய பாதுகாப்பிற்காக உயிரையே பணயம் வைத்து தீர செயல் செய்தது போன்று செய்திகள் இடுவதும் - இது தான் இன்றைய இந்திய பத்திரிக்கைகளின் மதசார்பற்ற தன்மை. இவை யாரை திருப்திபடுத்த.

இந்தியா என்றாலே இந்துக்கள் மட்டுமே தேசபக்தர்கள் எனவும் முஸ்லிம்கள் என்றால் பாகிஸ்தானுக்குரியவர்கள் என்பது போலவும் மக்களுடைய மனதில் மத துவேசமான எண்ணத்தை வலிந்து வளர்க்கும் சங்க்பரிவாரத்தினர்களுக்கு துணை போகும் இதுபோன்ற பத்திரிக்கைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் பிறந்தவன் அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் அந்நாட்டின் முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பான் என்பதும், அந்நாட்டு பாதுகாப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதையும் நாம் அனைவரும் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் இதுபோன்ற புல்லுருவிகளை அவன் யாராக இருந்தாலும் இது போன்ற மதிப்புகள் கொடுப்பதும், மத துவேசத்தை மக்கள் மனதில் விதைக்கும் விதத்தில் செய்திகளை வெளியிடுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு முதுகெலும்பாக திகளும் பத்திரிக்கை துறைக்கு அழகல்ல! அது மக்கள் மனதில் வேற்றுமையையும், பிளவையும் மட்டுமே வளர்க்குமே தவிர எவ்விதத்திலும் பத்திரிக்கையின் நம்பகத்தன்மையையும், விற்பனை எண்ணிக்கையையும் உயர்த்தாது என்பதையும் பத்திரிக்கைத் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

கயவர்நேய காவலர்கள்!

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் காலம் காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மட்டும் எந்த விதத்திலும் குறைந்த பாடில்லை. ஒரு காலத்தில் பெண்களை மனிதப் பிறவியாகவே இந்த ஆண்வர்க்க சமூகம் அங்கீகரிக்கவில்லை. காலம் காலமாக பெண்களை ஆண்களுக்காகப் படைக்கப்பட்ட போகப் பொருளாகவே இந்த சமூகம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆண்களை "சந்தோஷப்" படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த, படைப்புகளிலேயே உயர்வானதான,மதிக்க வேண்டிய தாய்மை குணம் உடைய பெண் சமூகம் காலம் மாற மாற கொஞ்சம் கொஞ்சமாக அரக்கத்தனமான கட்டுப்பாடுகளை மீறி இந்த சமூகத்தில் தனக்கென ஒரு நிலையை நிச்சயிக்க ஆரம்பித்தது.

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் இந்நாகரீக காலத்திலும் கூட பெண்களை இந்த கேடுகெட்ட ஆண் வர்க்கம் பார்க்கும் பார்வை மட்டும் மாறவில்லை. எப்படி அந்த காலத்தில் தங்களுடைய இச்சையை தீர்க்க பயன்படும் விதத்தில் சட்டங்களை இந்த ஆண் வர்க்கம் இயற்றியதோ அதே பாணியைத் தான் இப்பொழுதும் பின்பற்றி வருகிறது. இக்காலத்தில் இனி பெண்களை அடக்கி ஒடுக்கி விட முடியாது என்றுணர்ந்த இவர்கள் போராடப் புறப்பட்ட பெண்களின் மனதில் இருந்த சம அங்கீகாரம் என்ற எண்ணத்தை பயன்படுத்திக் கொண்டு "ஆடையை அவிழ்த்தால் அல்லது ஆடையில் தாங்கள் நினைப்பது போல் நடப்பதற்கு தடையிடாதிருந்தாலே உண்மையான அங்கீகாரம் கிடைத்ததாக ஆகும்" என்று, ஒரு சில கீழ்மட்ட "கர்ப்பப்பை சுதந்திரம்" போன்ற சிந்தனையுள்ள பெண்களின் மனதில் எண்ணத்தை தோற்றுவித்து அதன் மூலம் தங்களுடைய வக்கிர எண்ணத்திற்கு வடிகால் அமைக்க முயல்கிறது.

இவ்விஷயத்தில் அனைவரும் ஒன்றை கவத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் அரை குறை ஆடையில் வருவது தான் அவர்களின் உண்மையான சுதந்திரம் என்று கூறும் வக்கிர சிந்தனையுள்ள ஆண்கள் அதையே ஆண்களுக்கும் கூற முன்வருவதில்லை. சம அந்தஸ்து எனில் குறைந்த பட்சம் ஆண்களின் உடை அளவிற்காவது பெண்களும் உடை அணிவது தானே சரி. ஆனால் இங்கு என்ன நடக்கிறது. முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்களில் கூட ஏதாவதொரு விதத்தில் அரைக்குறை ஆடையுடன் பெண்களை தோன்ற செய்து விடுகின்றனர். எதற்காக? இப்படி காட்டினால் தான் அப்பொருள் விலை போகும் என்பற்காகத் தானே! இது எதை உணர்த்துகிறது. காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதையல்லவா?. இது பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியிருக்கிறதா அல்லது தாழ்த்தியிருக்கிறதா? இதையா பெண்கள் சுதந்திரம் என விரும்புகிறார்கள்.

இவ்வாறு இன்று எங்கு திரும்பினாலும் எந்த இடத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் காணக்கிடைக்கிறாள். இது யாருக்கு இலாபம் யாருக்கு நஷ்டம். பொருளாதாரத்தை பெருக்குவதற்காக வக்கிர சிந்தையுள்ள வன்கிட முதலாளிகள், பெண்களை ஓர் சந்தைப் பொருளாக ஆக்கியதன் விளைவு? காலம்காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் இதே கொடுமை இன்று பச்சிளம் குழந்தைகளையும் நோக்கி; முன்னேறிய காலம் வக்கிர சிந்தையுள்ள ஆண்களின் உதவியால் நமக்கு தந்த பரிசு இது; ஒரு சில உதாரணங்கள்:


லால்குடி அருகே சிறுமிகளை மானப்பங்கம் செய்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ வாளாடி கிராமத்தை சேர்ந்த ராஜாமணி. அவருடைய மகள் லட்சுமி (வயது 6) அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மகள் வனிதா (5). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

இந்த சிறுமிகள் அங்கே உள்ளள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக் கூடத்துக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளையும் அதே பகுதியைச் சேர்ந்த தவமணி என்கிற குமார் (38) என்பவர் தனது வீட்டுக்கு டி.வி பார்க்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். வீட்டில் குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்று இருந்தனர். வீட்டுக்குள் அழைத்து சென்ற 2 சிறுமிகளையும் குமார் மானப்பங்கம் படுத்தியதாக தெரிகிறது.

வீட்டுக்கு சென்ற 2 குழந்தைகளும் குமார் நடந்து கொண்ட சில்மிஷங்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுமிகளின் பெற்றோர் லால்குடி அனைத்து மகளில் போலீசில் புகார் செய்தனர்.

16 வயது சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய 14 வயது சிறுவன்

13 வயது சிறுமியை 2 கயவர்களுடன் சேர்ந்து கற்பழித்து கர்ப்பமாக்கிய சித்தப்பா
- தினகரன் 30/11/2005 பதிப்பு.

நெல்லையில் 13 வயது மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றாள் - சீரழித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
- தினகரன் 30/11/2005 பதிப்பு.

வடநாட்டு பெண்களிடம் குறும்பு! கோவில் காவலர் நீக்கம் - தினகரன் 29/11/2005 பதிப்பு.

பெண் மானபங்க முயற்சி தொழிலாளி கைது
- தினகரன் 30/11/2005 பதிப்பு.

மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்
மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல் - தினகரன் 30/11/2005 பதிப்பு.

கல்லூரி மாணவி கடத்தல். 4 பேர் மீது தந்தை புகார்
- தினகரன் 29/11/2005 பதிப்பு.

பெண்ணின் கை துண்டிப்பு
கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் வெறிச்செயல்


காட்டுக்கு சென்ற பெண்ணை கற்பழிக்க முயற்சி! பெருசு, சிறுசு 3 பேருக்கு வலை - தினகரன் 06/12/2005 பதிப்பு.

குழந்தைக்கு தந்தை டிரைவரா? கிளீனரா? 2 போpடம் கற்பிழந்த நெல்லை மாணவியின் கண்ணீர் கதை- தினகரன் 05/12/2005 பதிப்பு.

திசையன்விளையில் நர்சை கற்பழித்த வாலிபருக்கு நெல்லை கோர்ட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டடது.>- தினகரன் 05/12/2005 பதிப்பு.

டியூஷன் படிக்க சென்றபோது ஆசை வார்த்தை கூறி 9-ம்வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த சித்தப்பா கைது >> - தினகரன் 02/12/2005 பதிப்பு.

வகுப்பறையில் ஆசிரியை கற்பழிப்பு, நான்கு பேருக்கு வலை

வேலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கற்பழித்துக் கொலை! கம்பெனி வேன் டிரைவர் கைது

கல்லூரி மாணவியின் சோகக்கதை!``மிஸ் ஆக்ரா`` அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியின் சோகக்கதைகணவனின் நண்பர்களால் கற்பழிக்கப்பட்டார்

கடந்த சில நாட்களில் கண்ணில் பட்ட சில செய்திகள் இவை. இவற்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் மற்றைய அக்கிரமங்கள் அடங்காது. 20 நாட்களுக்குள் இவ்வளவு அக்கிரமங்கள். இவற்றினை களையவும் இனி நடக்காதிருக்கவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்காவது ஒரு மூலையில் தங்களுடைய வசதிக்காக "4 பெண்கள் ஒரு டிரைவரை" திருமணம் முடித்த விஷயங்கள் கூட எழுதப் படும் விஷயங்களாக கண்ணில் படும் போது கண் முன்னில் நம் இடத்தில் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும் யாருடைய கண்களுக்கும் அவை செய்திகளாகப் படுவதில்லை. அல்லது கண்டிக்கத் தக்க அளவில் பெரிய சம்பவங்களாக இப்படிப்பட்ட அக்கிரமங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.
குறைந்த பட்சம் இவற்றைக் குறித்து கண்டித்து எழுதுவதற்கு கூட இந்த சிந்தனாவாதிகள் முன் வருவதில்லை.

எங்காவது பெண்கள் தன்னை மூடிக் கொண்டு போனாலோ, ஏதாவது முல்லா அவசியமில்லாமல் பெண்கள் மூடிக் கொண்டு போவதைக் குறித்து பத்வா கொடுத்தாலே இவர்கள் கிளர்ந்தெழுவார்கள். பெண்கள் "மூடிக் கொண்டால்" பின் இவர்களின் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது யாராம்.

எனவே பெண்கள் ஆண்களை நம்பி பிரயோஜனமில்லை. தங்களை தாங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் இப்படிப்பட்ட கயவர்களை கயவர்களாக மட்டுமே எண்ணி, பொது மக்கள் முன்னிலையில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்வதற்கு சட்டமியற்ற பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இதனைக் காட்டுமிராண்டி சட்டம் என்று பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் சூறையாடும் கல்நெஞ்சம் படைத்த காமகொடூரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வரும் "மனிதநேய" வேடதாரிகளிடம், "இச்சட்டம் தேவையில்லையெனில் இப்படிப்பட்ட ஈவிரக்கமில்லாத குற்றங்களை ஒழிக்க என்ன வழி" என்று அவர்களிடம் கேள்வி கேட்டு இக்குற்றங்கள் குறையாமல் இருக்க மறைமுகமாக துணைபுரியும் "கயவர்நேய" ஆர்வலர்களை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும்.

Monday, December 12, 2005

எம்.பி க்களின் வாயில பொன்னு, மக்களின் வாயில மண்ணு!

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்களை ஆஜ்தக் டெலிவிஷன் நிருபர்கள் குழு மடக்கியது. எம்.பி.க்கள் கேள்வி கேட்க ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்.


ஆஜ்தக் டெலிவிஷன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களை `பொறி' வைத்து பிடிக்க 2 நிருபர்களை நியமித்தது. அனிருத்தா பகல் மற்றும் சுஹாசினிராஜ் ஆகிய 2 நிருபர்கள் இந்த புலன் விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழுவின் தலைவர் அனிருத்தா பகல். இவர்தான் முன்பு தெகல்கா பேர ஊழலை அம்பலப்படுத்தியவர். பின்னர் இவர் `கோப்ரா போஸ்ட் டாட்காம்' என்ற இணைய தளத்தை தொடங்கினார்.

எம்.பி.க்கள் தங்களிடம் லஞ்சம் வாங்குவதை கையும், களவுமாகப் பிடிக்கும் இந்த திட்டத்துக்கு `ஆபரேஷன் துரியோதனன்' என்று பெயரிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் தங்களது புலன் விசாரணையைத் தொடங்கினார்கள்.

புலன் விசாரணை நிருபர்கள், `வட இந்திய சிறுஉற்பத்தியாளர்கள் சங்கத்தின் (நார்த் இண்டியன் ஸ்மால் மேனுபாக்சரர்ஸ் அசோசியேசன்-நிஸ்மா) பிரதிநிதிகள் என்று போலியான ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களை அதன் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டனர்.

நிருபர்கள் இருவரும் சுமார் 51 எம்.பி.க்களையும், அவர்களது புரோக்கர்களையும் சந்தித்து, தங்களது சங்கத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு எம்.பி.க்கள் ஒத்துக்கொண்டனர். 11 எம்.பி.க்கள் `ஆபரேஷன் துரியோதனன்' திட்டத்தில் சிக்கினார்கள்.


கேள்விகள் மற்றும் அது தொடர்பான துணைக்கேள்விகள் கேட்க எம்.பி.க்கள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை நிருபர்கள் குழுவிடம் லஞ்சமாகப் பெற்றனர். வருடம் முழுவதும் இப்படி கேள்விகள் கேட்க, துணைகேள்விகள் கேட்க சில எம்.பி.க்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த எம்.பி.க்களிடம் 60 கேள்விகளை நிருபர்கள் கொடுத்து, பாராளுமன்றத்தில் புயலை கிளப்பச் சொன்னார்கள். அதில் 25 கேள்விகளை எம்.பி.க்கள் தேர்ந்து எடுத்தனர். இந்த கேள்விகளை அவர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பினார்கள். ஒருவர் கேட்ட ஒரே கேள்வியை சில சமயம் வேறு சில எம்.பி.க்களும் கேட்டிருக்கிறார்கள்.

சிறுதொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்பான கேள்விகள் தவிர, சில சமயம் பங்கு மார்க்கெட் தொடர்பான, பொது மக்களுக்குப் பயன்படும் கேள்விகளையும் நிருபர்கள் கொடுத்துள்ளனர். அவற்றையும் அந்த எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளனர்.

ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த `ஆபரேஷன் துரியோதனா' கடந்த மாதம் (நவம்பர்) வரை ரகசியமாக நடைபெற்றது.

எம்.பி.க்களிடமும், அவர்களது ஏஜெண்டுகளிடமும் புலன் விசாரணை நிருபர்கள் குழு லஞ்சப்பணம் கொடுத்ததை மொத்தம் 56 வீடியோ கேசட்டுகளில் ரகசியமாக படமாக்கினார்கள். எம்.பி.க்கள் புலன் விசாரணைக்குழு நிருபர்கள், எம்.பி.க்களின் புரோக்கர்கள் மற்றும் யார்-யாருடன் அவர்கள் பேசினார்களோ, அந்த உரையாடல்களை 70 கேசட்டுகளில் ரகசியமாக பதிவு செய்தனர். 900-க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் குழுவிடம் எந்த, எந்த எம்.பி. எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்ற விவரம் வருமாறு:-

1. அன்னா சாகேப் எம்.கே.பாட்டில் (பா.ஜனதா)-ரூ.45 ஆயிரம்
2. சந்திரபிரதாப்சிங் (பா.ஜனதா)-ரூ.35 ஆயிரம்
3. பிரதீப் காந்தி (பா.ஜனதா)-ரூ.55 ஆயிரம்
4. ஒய்.ஜி.மகாஜன் (பா.ஜனதா)-ரூ.35 ஆயிரம்
5. சுரேஷ்சண்டேல் (பா.ஜனதா)-ரூ.30 ஆயிரம்
6. சத்ரபால்சிங் லோதா (பா.ஜனதா மேல்-சபை எம்.பி.)-ரூ.15 ஆயிரம்
7. நரேந்திரகுமார் குஷ்வாகா (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.55 ஆயிரம்
8. லால்சந்திராகோல் (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.35 ஆயிரம்
9. ராஜாராம்பால் (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.35 ஆயிரம்
10.மனோஜ்குமார் (ராஷ்டிரீய ஜனதாதளம்-ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்
11.ராம்சேவக்சிங் (காங்கிரஸ்)-ரூ.50 ஆயிரம்.


இந்த எம்.பி.க்களை சிக்கலில் சிக்க வைத்துள்ள புலன் விசாரணைக்குழுவின் தலைவரான நிருபர் அனிருத்தா பகல் கூறியதாவது:-

"பாராளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் உயிரோட்டமுள்ள சின்னம். பொதுமக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மூலம் தங்களது குரலை எதிரொலிக்கும் இடம் அது. அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் தங்களது பிரதிநிதி மூலம் (எம்.பி.) ஆட்சியில் பங்கு பெறும் இடமும் அது. தன்னிகரற்ற உறுப்பினர்கள் மூலம் ஜனநாயகத்தின் வலிமையை-புகழை பரப்பும் இடம் அது.

பாராளுமன்றத்தின் நீதிநெறிக்குழு வகுத்துள்ள நடத்தை விதிமுறைகளை அதன் உறுப்பினர்களான எம்.பி.க்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால் எங்களது புலன் விசாரணையின்போது சிலர் இந்த புனிதமான சபையை தலைகுனிவுக்கு ஆட்படுத்துவதை கண்டோம். பாராளுமன்றத்தின் மீது எங்களது புலன் விசாரணைக்குழு ஆழமான மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளது. இந்த எங்களது புலன் விசாரணையின் மூலம் பாராளுமன்றத்தின் புனிதத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க லஞ்சம் கேட்ட எம்.பி.க்கள், சில பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று யோசனை தெரிவித்து, அதற்காக ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அனிருத்தா பகலின் `கோப்ரா போஸ்ட் டாட்காம்' என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி : தினதந்தி

Sunday, December 11, 2005

பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை.

பத்திரிக்கைகள் இம்ரானாவுக்கும் சானியா மிர்சாவுடைய அரை நிர்வாண உடம்பைப் பற்றி ஏதோ மதப் பண்டிதன் தெரிவித்த அபிப்பிராயத்திற்கும் முன் பக்கத்தில் இடம் கொடுத்தபோது ஹரியானா கோஹானா கிராமத்தில் ஒரு தலித் கிராமம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி தலைமையில் மேல்ஜாதிக்காரர்கள் தீ வைத்து நாசப்படுத்திய சம்பவத்திற்கு அதன் உட்பக்கம் ஒரு சிறிய இடம் கூட கொடுக்கவில்லை.

இதற்கு முன் செப்டம்பரில் மஹாராஷ்டிரா அகோலாவில் ஒரு தலித் கிராமம் தீக்கிரையாக்கப் பட்ட சம்பவம், சில தலித் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே ஒரு விஷயமாகப் பட்டது. கோஹானாவில் வீடுகள் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நாசமாக்கப் பட்டதாக அவ்விடம் பின்னர் பார்வையிட்ட மனித உரிமை கழகத்தினர் கூறுகின்றனர். வால்மீகி சமுதாயத்தில்பட்ட வீடுகளும் வீட்டு சாதனங்களும் குறிவைத்து நாசமாக்கப்பட்டது. குஜராத் மாதிரியில் இருந்தது இந்த அழிப்பு. பி.ஜே.பி எம்.பி யாய கிஷன்சிங்க் ஸங்க்வினுடைய மகனும் சகோதரனும் இந்த தாக்குதலுக்கு சுக்கான் பிடித்தனர்.

இதில் சமையல் கியாஸ் தாராளமாக பயன்படுத்தப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மேல்ஜாதிகாரரில் ஒருவரை தலித்கள் கொன்றதற்கான பதிலடியாக இந்த தாக்குதல் என்று அவர்கள் கூறினர். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அதில் சம்பந்தமுள்ள வால்மீகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அக்கிராமத்தை தாக்கி அழிப்போம் என்று ஏற்கெனவே பி.ஜே.பி தலைவர்கள் அறிவித்திருந்தனர். கிராம பஞ்சாயத்து கூட்டியப் பிறகு மேல்ஜாதிக்காரர்கள் தலித்துகளுக்கு எதிராக திரும்பினர். தாக்குதல் 5 மணி நேரம் நீண்டு நின்றது.

வால்மீகிகள் சமீப காலமாக பொருளாதார ரீதியில் சற்று மேலே வந்தது பிரபல சமுதாயமான ஜாட்டுகளுக்கு அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. சுத்தம் செய்யும் துப்புரவு பணிக்காரர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுவது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் ஜில்லா நிர்வாகம் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு துணை நின்றது. பி.ஜே.பி எம்.பி யுடைய மகனையும், மருமகனையும் போலீஸ் கைது செய்யவில்லை. வீடுவிட்டு வெளியேறியவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு உதவவும் ஜில்லா நிர்வாகம் தயாராகவில்லை.

இந்தியாவில் தலித் அக்கிரமங்களை தடைவதற்குண்டான சட்டங்களுக்கு ஒரு குறையும் இல்லை. 1955 - ல் தீண்டாமைக்கெதிரான சட்டம் முதல் 1989 -ல் தலித்களுக்கு எதிராக நடக்கும் தாகுதல்களுக்கு எதிரான சட்டம் வரை பல சட்டங்கள் ஏடுகளில் உண்டு. ஆனால் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் தலித்துகளுக்கு எதிரேயுள்ள அக்கிரமங்கள் கொஞ்சமும் குறையவில்லை என்பதை தெளிவிக்கின்றன. சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ள தலித்துகள் தங்களுடைய சுயநிர்ணயத்திற்காக குரல் கொடுக்க எழும்புவது தான் இது போன்ற அக்கிரமங்கள் நடக்க காரணமாகின்றன.

ராஜஸ்தானில் கும்கர் கூட்டுக்கொலையிலிருந்து தப்பிய சுன்னிலால் இவ்வாறு கூறுகிறார்,"சுப்ரீம் கோர்ட்டின் எல்லா நீதிபதிகளும் சேர்ந்தாலும் அவர்களுக்கு கிராமத்தில் ஒரு கான்ஸ்டபிளிற்குள்ள அதிகாரம் இல்லை. எங்களை பாதுகாப்பதும் அழிப்பதும் அந்த கான்ஸ்டபிளின் கையில் உள்ளது. அவர் அவருக்குக்காக சட்டம் உண்டாக்குகின்றார்."

எப்படிப்பட்ட அக்கிரமம் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைத்தான் இப்படிப்பட்ட சட்ட விரோதிகளை ஊக்குவிக்கின்றது. உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் ஆட்சி காலத்தில் மேல்ஜாதிக் காரர்களுக்கு எதிராக தலித் அக்கிரமங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றாக பின்வலிக்கப் பட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா அரசும் இது தான் செய்தது. பின்னர் வந்த என்.ஸி.பி - காங்கிரஸ் கூட்டணி அரசும் அதே பாணியைத் தான் பின் தொடர்ந்தது.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட பஞ்சாயத்துக்களில் கூட அவர்களுக்கு போட்டியிடவும், வெற்றி பெற்றால் பதவி வகிக்கவும் முடியாது. மேலவளவில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரின் தலையை மேல் ஜாதிக்காரர்கள் வெட்டி கிணற்றில் வீசினர்.

பத்வா முல்லாக்களின் ஏகாதிபத்தியத்தைக் கூறி பத்திரிக்கைகள் கவலைக் கொள்வது, தொடர்கதையாக மாறிய தலித்துகளுக்கு எதிரான அக்கிரமங்கள் மக்களுடைய கவனத்திற்கு வருவதை தடைவதற்கான தந்திரம் என சந்தேகப் படவேண்டியிருக்கிறது.

நன்றி: தேஜஸ் நவ. 1௧5 பக்கம் 47.

Saturday, December 10, 2005

பால் விற்க வாரீயளா?

ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தான். ஊரின் எல்லையில் இருந்த குளத்தங்கரையில் அவன் வீடு அமைந்திருந்தது. அதிகாலையில் எழுந்து பால் கறப்பது தான் அவனுடைய முதல் வேலை. கறந்தபாலை பெரும்பாலும் வீட்டின் முன் அமர்ந்து விற்பது அவன் வழக்கம்.

வாரத்தில் வெள்ளிக் கிழமை மட்டும் ஊரின் உள் சென்று பால் விற்பான். வீட்டின் முன் அமர்ந்து பால் விற்கும் பொழுது கிலோ கணக்கில் நிறுத்தும், ஊரின் உள் செல்லும் பொழுது லிட்டர் கணக்கில் அளந்தும் பால் விற்பது அவனுடைய பழக்கம். ஊரில் பால் விற்று திரும்பும் பொழுது பால் விற்கத் தேவையான உபகரணங்களை ஊரின் உள் இருக்கும் அவனுடைய சகோதரியின் வீட்டில் வைத்து விட்டு வந்து விடுவான்.

அன்றும் பதிவு போல் அதிகாலையிலேயே எழுந்து பால் கறந்தான். அன்று திங்கள் கிழமையாதலால் வீட்டின் முன் அமர்ந்து பால் விற்க எல்லா ஆயத்தங்களையும் செய்ய ஆரம்பித்தான்.

பால் விற்க தேவையான எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்து வீட்டின் முன் வைத்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து விட்டு கடைசியாக பாலை எடுக்க வீட்டின் உள் சென்றான்.

இந்நேரம் பல நாள் இவன் செயலை கவனித்துக் கொண்டிருந்த கள்வன் ஒருவன் மெதுவாக வந்து கல்லாப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அப்பொழுது தான் பாலை வெளியில் கொண்டு வந்த பால்காரன் இதைக் கவனித்து விட்டான். பால்காரனின் கத்தலில் கள்வன் வேகமாக ஓட ஆரமித்தான். அவன் ஓடிய வேகத்தில் எடைக் கற்கள் அனைத்தும் கீழே விழுந்து விட்டன.

கல்லாப் பெட்டியும், தராசுடனும் கள்வன் ஓடி மறைந்து விட்டான்.

பால் வாங்குவதற்கு மக்கள் வர ஆரம்பித்தனர். பால்காரனுக்கோ இக்கட்டான நிலை. பாலும் எடைக் கற்களும் மட்டுமே தற்போது அவன் கையில் உள்ளன. நிறுப்பதற்கு தராசு இல்லை.

விழித்துக் கொண்டிருக்கும் பால்காரனுக்கு பாலை விற்க உங்களின் மேலான ஆலோசனைகளைக் கூறுங்களேன்.

ஏதாவது சீரியசாக நினைத்து வந்தவர்களுக்கு ஸாரி. எப்பொழுதும் சீரியசாகவே இருக்க வேண்டுமா என்ன?

சரி. சரி. வந்ததே வந்தாயிற்று, பாவம் அந்த பால்காரனுக்கு முடிந்த ஆலோசனைகளைக் கூறிவிட்டு செல்லலாமே!

வித்தியாசமான, சிறந்த ஆலோசனைகளுக்கு "தகுந்த" வெகுமதி அளிக்கப் படும்.

பிற்சேற்கை:

"தகுந்த" வெகுமதி அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட நம்ம ஐடியா அய்யாசாமி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தேவைப் பட்டவர்களுக்கு அவரவர் கேட்ட அளவு மிகச் சரியாக அளந்து கொடுத்து மொத்த பாலையும் விற்றுவிட்டார்.

எப்படி அவர் மொத்த பாலையும் விற்றார்?

Monday, December 5, 2005

பாதிக்கப்பட்ட ஜாதிக் கட்சி!

குடைக்குள் மழை என்பதைப் போல, காவி உடுத்திய "நெருப்பு', உமாபாரதி!

அந்த நெருப்பு இப்போது பாஜகவை வறுத்தெடுக்கிறது. ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, அத்வானிக்கு எதிராக சவால் விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. "உங்கள் மகளைப் போன்றவள்' என்று கூறி, வாஜபேயி, அத்வானியைச் சமாதானப்படுத்தி மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார்.

ஆனால், இந்த முறை உமாபாரதி ஏந்தியிருக்கும் ஆயுதம் மிகவும் கூர்மையானது. இழந்துவிட்ட மத்தியப் பிரதேச முதல்வர் பதவி, பிகார் தேர்தலுக்குப் பிறகு தனக்கு மீண்டும் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்த அவரது ஆசையில் மண்ணைக் கொட்டிவிட்டது பாஜக தலைமை. தலைமையின் விசுவாசி சிவராஜ் சிங் சௌஹானை, பாபுலால் கௌருக்குப் பதிலாக முதல்வராக அறிவித்தது. அந்த ஆத்திரம் தாங்க முடியவில்லை.

அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினார்கள். வார்த்தைக் கணைகளால் தலைமையை அடித்து நொறுக்கினார் உமா. தில்லியில் நான்கு பேர் (அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு) அமர்ந்து கொண்டு அடுத்தவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கலாசாரத்தை ஏற்க முடியாது என்றார். அந்த நால்வரும் சேர்ந்து, வாஜபேயி, அத்வானி இயக்கும் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் செல்கிறார்கள் என்றார். அதாவது, கட்சித் தலைவருக்கு சுயமாக சிந்திக்கும் சக்தி இல்லை என்று ஆத்திரமூட்டியிருக்கிறார்.

உமாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாரதீய ஜனதா கட்சியைப் பாதிக்காது என்று அதன் தலைவர்கள் ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அது கட்சியின் வெற்றி வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும்.

வாஜபேயி பிரதமராக இருந்தபோது, அவரை விமர்சனம் செய்தார் கல்யாண் சிங். அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சியையும் துவக்கினார். ஒரு கட்டத்தில் சோனியா காந்திக்குக் கூட புகழாரம் சூட்டினார். 2002-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதன் பிறகு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு, கட்சிக்குள் இழுக்கப்பட்டார் கல்யாண் சிங். ஆனாலும் கூட, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பாஜகவின் பலம் 59-ல் இருந்து 10 ஆகக் குறைந்தது.

பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்யாண் சிங், உ.பி.யில் பாஜகவைப் பலவீனப்படுத்தும் அளவுக்குப் பலமுள்ளவராக இருந்தார். அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க, தொண்டர்கள் ஆதரவு பெற்ற தலைவராக இருப்பவர் உமாபாரதி. அவரும், லோத் என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

ஒழுங்கு தவறியதாக தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தான் ஏற்கப்போவதும் இல்லை, அங்கீகரிக்கப்போவதும் இல்லை என்று சொல்கிறார் உமா. தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கிறார். "ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அருண்ஜேட்லி ஆஜராகவில்லையா? குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக கட்சிப் பத்திரிகையில் மகாஜன் கடிதம் எழுதியது தவறில்லையா? தில்லி மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்கட்சி தகராறுதான் காரணம் என்று சுஷ்மா குற்றம் சாட்டியது மட்டும் நியாயமா? ஜின்னா பற்றி அத்வானி சொன்னது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டதா? அவர்கள் மீதும் விசாரணை நடத்துங்கள்' என்று ஆவேசப்பட்டிருக்கிறார் உமாபாரதி.

முக்கியத் தலைவர்களை முரட்டுக் காளைகளாகவும், அவர்கள் குறி வைக்கும் "ஆடு' -எனத் தன்னையும் சித்தரித்து இன்னும் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்.

கட்சிக்குள் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக(பாவம் பங்காரு லக்ஷ்மணன்) முக்கியமான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார் அவர். குஜராத்தில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா (தற்போதைய மத்திய அமைச்சர்) புறக்கணிக்கப்பட்டதால்தான் காங்கிரஸில் சேர்ந்தார். அதேபோல, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக கட்சிக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், உமா விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜக தலைமை இந்த முறை மிக உறுதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், கட்சியில் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று உணர வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கருதும் பாஜக தலைவர்களும் உண்டு. வெளிப்படையாக அதைச் சொல்லாவிட்டாலும், பிகாரின் புதிய துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பாஜகவின் சுஷில் மோடி போன்ற தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இப்படித்தான் புலம்புகிறார்கள். "பிகாரில் கிடைத்த வெற்றியை ஆதாரமாக வைத்து, கட்சிக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ம.பி.யில் கை வைத்து பிகார் வெற்றியை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். பாபுலால் கௌர் இன்னும் சில காலம் தொடர அனுமதித்திருக்கலாமே. அப்படி அவசரமாக முதல்வரை மாற்ற வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது?' என புலம்புகிறாராம் சுஷில் மோடி.

உமாபாரதியின் குருவான உடுப்பி பெஜாவர் மட சீயர், தன் சிஷ்யை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முறையானது அல்ல என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சங்கப் பரிவாரங்கள் உமா மீது பரிவு காட்டுவதாக இல்லை. உள்கட்சி விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் ஆகிய இரண்டு அமைப்புகளுமே ஒதுங்கிக் கொண்டுவிட்டன. மத்தியப் பிரதேச பாஜக விவகாரங்களில் ஆர்எஸ்எஸ்ஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் சோனி தலையிடுவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சனுக்கு கடிதம் எழுதினார் உமா. அதை பத்திரிகைகளுக்கும் கொடுத்துவிட்டார். அதனால், ஆர்எஸ்எஸ் அவர் மீது கடும் ஆத்திரத்துடன் இருக்கிறது.

ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா உமாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"கர்வம் கொண்ட சில தலைவர்களின் திருப்திக்காக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக கட்சித் தலைமை எனக்கு உத்தரவாதம் தர வேண்டும். அதாவது, புதிதாக வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்குள் சாதி, மத, இனப்பாகுபாடுகளை அகற்ற வேண்டும். பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் மற்ற தலைவர்களுக்கு எதிராக செய்தி கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பவை அந்த நிபந்தனைகள். ஏற்கெனவே, கடந்த முறை தான் கட்சிக்குள் சேர்க்கப்பட்டபோதே இந்தக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதாக தலைமை உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என்று கூறியிருக்கிறார்.

சண்டைக் கோழி உமா, சமாதானமாகச் செல்லும் மனநிலையில் இல்லை. "நான்தான் உண்மையான பாஜக' என்று அவர் கூறிக்கொண்டாலும், அடுத்துவரும் மாதங்களில் தனியாக மாநிலக் கட்சி துவக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை பலவீனப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாத இறுதியில் பாஜக தலைவர் அத்வானி தனது மகுடத்தை இறக்கி வைக்கப் போகிறார். இப்போது, உமாவை ஓரங்கட்டிவிட்ட நிலையில், நால்வர் அணி (அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், சுஷ்மா, வெங்கைய நாயுடு) தங்களுக்குள் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடும். அதற்குக் குறுக்கே நிற்கும் ஆர்எஸ்எஸ் ஆசி பெற்ற முரளி மனோகர் ஜோஷியை வீழ்த்துவது எப்படி என்று அவர்கள் சிந்தனை அடுத்த பாதையில் திரும்பக்கூடும்.

ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்கும் முன்பு, உண்மையான கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து வந்த பாஜக, இப்போது "காங்கிரஸ் கலாசாரத்துக்கு' முற்றிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்டது. அதனால், மீண்டும் ஒரிஜினல் கட்டுப்பாட்டுக்குத் திரும்புவது என்பது பாஜகவுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

உமாபாரதி ஒரு போராளி. அவரை எளிதில் அடக்கிவிட முடியாது. ஒரு உமாபாரதியை ஒழித்துக் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதைவிட, இன்னும் பல உமாபாரதிகள் உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதில் தனது கவனத்தைத் திருப்புவதே பாஜகவின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

- நன்றி : தின மணி

எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே!

Saturday, December 3, 2005

வளர்ச்சிப் பாதையில் இந்தியா!

வருங்கால இந்தியா எவ்வாறு இருக்கும்?

ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது. சில கிரிமினல் அரசியல்வாதிகளின் ஊழலால் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட சுமார் 50 ஆண்டுகள் பின் தங்கி இருக்கும் நாம் வருங்காலத்தில் மற்றவர்களுக்கு சமமாக எல்லாத்துறையிலும் முன்னேற முடியுமா என்பது நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருத்தரின் மனதில் எழும்பும் மிகப் பெரிய சந்தேகமாகும்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில் முதலில் அந்நாடு தன்னிறைவு அடைய வேண்டும். முக்கியமாக தனக்கு தேவையான சாதனங்களுக்கு மற்றவரின் முன் கையேந்தும் நிலை மாற வேண்டும். இது சாதாரண ஒரு மனிதனில் ஆரம்பித்து ஒரு நாடு வரை எல்லாவற்றுக்கும் பொதுவான விஷயமாகும்.

அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தி என்னவெனில்,
சமீப காலங்களில் இந்தியா ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களில் தனக்கு தேவையான சாதனங்களை தானே தயாரித்து அதனை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி(விற்கும்) செய்யும் நிலையை சமீப காலங்களில் எட்டியுள்ளது தான். இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் ஊழல் ராஜாக்களின் பிடியில் கைப்பாவையாக இருக்கும் இந்தியாவில் இது ஒரு மாபெரும் சாதனையாகும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் சவாலாக இருப்பது பாதுகாப்புத் துறையாகும். முக்கியமாக இத்துறையில் எந்நாடு மற்றவரை எதிர் பார்க்காமல் வித்தியாசமான பாதுகாப்பு சாதனங்களை தன்னால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை உலகுக்கு காட்டுகிறதோ அந்நாடு உலகின் முன் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அமெரிக்கா உலகில் இறுமாந்து நிற்பதற்கு இது தான் காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்த வரை கடந்த காலங்களில் நமது பாதுகாப்பு தளவாடங்களுக்கு மற்றவரைச் சார்ந்து நிற்கும் நிலை இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு தான் வருங்கால உலகிற்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் இன்றைய உலக அதி பயங்கர தீவிரவாதி அமெரிக்கா, ராணுவ தளவாடங்களை நமக்கும் அதே நேரத்தில் நமக்கு சவாலாக இருக்கும் பாகிஸ்தான் போன்ற சுற்று புற நாடுகளுக்கும் விற்று தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொண்டது. (சகோதரர்களுக்கிடையில் குழப்பமும், பிரச்சினயும் என்றும் நிலை நின்றாலே மூன்றாம் மனிதனுக்கு அங்கு இடமிருக்கும் என்ற சாதாரண மூன்றாந்தர சிந்தனை).

இந்நிலைக்கு இதோ இந்தியா ஆப்பு வைக்க ஆரம்பித்து விட்டது.

ஆம். இன்றைய மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியில் உருவான ஆகாஷ் ஏவுகணையை நேற்று இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். இது நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஓர் மைல் கல்லாகும்.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் ஓர் மிகப் பெரிய சாதனையை மிக அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இது நிச்சயம் நமது வளர்ச்சிக்கு உறு துணை புரியும். அதே நேரம் கவனிக்கப் பட வேண்டிய மற்றொரு விஷயமும் உண்டு. உலகில் எந்த நாடும் தன்னை விட மிஞ்சுவதை என்றுமே உலக அண்ணன் அனுமதித்ததில்லை. அதற்கு சோவியத் யூனியனிலிருந்து பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும். தனக்கு சவாலாக வளரும் என்று தோன்றினால் அந்நாட்டை எந்த அயோக்கியத்தனம் செய்தாவது அடித்து வளர விடாமல் தடுப்பதில் அது கவனம் செலுத்தும்.

சமீப காலங்களில் இந்தியாவுடன் அண்ணன் நெருங்குவதற்கு காரணமும் அது தான். ஆசியாவில் சோவியத் யூனியன் உடைந்த பிறகு சொல்லப் படும் ஒரே சக்தியாக வளரும் சீனா தான் அதற்கு காரணம். நாளை ஏதாவது காரணம் கூறி இந்தியாவிற்கு எதிராக களமிறங்காது என்பதும் நிச்சயமில்லை.

இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தந்திரமாக நீங்கினால் வரும் காலங்களில் இந்தியா உலகில் ஓர் பெரும் சக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதற்காக இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உழைப்போம். வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்!

Wednesday, November 30, 2005

ஓர் வழிப்போக்கனின் புலம்பல்கள்

திருவாளர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் பா. ஜனதா சிறுபான்மை(!) அணியின் தேசிய பயிற்சி முகாமில் பேசிய வித்தியாசமான சில கருத்துக்களும் ஓர் வழிப்போக்கனின் புலம்பல்களும்:

//சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பா.ஜனதா பற்றி காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் தவறாகப் பிரசாரம் செய்து வருகின்றன.//

அப்படியா! சே! ரொம்ப தப்பாச்சே!

//இந்தியா அனைத்துத் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ஜனதா கட்சியின் நோக்கம்.//

அது தான் கடந்த உங்கள் ஆட்சியில் நடந்த சவப்பெடி ஊழல் பற்றி அறிந்த போதே தெரிந்து கொண்டோமே!

//அப்படி இருக்கும் போது, சிறுபான்மையினரின் நலனைக் கருதாமல் இருக்கமாட்டோம்.//

ஓ! உங்கள் குடும்பத்தில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் போன்ற, சிறுபான்மையினரின் நலனிற்காகவே இயங்கும் - சிறுபான்மை அழிப்பு அமைப்புகளைப் பற்றி நன்றாகத் தெரியுமே.

//குறிப்பிட்ட இனத்தை மட்டும் உயர்த்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல.//

காஞ்ஜி மடத்தின் காதுகளில் இது விழவில்லையே? (விழுந்தாலும் பரவாயில்லை. கேட்டால் "மற்ற இனத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல" என்று கூறியதாக கூறி சமாளித்துக் கொள்ளலாம்.)

//உடலில் சிறிய உறுப்புதானே என்று அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் முழுமையான உடல்நலனைப் பெறமுடியாது.//

இது சாகா (தடி, சூலாயுதம், வாள், துப்பாக்கி, குண்டு போன்றவற்றால் சிறுபான்மையினரை பாதுகாக்க(!) கொடுக்கப் படும் பயிற்சி) வகுப்புகளில் சங்பரிவார உறுப்பினர்களுக்கு கொடுக்கப் படும் ஆரோக்கிய ஆலோசனையல்லவா?

//அதுபோல்தான் இந்தியா முன்னேற வேண்டும் என்றால் சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும்.//

உயிரோடு இருந்தால் தானே முன்னேறுவதற்கு!

//பா.ஜனதா பற்றி சிறுபான்மையினரிடம் காணப்படும் தவறான கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்.//

எப்படி?

//இந்தக் கட்சியுடன் சிறுபான்மையினர் இணைந்து செயல்பட வேண்டும்.//

அதற்காக "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எல்லோருக்கும் ஆளுக்கொரு பதவி கொடுக்க முடியுமா?

//அப்போதுதான் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பா.ஜனதா கட்சி முற்படும்.//

ஆகா எப்படிப் பட்ட முற்போக்கான கருத்து. ஒரு நாட்டில் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை இவர்களைக் கண்டு படிக்க வேண்டும். நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் ஒன்று போல் பாவிக்கும் இந்த உயர்ந்த உள்ளம் இங்கு எந்த கட்சிக்கு இருக்கிறது - எங்களுக்கு ஓட்டளித்தால் மட்டுமே உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படுவோம் என்று கூறும் உயர்ந்த உள்ளம்.
நான் இதற்கு தயார். ஆனால் ஒரு நிபந்தனை "முக்தார் அப்பாஸ் நத்வி" யைப் போல் எனக்கும் ஒரு பதவி வேண்டும் - பா.ஜனதா அகில இந்திய தலைவர் பதவி, ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி.(தலையை சொறிந்து கொண்டு ஹி ஹி கூறுவதாக நினைத்துக் கொளுங்கள்)


//சிறுபான்மையினரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஓட்டு வங்கிகளாகத்தான் கருதுகின்றன.//

அப்ப இதற்கு முந்தைய வரியின் அர்த்தம் என்ன? ஓ! இது கோரிக்கைக்ளை நிறைவேற்ற தரப் படும் லஞ்சமா? ஆமாம் நாட்டின் உயிர் மூச்சான ராணுவத்தினரின் இன்னுயிரை இழந்த உடம்பை வைக்கும் சவப்பெட்டி விஷயத்திலேயே லஞ்சம் வாங்கியவர்களாயிற்றே நீங்கள். சரி! சரி! நீங்கள் ஓட்டுக்காக கட்சி நடத்துபவர்களல்ல, ஊழலுக்காக கட்சி நடத்துபவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

//உண்மையிலேயே இந்த மக்கள் மீது இந்தக் கட்சிகளுக்கு கரிசனம் இருந்து இருந்தால் கடந்த 58 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களை முன்னேற்றி இருப்பார்கள்.//

ஆ! உங்களால் இப்படி கூட சிந்திக்க முடியுமா?

//முஸ்லிம், கிறிஸ்தவர்களில் படிப்பறிவு விகிதம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் இன்னும் குறைவாகவே உள்ளது.//

அட இங்கப் பார்ரா! ஆடு நனைகிறதென்று ஓநாய் ...............

//இந்தக் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக இருப்பதில் இருந்து சிறுபான்மை மக்கள் அனைவரும் விடுபட வேண்டும்.//

கண்டிப்பாக சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டிய விசயம் தான். விடுபட்டு பின் என்ன செய்வதாம். ஆங்! நம்ம பழைய சித்தாந்தம். ஓட்டளித்தால் உங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். அல்லது யாருக்கும் ஓட்டளிக்காமல் பேசாமல் இருந்து விட வேண்டும். என்ன ஒரு கரிசனம் சிறுபான்மையினர் மீது!

//இந்தியாவில் 35 சதவீதம் பேர் இன்னும் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள்.//

அது தானே உங்கள் பலம்.

//2 லட்சத்து 60 ஆயிரம் கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதிகள் இல்லை. பீகாரில் 60 சதவீத வீடுகளுக்கு இன்னும் மின்சார இணைப்பு தரப்படவில்லை.//

அப்ப இதெல்லாம் உங்களுக்கும் தெரியுமா? "முஸ்லிம் தீவிரவாதிகளையும்","பாகிஸ்தான் உளவாளிகளையும்" பற்றி மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரி தவறாக நினைக்காதீர்கள் ஒரு கேள்வி - நீங்கள் மத்தியில் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது இந்தியா ஒளி வீசியதாக கூறினார்களே? நீங்கள் ஆட்சியிலிருந்து இறங்கியவுடன் கிராம சாலைகளையும், வீட்டு மின் இணைப்புகளையும் துண்டித்து விட்டார்களோ?

//"கமர்கட்'' மிட்டாய்களை குழந்தைகளிடம் காட்டுவது போல் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தரப் போவதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.//

அது ஏமாற்றத்துடனேயே வளரும் குழந்தை, வளர்ந்த பின் எப்படி தன்னிடம் பரிமாறும் என்பதைக் குறித்து சிந்திக்காத பெற்றோர் செய்யும் தவறு. அக்குழந்தைக்கும் ஒரு எதிர்காலம் உண்டு என்றும், நாளை தமது வயோதிக காலத்தில் தம்மை அதிகாரம் செய்யப் போவது இக்குழந்தை தான் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத இன்றைய அதிகாரத்தில் இருப்பவர் செய்யும் மிகப் பெரிய சந்திப் பிழை.

//நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி செய்யாததை சோனியா செய்யப் போகிறாரா? //

அதானே. செய்து விடுவாரா என்ன? அல்லது நாங்கள் இருக்கும் போது செய்ய விட்டு விடுவோமா என்ன?. வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடப்பாக்க முயற்சித்த போது எங்கள் முழு ஒத்துழைப்பும் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பிய எங்கள் வீர வரலாற்றை அந்தளவுக்கு சோனியா அறியாமலா இருப்பார்?

//எதையாவது கூறி சிறுபான்மையின மக்களை சமாதானப்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.//

அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன் நம்முடைய கோர முகத்தை மறைக்கவேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது கூட, "தவறான இடத்தில் உள்ள சரியான" ஆளான அன்பர் வாஜ்பாய் அவர்களும், தன் தாய் நாட்டில்(பாகிஸ்தான்) போன போது அடக்க முடியாத தாய்நாட்டுப் பற்றில் தன்னை மறந்து உண்மைகளை கூறிய ர(த்)த யாத்திரை விரும்பி அத்வானி அவர்களும் தங்களை உருவாக்கி விட்ட தாய்(ஆர்.எ.எஸ்) சங்கத்தின் நாக்பூர் மாநாட்டில் தாங்கள் ஒரு நாட்டின் முதன்மையான - முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், உலகம் தங்களை உற்று நோக்கும் என்பதை கூட சட்டை செய்யாமல் அரை –டவுசருடன் நின்று உறுதி மொழி எடுத்தது போல் அவ்வபோது தாய் சங்கம் போய் உறுதி மொழி எடுத்துக் கொண்டு நம் நிலைபாட்டில் உறுதியுடன் நிலைத்து நிற்க வேண்டும்.

//இந்துத்துவா என்பது மத ரீதியான அடையாளம் கிடையாது. கலாசார ரீதியான அடையாளம் அது.//

எந்த கலாச்சாரம்? ஆரிய கலாச்சாரமா? கண்டிப்பாக இந்திய கலாச்சாரம் இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!

//மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது.//

இத முதலிலேயே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே. அதற்காக இவ்வளவு சுற்றி வளைக்க வேண்டுமா?

//அப்படி அளித்தால் நாடு மீண்டும் பிளவு பட்டுவிடும்.//

நாடு பிளவு படுமா? அல்லது ஆரிய வந்தேறிகளின் பிழைப்பில் மண் விழுமா? நாட்டை பிளவு படுத்தியவர்கள், பிளவு படுத்துபவர்கள் நாடு பிழவு பட்டு விடும் என்று கவலைப் படுகிறார்கள். எங்கோ உதைக்கவில்லை?

//பெண்களுக்கு அனைத்திலும் உரிமை உண்டு.//

அப்ப ஆண்களுக்கும், அரவாணிகளுக்கும்.?

//நாங்கள் பாலினப் பாகுபாடு பார்ப்பதில்லை.//

மேலே உள்ள கேள்வியை திரும்பப் பெறுகிறேன். அதோடு இனி ஆண்களும், அரவாணிகளும் குழந்தைப் பெற முயற்சிக்க வேண்டும் என்ற கட்டளையை உங்கள் தீர்மானங்களில் சேர்க்க கோரிக்கை வைக்கிறேன்!

//திருமணம், விவாகரத்து, ஒருவனுக்கு ஒருத்தி, சொத்து விவகாரத்தில் சமத்துவம் ஆகியவற்றுக்காக பொது சிவில் சட்டம் தேவை.//

ஒருத்திக்கு ஒருவன் என்பதை சேர்க்கவில்லையே ஏன்? நடைமுறை சாத்தியமில்லாத விஷயமோ?

//மத விஷயங்களில் இந்தச் சட்டம் தலையிடாது.//

அப்ப இந்த சட்டம் இஸ்லாமியர்களைப் பாதிக்காதா? பின் எப்படி அது "பொது" சிவில் சட்டமாகும். சட்டம் பொதுவாக இல்லையெனில் "பொது" என்ற வார்த்தை எதற்காக? எடுத்து விடலாமே? (பாவம் தலைவர், இஸ்லாம் எல்லா காரியங்களுக்கும் முஸ்லிம்களுக்கு தீர்வு கூறுகிறது என்பதை அறியாமல் இந்த வார்த்தையை விட்டு விட்டார்!)

//சிறுபான்மையினரின் மத நம்பிக்கை , சடங்குகள், நடவடிக்கைகள் அனைத்துக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும்.//

மதசார்பற்ற இந்தியா இவ்வுரிமையை இந்தியா சுதந்திரம் அடைந்த போதே இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் கொடுத்து விட்டது. இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி அந்த அடிப்படை உரிமையை 58 வருடங்களுக்கு பிறகு அங்கீகரித்திருப்பதாக கூறுகிறது. என்ன கொடுமையப்பா இது?

//மத விஷயங்களில் நாங்கள் தலையிடமாட்டோம்.//

அப்ப இது வரை தலையிட்டிருந்தீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

//ஆனால் மத மாற்றம் செய்வதை ஏற்க முடியாது.//

எந்த கேடுகெட்டவன் அதைச் செய்கிறான். விஷ்வ ஹிந்து பரிஷத் மற்ற மதத்தினரை ஹிந்துவாக (நிச்சயமாக பிராமணனாக அல்ல மக்களே!) மத மாற்றம் செய்கிறார்களே! அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஓ! அது மதம் மாறியவர்களை தாய் மதத்திற்கு(எது சூத்திரனாகவா) மாற்றுவதல்லவா?

//கிரிக்கெட்டில் அசாருதீன், டென்னிஸ் விளையாட்டில் சானியா மிர்சா ஆகியோரால் நாங்கள் பெருமை அடைகிறோம்.//

எதற்கு? எங்களுக்கு விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்தை "சூதாட்டம்"(மேட்ச் பிக்சிங்) மூலம் கெடுத்ததற்காகவும், ஏற்கெனவே கலை என்ற பெயரில் ஆபாசத்தை கூவி விற்று, இந்நாட்டின் இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல், வக்கிர எண்ணங்களிலேயே ஊறவைத்து நாட்டிற்கு மிகப் பெரிய சேவையாற்றிக் கொண்டிருக்கும் சினிமாத் துறையை மிஞ்சும் அளவில் விளையாட்டுத் துறையையும் ஆக்கியதற்கா? பட்டியலில் தமிழ் நாட்டின் தன்மான சிங்கங்கள் குஷ்பு, சுகாசினி பெயர்கள் விடுபட்டு விட்டனவே! மறந்து விட்டதோ?

//காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்.//

காஷ்மீர் பிரச்சினையில் நடுநிலையாளர்கள் காஷ்மீர் மக்களின் சார்பாக பேசுவதற்கு, காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றதல்ல - அந்நாட்டு மக்கள் இரு நாட்டு அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப் பட்டார்கள் என்பதற்கான ஒரே தெளிவிது. கண்டிப்பாக இச்சட்டம் மாற்றப் பட்டே ஆகவேண்டும்.

ஆமாம் அது என்ன? காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு மாநில அந்தஸ்து. அப்படியெனில் காஷ்மீர் இன்னும் முறையாக இந்தியாவுடன் இணைக்கப் படவில்லையா? எனில் நம் நாட்டு இராணுவம் எதற்காக அங்கு போய் நிற்கிறது? ஏன் நம் பட்ஜெட்டில் பெரும் பங்கு அவர்களுக்கு செலவளிக்க வேண்டும்? ஏன் நம் நாட்டு இராணுவ வீரர்களின் பொன்னுயிர்கள் அனாவசியமாக அங்கு இழக்கப் பட வேண்டும்? என்ன தான் நடக்கிறது நாட்டில்? என்னமோ போ!

//அங்கு யாராலும் இப்போது ஒரு செண்டு நிலம் கூட வாங்க முடியாது.//

அப்படி சட்டம் வைத்திருப்பது நம் இந்திய அரசா? அல்லது காஷ்மீர் அரசா? காஷ்மீர் அரசு எனில், அதை மாற்றும் உரிமை கூட நம் இந்திய அரசுக்கு இல்லையா? இந்திய அரசு எனில், எதற்காக அவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு சட்டம். காஷ்மீரிகளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?(ஹி ஹி நான் சுகாசினி இல்லீங்க! இது சிந்திப்பதற்காகத் தான் - காஷ்மீர் விஷயத்தில் இரு அரசுகள் செய்யும் அநியாயங்களை)

//பா.ஜனதா கட்சி இனி ஆட்சிக்கு வரும்.//

இந்திய மக்கள் கோம்பயர்களாக இருந்தால்.......

//சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதாதான் உண்மையான பாதுகாப்பைத் தரும்.//

இது தான் வசனங்களிலேயே டாப்புங்கோ!
எப்படி? என்று கேட்காதீங்க! பாருங்க - குஜராத்தை. அப்படி சவக்குழியிலும், அகதிகள் முகாமிலும் உண்மையான பாதுகாப்பை நிச்சயம் தருவார்கள்!

Saturday, November 26, 2005

இது தான் பத்திரிக்கை சுதந்திரம்!

அல் ஜசீரா!

ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை!

பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் பிடித்த தொலைக் காட்சி சானல்.

உண்மைகள் உரைப்பவர்களையும், அதற்கு துணை நிற்பவர்களையும் என்று தான் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் பிடித்திருக்கிறது? வழக்கம் போலவே உண்மையை வெளிக் கொணர்ந்த ஒரே காரணத்திற்காக அல் ஜசீரா தொலைக் காட்சி அமெரிக்காவிற்கு "தொல்லைக் காட்சி"யாக மாறிப் போனது. அன்றிலிருந்து இன்று வரை பல இடையூறுகளையும் சமாளித்து நீதிக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கும் அல் ஜசீராவின் இந்த குறுகிய கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமானால் நாம் அதிசயித்து நின்று விடுவோம்.

ஆப்கன் யுத்தத்திற்குப் பிறகு சமாளித்துக் கொண்ட அமெரிக்கா ஈராக் யுத்தத்தின் போது பாக்தாதினுள் நுழைந்த பிறகு, அவர்களின் சிங்கியடி சானல்களைத் தவிர மற்ற எல்லா சானல்களையும் வெளியேற உத்தரவிட்டது. அதையும் மீறி பல யுத்தச் செய்திகளை - அப்பாவி மக்களுக்கு அமெரிக்கப் படையால் இழைக்கப் பட்ட அநியாயத்தை - வெளியிட்ட ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடம் ஆப்கன் யுத்தத்தின் போது தாக்கப் பட்டது போல் தாக்கப் பட்டது. அமெரிக்கப் படையினர் அட்டூளியம் செய்து கொண்டிருப்பதை நேரடியாக ஒளி பரப்பிக் கொண்டிருந்த ஒரு ஜசீரா நிருபர் அமெரிக்க வல்லூறுகளால் தாக்கி கொல்லப் பட்டதை அதே ஜசீரா நேரடியாக ஒளிபரப்பியது.

உலகத்திற்கு ஜனனாயகத்தைப் படிப்பித்துக் கொடுக்க வந்தவர்களாலேயே இந்த ஜனனாயக அத்துமீறல், பத்திரிக்கை சுதந்திரத்தை அடித்து ஒடுக்கும் செயல் நடத்திக் காட்டப் பட்டது. இதனையே மற்றொரு நாடு செய்திருக்குமானால் அதற்கு எதிராக இதே ஜனனாயக காவலன் தலைமையில் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படும் மற்ற ஜனனாயக காவலர்களும் திரண்டிருப்பார்கள்.

என்ன செய்தாலும் அதனை வெளிக்கு கொண்டு வரும் ஜசீராவை எப்படி இத்தனை நாளும் விட்டு வைத்தார்கள் என்று பல முறை நினைத்ததுண்டு. தனக்கு எதிராக நிற்கும் எந்த சக்தியையும் அழித்தே பழக்கப் பட்ட புஷ்ஷிற்கு மற்ற காரியங்களில் இறங்கியது போல் ஜசீராவிற்கு எதிராக இறங்க முடியவில்லை அல்லது அதற்கு எதிராக குற்றங்களை அடுக்க முடியவில்லை(இடையில் உசாமாவிற்கும் ஜசீராவிற்கும் தொடர்புண்டு என்று ஒரு செய்தியை எப்பொழுதும் போல் வெள்ளோட்டமாக விட்டுப் பார்த்தார். அது மற்றவர்களிடமிருந்து எதிபார்த்த ஆதரவைப் பெற்றுத் தரவில்லை).

யோசித்த புஷ் இனி மற்றவர்களின் ஆதரவுடன் அதனை ஒழிப்பது நடக்காத காரியம் என்பதைப் புரிந்து, தனது செல்லப் பிள்ளையின் துணையுடன் ஜசீராவின் எல்லா அலுவலகங்கள் மீதும், கத்தரில் இருக்கும் அதன் தலைமையகம் மீதும் ஒரே நேரத்தில் குண்டு போட்டு ஒழிக்க திட்டமிட்டிருக்கிறார். இது நடந்தது ஒரு வருடத்திற்கு முன். என்ன காரணத்தினாலோ அதனை உடனே நிறை வேற்றவில்லை. அல்லது அதனை நிறைவேற்ற காலம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனை எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிக்கை எல்லா விதமான ஆதாரங்களையும் சேகரித்து இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தது.

பிளைர் 16 ஏப்ரல் 2004 அன்று வாஷிங்டன் சென்றிருந்த போது புஷ் பிளைரிடம் "கத்தரில் இருக்கும் ஜசீராவின் தலைமையகத்தின் மீது குண்டு வீச வேண்டும்" என்று கூறியதாக டெய்லி மிர்ரர் கூறுகிறது.

சுதாரித்துக் கொண்ட புஷ் உடனே பிளேரை பிடித்து உலுக்க தற்போது இங்கிலாந்து அரசாங்கத்தால் இங்கிலாந்து கேபினட் அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் கியோகின் மற்றும் லெயோவின் மீது அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். மட்டுமல்ல தொடர்ந்து இது சம்பந்தமான தகவல் வெளியிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அச்செய்தியை தொடர்ந்து வெளியிட முடியாமல் செய்துள்ளனர்.

பாக்தாதில் அமெரிக்கப் படையினரால் குண்டு வீசி

கொல்லப் பட்ட அல் ஜசீரா நிருபர் தாரிக் அயுப்.

இதிலிருந்து தெளிவாக அல் ஜசீராவைத் தாக்க திட்டமிட்டது தெரிய வருகிறது. மட்டுமல்ல இப்பொழுது, இதற்கு முன் ஏப்ரல் 2003 ல் பாக்தாதில் வைத்து அமெரிக்கப் படையினரால் குண்டு வீசி கொல்லப் பட்ட ஜசீரா நிருபர் தாரிக் அயுபின் மரணத்தின் மீதும், நவம்பர் 2001 ல் ஆப்கன் தலைநகர் காபூலில் ஜசீரா நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது மிசைல் மூலம் தாக்குதல் நடத்தியதிலும் கூறப் பட்ட காரணத்தின் மீது சந்தேகம் வலுக்கிறது.

தான் கூறுவதை மட்டும் வெளியிடும் ஊடகங்களை வளர விடுவதும், உண்மைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்களை அழிக்க முற்படும் இந்த ஏகாதிபத்திய, சர்வாதிகார செயல் பாடு நல்லதற்கல்ல. இப்படியே உண்மைகள் மறைக்கப் பட்டு, அதற்காக பாடுபடுபவர்கள் அழித்தொழிக்கப் படுவதும், அதனைக் கண்டு உலகம் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதும் உலகின் அழிவிற்கே வழி வகுக்கும்.

வாழ்க அமெரிக்க ஜனனாயகம்!

அமெரிக்காவிற்கு என்றுமே எழுதப் படாத ஓர் சட்டம் உண்டு. உலகின் ஒரே வல்லரசாக தான் மட்டுமே விளங்க வேண்டும் என்பது தான் அது. "ஒரு உறையில் இரண்டு கத்தி" இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கமே தான். அதற்கு எந்த கீழ் தரமான வேலையை செய்வதற்கும் அதன் அதிபராக வருபவர்கள் தயங்கியதில்லை.

எதிரியாக நினைக்கும் நாட்டை ஒன்று எலும்புத்துண்டைக் காட்டி தனக்கு விசுவாசமான வளர்ப்பு நாயாக ஆக்கி விடுவார்கள். அல்லது ஏதாவது காரணங்களைக் கூறி அந்த நட்டின் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.(அயல் நாட்டு காரியங்களில் தலையிடக் கூடாது என்ற சட்டம் எல்லாம் அவர்களுக்கு இல்லை!).19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை சோவியத் யூனியனை உடைப்பதற்கு "பனிப் போர்" நடத்தியது இதனடிப்படையில் தான்.

சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கு தன்னால் பாலூட்டி, சீராட்டி வளர்த்து விடப்பட்ட உசாமா என்ற வளர்ப்பு குழந்தை சோவியத் உடைந்து போன பிறகு தன் நெஞ்சிலேயே அது ஏறி மிதிக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. சோவியத் சின்னாபின்னமான பிறகு உலகின் ஒரே வல்லரசு என்று நினைத்துக் கொண்டிருந்த அதன் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது ஒசாமா என்ற அதன் செல்லக் குழந்தை.

20 ஆம் -ணூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகில் அதி வேகமாக வளர்ந்த இஸ்லாத்தைக் கண்ட போது அதற்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது. இனி தன் இடத்தை பிடிக்க ஒன்று வரும் எனில் அது நிச்சயமாக அமைதிப் புரட்சியின் வழி முன்னேறும் இஸ்லாமாகத் தான் இருக்கும் என சரியாக கணித்த அது அன்றிலிருந்து இஸ்லாத்தினை அழிப்பதற்கான எல்லா வழிகளையும் ஆராயத் தொடங்கியது.

அதில் மிக இலகுவான வழியாகத் தோன்றியது தான், தான் ஏற்கெனவே உருவாக்கி விட்டு தன் மார்பில் ஏறி குதித்துக் கொண்டிருக்கும் செல்லப் பிள்ளையான உசாமாவைப் பயன்படுத்திக் கொள்வது. ஆம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தான் அளிப்பதை மட்டும் செய்தியாக வாந்தியெடுக்கும் சில ஊதுகுழல் ஊடகங்களை வைத்துக் கொண்டு மிகச் சரியாக ஓங்கியடித்தது அமெரிக்கா.

கை மேல் பலன் மிக எளிதில் கிடைத்தது. விளைவு ஆப்கன், ஈராக் யுத்தங்கள். அது மட்டுமல்ல ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டத்துடன் கல்லெறிந்த அமெரிக்காவிற்கு ஒரே கல்லில் மூன்று நான்கு மாங்காயாக கனியத் தொடங்கியது. துவண்டுக் கிடந்த பொருளாதாரம் புதிதாக உற்பத்திச் செய்த ஆயுதங்களைப் பரிசீலனையில் செய்துக் காட்டி மற்ற நாடுகளுக்கு விற்று நிமிர்த்திக் கொண்டது. போதாததிற்கு எண்ணெய் வேறு.

இதில் பரிதாபகரம் என்னவெனில் இவ்வளவு மறைமுக திட்டங்களை வைத்துக் கொண்டு "தீவிரவாதத்திற்கு எதிரானப் போர்" என்ற முகமூடியுடன் களத்தில் இறங்கிய அமெரிக்காவிற்கு நடுநிலையாக சிந்திக்க வேண்டிய, நீதிக்கு துணை நிற்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் அதனுடைய வஞ்சக எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் ஆமாம் சாமி போட்டு அது செய்த அக்கிரமங்களுக்கு துணை நின்றது தான். குறைந்த பட்சம் "சோவியத்திற்கெதிராக நீ வளர்த்த உன் செல்லப் பிள்ளைத் தானே உசாமா" என்ற ஓர் சாதாரண எல்லாருக்கும் தெரிந்த கேள்வியைக் கூட அது கேட்க வில்லை.

ஆப்கானுக்கு எதிரான யுத்ததின் போது "உசாமாவை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் நோக்கம்; அது வரை யுத்தம் முற்று பெறாது" என்று கூறி ஆரம்பித்த அமெரிக்கா தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறங்கும் வரை தனது எல்லாவித ஆயுதங்களையும் பரிசீலித்து விட்டு, தாலிபான்கள் ஆட்சியை விட்டு இற்ங்கி உசாமாவைப் போல் ஒளிந்து கொண்டவுடன் அங்கு தனக்கு ஓர் பொம்மையை உட்கார வைத்ததோடு தனது போரை நிறுத்திக் கொண்டது.

உசாமா எங்கே? இன்று வரை கேள்விக்கு பதிலில்லை. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் கண்காணிக்கும் விதத்தில் பூமிக்கு வெளியே சாட்டிலைட்களை நிறுவி உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு சாதாரள அதுவும் தன்னால் வளர்த்தி விடப் பட்ட ஒரு மனிதனை பிடிப்பது முடியாத காரியமா என்ன? நிச்சயம் முடியும். ஆனால் அதுவல்லவே அவர்களது நோக்கம்.

எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அது நிறைவேறியவுடன் வெளியேறினார்கள் அவ்வளவே. இந்த உசாமா உயிரோடு இருக்கும் வரை அமெரிக்காவிற்கு அது இலாபமே! மற்றொரு சமயம் வேறொரு நாட்டிற்கெதிராக உபயோகப் படலாம். நம் நாட்டு அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை தேர்தலுக்குப் பின் அவர்கள் மறப்பது போல், அவர்கள் செய்யும் ஊழல்களை தேர்தல் நேரத்தில் மக்கள் மறப்பது போல் எந்த நோக்கத்தைக் கூறி ஆப்கன் மீது அமெரிக்க போர் தொடுத்ததோ அதனை உலகமே மறந்தது. இப்பொழுதும் இந்த பரிதாப முஸ்லிம் உலகிற்கு இது உறைக்க வில்லை.

எண்ணையில் கண்ணை வைத்து அடுத்து ஈராக்கிற்கு ஓடியது அமெரிக்கா!. இப்பொழுது கூறிய காரணம்: "சதாமிடம் உயிர் கொல்லி ஆயுதங்கள் உள்ளன; அடிமையாக வாழும் ஈராக் ஜனங்களுக்கு சுதந்திரம்"; இந்த நிமிடம் வரை இந்த இரண்டுமே நடக்கவில்லை. என்ன நோக்கத்திற்காக வந்ததோ அந்த நோக்கம் நல்லமுறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஆம் ஈராக் ஜனதைக்கு சுதந்திரம் என்று கூறி இருந்த சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கியது.

தினமும் நூற்று கணக்கான அப்பாவி மக்கள் "தீவிரவாதி" என்ற பெயரால் அமெரிக்க கூட்டுப் படையினராலும், "தேச விரோதி" என்றப் பெயரால் சுதந்திரப் போராளிகளாலும், யாருக்கு அதிகாரம் என்ற பெயரில் மத மௌடீகவாதிகளாலும், வீடு பற்றியெரியும் போது அதில் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளாலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லோருடைய கவனமும் இங்கு இருக்க தான் நினைத்து வந்த எண்ணையில் சரியாக கண்ணை வைத்து காரியங்களை ஆற்றிக் கொண்டிருக்கிறது உலகின் அமைதி விரும்பி.

அமெரிக்காவின் இந்த அதிகார வெறியில் இது வரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தோமானால் உசாமாவும், ஹிட்லரும், சதாமும் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எனினும் தற்போதும் அமெரிக்கா தான் மக்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குகிறது!!! அது போன்ற நடுநிலையான நாடு உலகில் இல்லை!!! வாழ்க அமெரிக்க ஜனனாயகம்! வாழ்க அமெரிக்க சுதந்திரம்! வாழ்க அமெரிக்கா!

Monday, November 21, 2005

சட்டங்கள் ஆள்வதும், பட்டங்கள் செய்வதும்............. எப்பொழுது?

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் மனித குலம் எவ்வளவு தான் வளர்ச்சியடைந்திருந்தாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவது மட்டும் இன்று வரை குறைந்த பாடில்லை. எதில் சமத்துவம் வேண்டுமோ அதைப் பற்றி பேசாமல் எதில் சமத்துவம் காண்பித்தால் பெண்ணினம் சீரழிக்கப் படுமோ அதைக் கூறி, ஆண் பெண் இருபாலரும் உடல் ரீதியாக ஒரே தன்மையினரல்ல என்பதை கண்டுகொள்ளாமல் எங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் கலந்துறவாட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளனரோ அங்கெல்லாம் பெண்கள் ஏதாவதொரு முறையில் கொடுமைப் படுத்தப் படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமிருந்து மானத்தைக் கருதி பெரும்பாலான கொடுமைகள் வெளிப்படுத்தப் படாமல் மறைக்கப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இதில் துணிச்சலுள்ள சில பெண்களால் எப்பொழுதாவது சில விஷயங்கள் வெளிப்படுவதுமுண்டு. இவ்வாறு கூறும் பொழுது சில படித்த முற்போக்குவாதிகளாகவும், பெண்ணியவாதிகளாகவும் தன்னை காட்டிக்கொள்பவர்கள் உடனே இதற்கு எதிராக களமிறங்குவதும் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடும் போது அதற்கு ஏதாவது நொண்டி காரணங்களை கூறுவதும் வாடிக்கை.

அதில் முக்கியமாக பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதற்குக் காரணம் படிப்பறிவின்மையும், முற்போக்கு மனப்பான்மையில்லாததுமே என்று சில படித்த முற்போக்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிய அறிவு ஜீவிகள் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட படித்த முற்போக்கு அறிவு ஜீவிகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதன்மையானதும் அறிவுஜீவிகளும், முற்போக்குவாதிகளும்(லெஸ்பியனுக்கு முதலாவதாக இயக்கம் கண்ட மாநிலம்) நிறைந்த கேரளாவில் சமீபத்தில் வெளிப்பட்டு தற்போது கேரளாவையே கலக்கிக் கொண்டிருக்கும் செய்தியை அப்படியே கீழே தருகிறேன்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்வி பள்ளியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த சுதி என்ற மாணவி சக மாணவர்களால் ராக்கிங் என்ற போர்வையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ரஞ்சித், ஆஷ்லி வர்கீஸ் என்ற 2 மாணவர்களும் சம்பவம் குறித்து தெரிந்திருந்தும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த குற்றத்திற்காக பள்ளி பெண் முதல்வர் மதியம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பள்ளி, தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மிகவும் கொடூரமான முறையில் ராக்கிங் நடந்து வந்துள்ளதாக மாணவ - மாணவிகளின் பெற்றோர்களே கண்ணீர் மல்க கூறியுள்ளனர். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்து பள்ளியில் நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி உயரதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்களும் கண்டும், காணாமலும் இருந்து விட்டனர். வருடந்தோறும் பல மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டிய பிறகு, ராக்கிங் கொடுமையை தாங்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.

இப்படி மாணவர்களின் ராக்கிங் கொடுமை ஒருபுறமென்றால் மறுபுறம் இந்தப்பள்ளியில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக கூறி ஆசிரியர்களே மாணவிகளுக்கு …செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இறுதி தேர்வில் செய்முறை தேர்வுக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் அந்தந்த ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் நினைத்தால் மதிப்பெண்களை கூட்டவோ, குறைக்கவோ முடியும். இந்த ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு பல ஆசிரியர்கள் அப்பாவி மாணவிகளை தங்களது ஆசைக்கு இணங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. …செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் வேண்டுமா? தனியாக என்னை வந்து பார்! என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் கூறுவார்களாம்.

எதுவுமே தெரியாத அப்பாவி மாணவிகளும் ஆசிரியரை சென்று பார்த்தால் தன்னுடைய அறைக்கு வரவழைத்து பிறகு மிரட்டி தனது பசியை தீர்த்துக்கொள்வார்களாம். மிரட்டலுக்கு பணியாவிட்டால் அந்த தேர்வில் பெயில்தான். இப்படி ஏராளமான மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கொடுத்துள்ள செக்ஸ் டார்ச்சர் இப்போது வெளிவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி சில மாணவிகள் தங்களை ஆசிரியர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி தக்க ஆதரங்களுடன் துணைவேந்தரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு மாணவிகளின் புகார் உண்மைதான் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோட்டயம் எஸ்.பி.யிடம் புகார் செய்ய அறிவுறுத்தி பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.யிடம் புகார் செய்ய பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் சில உயர்மட்ட அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பு இருந்தது தான்.

இதன் பிறகும் வழக்கம்போல் அந்த ஆசிரியர்கள் தங்கள் …விளையாட்டுக்களை! தொடர்ந்துள்ளனர். பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவாதத்தோடு அந்த விவகாரம் முடிந்து போனது.

மாணவி சுதி கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு பேபி குரியன், கிரண் என்ற 2 ஆசிரியர்களை பல்கலைக்கழகம் சஸ்பெண்டு செய்தது. ஆனால் அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


முதலில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு வெறிபிடித்த ஆண்கள் மனதில் அந்த சிந்தனையை தூண்டாமல் இருக்க பெண்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இஸ்லாம் பெண்களுக்கு உடலை மறைக்கும் படி அறிவுறுத்துகிறது! இதனை அனுபரீதியாக உணர்ந்து கூறியவர்கள் பலபேர் உண்டு.

பல சரித்திரம் படைப்பதற்கு நல்ல பெண்ணாக வாழ்ந்தால் முடியாது என்ற கருத்துடைய சானியாவையும், கர்ப்பப்பை சுதந்திரத்தை விரும்பும் தஸ்லீமாவையும் போன்றவர்கள் இதற்கு விதி விலக்கு - இப்படிப் பட்ட எண்ணமுடையவர்கள் தனுடலை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதும், இவர்களைப் போன்றவர்கள் தான் இப்படிப் பட்ட ஆண்களுக்கு இடையில் புழங்குவதற்கு அருகதையுடையவர்கள் என்பதும் என் கருத்து - ஏனெனில் அவர்களுக்குத் தான் அதெல்லாம் ஒருப் பிரச்சினையே இல்லையே.

எவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தோன்றுகிறதோ, எவருக்கு மற்றவர் தன்னை கண்ணியமாக பார்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அவர்களையே இஸ்லாம் தன்னுடைய உடலை மூடச் சொல்கிறது.

இதை அனுபவத்தில் உணர்ந்த பிரபல கேரள பெண் எழுத்தாளர் இஸ்லாத்தை ஏற்றபிறகு (இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு தஸ்லீமாவின் கருத்துடைய பல நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், "நான் இப்பொழுது பாதுகாப்பாக உணர்கிறேன்; பர்தா எனக்கு கண்ணியம் வழங்கியுள்ளது;".

இதை இஸ்லாம் கூறினால் அது தவறு. அதையே அண்ணா பல்கலைக் கழகம் கூறினால் அது சரி. என்ன ஒரு கண்ணோட்டம்.

அதுபோல் இப்படிப்பட்ட கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்(அதுவும் இஸ்லாம் கூறிய முறைப்படி தன்னுடலை வெளிக்காட்டாமல் வாழும் பெண்களிடம் கொடுமைப் புரியும் காமக்கொடூரர்களை) என்று இஸ்லாம் கூறினால் அது ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமற்ற செயல்.

அதுவே (தவறு செய்ய எல்லா சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சூழலில்) இத்தவறு செய்யும் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்க வழி செய்யும் படி சட்டமியற்றப் படவேண்டும் என்று திரு. அத்வானி அவர்கள் கூறினால் அது சரி. என்ன மனிதர்கள் ஒன்றுமே புரியவில்லை!

Saturday, November 19, 2005

நாடு முன்னேற - ஒரு சுய பரிசோதனை!

நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவரா நீங்கள்?

எனில் உங்களுக்கொரு சவால்! தமிழ்நாட்டு மந்திரி சபையில் இருந்த, இருக்கின்ற சில மந்திரிகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு மந்திரியின் பெயர்களின் மீதும் அழுத்தி அவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காக எவ்வாறெல்லாம் கஷ்டப் படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது மட்டுமே. பின்னர் இவற்றில் எந்த மந்திரியின் செயல் உங்களுக்கு பிடித்துள்ளதோ அவருக்கு உங்கள் ஆதரவினை பின்னூட்டம் மூலம் குறிப்பிடுங்கள்.

உங்களில் எத்தனை பேர் நம் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் என்பதை அறியும் சிறு முயற்சியே இது!.

திரு. அன்வர் ராஜா

திரு. தனபால்

திரு. ஜீவானந்தம்

திரு. ஜெயக்குமார்

திரு. பாண்டு ரங்கன்

திரு. பன்னீர் செல்வம்

திரு. பொன்னையன்

திரு. செம்மலை

திரு. சண்முகநாதன்

திரு. தம்பி துரை

திரு. வைத்தியலிங்கம்

திரு. வளர்மதி

திரு. வேலுச்சாமி

உங்களுக்கு பிடித்த மந்திரியின் உழைப்பினை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கும் முன் இப்பதிவினுள் கடந்தவர்களைப் பற்றிய ஓர் சிறு கண்ணோட்டம்:

1. மேலோட்டமாக பார்வையிட்டவர்கள் :- சுற்றுலாப் பயணிகள்!

2. ஒன்றிரண்டை திறந்து பார்த்து விட்டு இவனுக்கு வேற வேலையே இல்லை என்று முடித்துக் கொண்டவர்கள் :- இவ்வாறு நாட்டுக்காக குறுக்கு முறிந்து வேலைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் வாழவைக்கும் அப்பாவி குடிமக்கள்!

3. அனைத்தையும் பொறுமையுடன் பார்த்து விட்டு மவுனமாக செல்பவர்கள் :- வெள்ளுடை தரித்த கனவான்கள்(சாக்கடை தன் மீது தெறிக்காமல் கவனமாக இருப்பவர்கள்). இவ்வாறு நாட்டுக்காக குறுக்கு முறிந்து வேலைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் வாழவைப்பதில் இவர்களுக்கு சமப் பங்குண்டு!.

4. அனைத்தையும் பொறுமையுடன் பார்வையிட்டு பிறந்த நாட்டின் மீதுள்ள அக்கறையால் இந்த அவலமான நிலைக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு குறைந்த பட்சம் இப்பதிவினையாவது அனைவருக்கும் தெரிய வைக்கலாம் என்ற நோக்குடன் "+" குறியினை அழுத்தியும், பின்னூட்டமும் இடுபவர்கள் :- வேறு வேலையில்லாத சோம்பேறிகள், பயங்கரவாதிகள், நாட்டைத் துண்டாட நினைப்பவர்கள், அரசைக் கவிழ்க்க சதி செய்பவர்கள் etc....

5. இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள் :- நாட்டில் நடக்கும் அவலங்களை கண்டு மனம் வெம்பி அதனை மாற்ற என்னேரமும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் மட்டுமே!

ஆகா படம் காட்டுறாங்க!

என்ன தான் நடக்குது .......... நடக்கட்டுமே!

பிறந்த வீட்டுக்கு சீமந்தம் கொண்டு வந்த செல்வ மகளுக்கு பிறந்த வீடு எடுத்த ஆரத்தி விழாவினை அவர்களுடைய பிரச்சார தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள்.

மொத்த திரையுலகமும் திரண்டு வந்து (தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாலும் கூட காப்பாத்த முடியாது என்று தீர்க்கதரிசனம் உரைத்த "சூப்பர்!!!!" நடிகர் உட்பட) அடக்க முடியாத ஆனந்தத்தில் தன்னிலை மறந்து வாயில் வந்ததையெல்லாம் கூறி "அன்னையைப்" பாராட்டி நன்றி கூறிய நிகழ்ச்சியை உள்ளம் புழகாங்கிதமடைய யான் கண்டு மகிழ்ந்ததை "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் பரந்த நற்மனப்பான்மையில் என் மனதை விட்டு நீங்காத சரித்திரத்தில் பொறிக்கப் பட வேண்டிய சில காட்சிகளை இங்கு தருகிறேன்.

படித்து விட்டு தமிழ் நாட்டின் தலை எழுத்துக்காக இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமாவது உதிருங்கள்.

"அம்மையாருக்கு" பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப் பட்டது. இதை "தங்கத் தாரகை", கலைத்தாய்", "புரட்சித் தலைவி" அவர்களுக்கு பூரணக் கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்த காட்சி கண்கொள்ளா "திருக்காட்சி"யாக இருந்தது என பிரச்சார தொலைக்காட்சி வர்ணித்தது.

நன்றி கூற வந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் செல்வியின் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் அவரை அழைக்கும் பிரபலமான வார்த்தையைக் கூறி (அம்மா) அழைத்து நன்றி கூறினர்.

அவற்றில் புதிதாக என் மனதைக் கவர்ந்த சில சிங்கிகளும், டுங்கிகளும்:

* எஸ்.வி.சேகர் -- நம்முடைய கலைத் தாய்

* கே.எஸ். ரவிக் குமார் -- திரை உலகின் "பிரம்மா" "நம்ம அம்மா"

பங்சிங் டயலாக் : தியேட்டரெல்லாம் இப்போது "ஜெ ஜெ" வென்று கூட்டம்.

* வரவேற்பு பாடலில் டச்சிங் வார்த்தைகள் : கோட்டைக்கு ராணி நீங்க தாங்க, வெற்றித் தங்கம், போயஸ் தோட்ட அன்னை...

* ஒய். ஜி. மகேந்திரன் -- அன் பாரலல் ஸ்டார் (Un Parallal Star)

* விவேக் -- தமிழ் தாய் வாழ்த்து - எங்கள் தாய்க்கு வாழ்த்து

கவி(ழு)தை : சினிமா என்னும் குழந்தை பசித்த போது விசித்து அழுதது, அய்யோ என்றது, அந்தோ எந்தரற்றியது, குய்யோ முறையோ என்று கதறியது. கவனிப்பார் யாருமில்லை. முதல் முறையாக "அம்மா" என்றழைத்தது அடுத்த நொடியில் அம்மா மடியில் - லேட்டாக கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுத்திருக்கிறீர்கள்.

அழைப்பு : ஒளி விளக்கே, கலங்கரை விளக்கே, சேலைக் கட்டிய சிங்கமே, தாயே, தருமமே

சென்டிமென்ட் : பிறந்த வீட்டுக்கு புகுந்த வீட்டிலிருந்து சீமந்தம் கொண்டு வந்த தாயே!

புதிய விளக்கம் : சி.எம்.(CM) சினிமா மினிஸ்டர்(Cinema Minister!!!!).

வாக்குறுதி : கலையுலகுக்கு நீங்கள் அளித்தீர்கள் O2(ஆக்சிஜன்), அதனால் உங்களுக்குத் தான் எங்கள் O2(ஓட்டு).

பட்டம் : தமிழ் நாட்டுக்கு நீங்கள் புரோகிரஸ் கார்ட்(Progress Card).

* எஸ்.வி. சேகர் -- "காந்தின்னா அவர் ஒருவர் தான் காந்தி, அம்மான்னா அவர் ஒருவர் தான் அம்மா"

புதிய விளக்கம் : கேள்வி - தமிழ் மொழி, செம்மொழிக்கு உதாரணம்? பதில் - புதுசு கண்ணா புதுசு - தமிழ் மொழி
பெஸ்ட் கண்ணா பெஸ்ட் - செம்மொழி
கேள்வி - என் மகன் எப்பவும் பொய் சொல்கிறானே?
பதில் - சன்னுன்னா அப்படித்தான்! கேள்வி - சும்மா என்னிடம் சண்டைக்கு வருகிறானே?
பதில் - அம்மா சன்னுக்கு பயப்படலாமா? சன் எப்பவுமே அம்மாக்கு கீழே தான்.

* வடிவேல் : விட்டால் ஒடிந்து விழுந்து விடுவதைப் போல் ஆயிரம் அம்மாக்களை விழித்து கூனி குறுகி ஏங்கி அழுது தரையில் புரண்டு ஒரு வேண்டுதலை வைத்தார் - பார்த்திபனிடமிருந்து தன்னைக் காப்பாற்ற - படு அருவருப்பாக இருந்தது - தன்னை ஒரு மனிதப் பிறவியாகவே நினைக்காமல் அப்படி கூனி குறுகி நின்றார்.

ஒரு பாடல் வேறு - லட்சிய தேவதையே, வெற்றி நாயகியே, தங்கத் தாரகையே, சிங்கத் தாரகையே....

* பால சந்தர் - இது காணிக்கை விழா , அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

* முரளிதரன் - இது தாய்க்கு குழந்தைகள் பாடும் குழலோசை, இமயத்துக்கு கோடம் பாக்கம் செய்யும் காணிக்கை, புற நானூற்று புரட்சித் தாய், சென்னைக்கு அன்னை, தொழுகிறோம், பூஜிக்கிறோம், அன்னையே, சரித்திரமே!, நடமாடும் தெய்வமே!!!????

* ராதா ரவி - தாயின் தாழ் பணிந்து, பாதங்களைத் தொட்டு வணங்கி, கடவுள் நீங்கள், உங்களால் மட்டும் தான் முடியும், தெய்வம்மா நீங்க, உங்களை நம்பினவர்கள் கெட்டதில்லை, நீங்கள் பார்க்காத கடவுளுக்கு சமம், கிண்டல் பண்றாங்க அம்மா!

* எஸ். ஏ. சந்திர சேகர் - புரட்சித் தலைவி அம்மா, தாயுள்ளத்தின் உதாரணம்

* மனோரமா - தமிழகத்தின் முடிசூடா ராணி, தென்னாட்டின் ஜான்சி ராணி, பொன்மன செல்வி, பூமாதேவி(!), சத்தியபாமா(பூமா தேவி) நரகாசுரனை கொன்றது போல் நவீன நரகாசுரன் வீரப்பனை(ஆமாம் வீரப்பன் எப்பொழுது, தான் தன்னுடைய அன்னையால் தான் சாக வேணும் என்று வரம் வாங்கினான்?) கொன்ற பூமா தேவி!.

இன்னும்......... விசிய காந்த், ரசினி காந்த், கமல், எஸ்.எஸ். சந்திரன், பார்த்திபன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உலகத்தில் ஒரு நாட்டிலும் தங்களுடைய முதலமைச்சருக்கு இப்படி ஓர் நன்றி அறிவிப்பு விழாவை யாரும் நடத்தியிருக்க மாட்டார்கள். கண்டிப்பாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் - தமிழ் சினிமாத் துறையால்.

கடைசியாக "தாயின்" சபதம் - சினிமா அழிவதைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்!.

கண்ணீர் வராதவர்கள் ஒரு முறை கூட மனோரமாவின் டயலாக்கை படித்து விட்டு வீரப்பனை அதிரடிப் படையினர் கொன்ற காட்சியினை நினைவுப் படுத்திப் பாருங்கள். கண்களில் தானே கண்ணீர் வரும்(சிரிப்பை அடக்க முடியாமல்).

Tuesday, November 15, 2005

நெஞ்சு பொறுக்குதில்லையே.....!

நமது பிரதமர் "இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் கிராமப் புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. கிராமப் பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமக்கு முன்பு உள்ள மிகப்பெரிய சவால். கடந்த நுற்றாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஆராய்ந்தால், பெரிய நகரங்கள் அடைந்த வளர்ச்சியிலிருந்து கிராமப்புற இந்தியா வெகுதொலைவில் உள்ளது." என்று கூறியிருக்கிறார்.

மிகுந்த ஆதங்கத்துடனும் கவலையுடனும் இவ்வாறு தெரிவித்த பிரதமர் இந்நிலைமையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் எனவும் தெளிவாக கூறினார். அது என்ன?.

"மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாநில அரசுகளுக்குத் தான் உண்மையான பொறுப்பு உள்ளது(அதாவது மத்திய அரசுக்கு உண்மையான பொறுப்பு இல்லையாம்). அனாவசியமான மானியங்களை கட்டுப்படுத்த வேண்டும். சொற்ப அளவிலாவது அரசுக்கு வரி செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்."

இது தான் அந்த அபூர்வமான அருமையான ஆலோசனை!

பின் எதற்காக மத்திய அரசு? அப்படியெனில் மக்கள் இதுவரை குறைந்த அளவில் கூட வரி செலுத்துவதில்லையா என்றெல்லாம் மடத்தனமான கேள்விகளைக் கேட்கக் கூடாது!

சரி மக்கள் ஒழுங்காக குறைந்த அளவிலாவது(!!!) வரி செலுத்தினால் அப்பணத்தைக் கொண்டு எவ்வாறெல்லாம் கிராமப் புறங்களை முன்னேற்றுவார்கள் என்பதைப் பார்க்க வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

அபு சலீம் தொடர்பான சில புள்ளி விவரங்கள்:

* மும்பை குண்டு வெடிப்பு, ஆயுத கடத்தல், ஆயுத சப்ளை, மிரட்டல் என்று 54 வழக்குகள் தொடர்பாக 12 ஆண்டுக்கு முன்பில் இருந்தே தேடப்பட்டவன் அபு சலீம்.

* கடந்த 2002ம் ஆண்டு, போர்ச்சுகல் நாடு, அபு சலீமையும், மோனிகா பேடியையும் கைது செய்தது. போலி பாஸ்போர்ட் வழக்கு உட்பட சில வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்தது.

* போர்ச்சுகல்லில் சிறையில் அடைக்கப்பட்ட சலீம் பற்றி தகவல் தெரிந்ததும், துதரகம் மூலமும், சட்ட ரீதியாகவும் போர்ச்சுகல் அரசை மத்திய அரசு அணுகியது.

* ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு உள்ளதால், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வாதிட்டு, மீட்டுச் செல்லும் படி போர்ச்சுகல் அரசு கூறிவிட்டது. அதன்படி, போர்ச்சுகல் கோர்ட்டில் வழக்கு போட்டது சி.பி.ஐ.

* போர்ச்சுகல் கோர்ட்டில் வாதாட, சீனியர் வக்கீல்களை அணுகியது சி.பி.ஐ. அந்த நாட்டின் நடைமுறைப்படி, மேல் கோர்ட்களில் வாதாடும், சீனியர் வக்கீல்களுக்கு மணிக்கு ரூ. 10 லட்சமும், ஜூனியர் வக்கீல்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பீஸ் என்று கூறப்பட்டது.

* லிஸ்பனில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வாதாட மட்டும், இந்திய வக்கீல்களை அழைத்து வருவது என்று சி.பி.ஐ., முடிவு செய்தது. அதன்படி, இந்தியாவில் இருந்து இரு வக்கீல்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் செலவாக, ஒரு மணி நேர வாதத்துக்காக, ஒரு வக்கீல், இரு உதவியாளர்கள் செலவு என்று பார்த்தால், மணிக்கு ரூ. 10 லட்சம் செலவானது. லாட்ஜ் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் அடக்கம்.

* ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் வாதம் நடந்தது. அதனால், 40 லட்சத்தில் இருந்து 60 லட்சம் ரூபாய் வரை செலவானது.

* கீழ்க்கோர்ட்டில் 15 விசாரணை அமர்வுகள் நடந்தன. அதன்படி பார்த்தால், ஒரு நாளைக்கு அதிகபட்ச செலவு ரூ. 60 லட்சம் என்ற வகையில், 15 நாளுக்கு ரூ. ஒன்பது கோடி செலவாகியது.

* இதைத் தொடர்ந்து, போர்ச்சுகல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாட, ஒரு சீனியர் போர்ச்சுகல் வக்கீல், இரு ஜூனியர் வக்கீல்கள் அமர்த்தப்பட்டனர். இந்த வகையில், மணிக்கு ரூ. 30 லட்சம் செலவானது.

* தினமும் ஆறு மணி நேரம் வாதம் நடந்தது. இப்படி ஆறு அமர்வுகள் நடந்தன. இப்படி பார்த்தால், ரூ. 1.80 கோடி செலவு.

* ஆறு அமர்வுகளுக்கு தலா ஆறு மணி நேர செலவுகளை சேர்த்தால் மொத்தம் போர்ச்சுகல் வக்கீல்கள் மூவருக்கும் மொத்த செலவு ரூ. 10 கோடியே 80 லட்சம்.

* சுப்ரீம் கோர்ட்டை தொடர்ந்து மனித உரிமை கோர்ட்டில் வாதாடப்பட்டது. அங்கும், போர்ச்சுகல் வக்கீல்கள் மூவரும் அமர்த்தப்பட்டனர். அங்கு, ஒரு நாளைக்கு ரூ. 1.80 கோடி என்று, நான்கு அமர்வுகளுக்கு மொத்தம் 7.20 கோடி ரூபாய் செலவானது.

* மனித உரிமை கோர்ட்டில் ஜெயித்ததும் தான், போர்ச்சுகல் பார்லிமென்ட்டில், கைதிகள் பரஸ்பரம் ஒப்படைக்கும் மனு கையெழுத்தானது. அதன்படி தான் அபு சலீம் ஒப்படைக்கப்பட்டான்.

* போர்ச்சுகல்லுக்கு சென்று அபு சலீம் விவகாரத்தில் விசாரணை செய்ய 20 பேர் கொண்ட சி.பி.ஐ., குழு சென்றது. அவர்கள் அடிக்கடி சென்று வந்தனர். அவர்கள் செலவு மட்டும் மூன்று கோடி ரூபாய்.

* இத்தனைக்கும் மேலாக, எல்லாம் முடிந்து அபு சலீமை தனி விமானத்தில் அழைத்து வர ஆன செலவு என்ன தெரியுமா? 75 லட்சம் ரூபாய். போர்ச்சுகல் நாட்டு லிஸ்பன் விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு மேற்கொண்ட விமான போக்குவரத்து செலவு தான் இது.

இங்கே செலவளித்திருக்கும் இவ்வளவு பணமும் யார் அப்பன் வீட்டு பணமாம். ஒரு படத்திற்கு அங்கும் இங்கும் கையை காலை உதறுவதற்கு 1 கோடி ரூபாய் வாங்கும் "சூப்பர்(!)" நடிகர் அன்பளிப்பாக தந்ததோ அல்லது ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து பிடித்தெடுத்த கறுப்பு பணமோ இல்லையே?

இனி இவ்வளவு பணம் தண்டத்திற்கு செலவழித்து பிடித்துக் கொண்டு வந்த இவன் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் அவனுக்கு அதிக பட்ச தண்டனையையும் தரக்க்கூடாதாம். பின் எதற்காக இவ்வளவு பணம் செலவளித்தார்கள். ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அப்படியெனில் கிராமப் புறங்கள்? சே! சே! அதை மறக்க முடியுமா?

அவைகள் அல்லவோ நாட்டின் முதுகெலும்புகள். எனவே......

மக்கள் சிறிது கூட வரி செலுத்தட்டும். கண்டிப்பாக கிராமப் புறங்கள் முன்னேறும்!

Sunday, November 13, 2005

திருப்பதியில் பூவுக்கு வேட்டு!

திருமலை ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் பொழுது பெண்கள் தலையில் பூவைத்து செல்வது வழக்கம்.

ஆனால் இப்போது கோவிலுக்குள் செல்லும் போது பெண்கள் தங்களது தலையில் பூ வைக்கக்கூடாது. பெண்கள் பூவைக்க கோவில் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது. இதைப்போல திருமலையில் யாரும் பூவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழ் திருப்பதியில் அலிபிரி சோதனை சாவடியிலேயே அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு யாராவது பூ வைத்திருந்தால். அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள்.

ஆகம விதிப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இன்று (திங்கட் கிழமை) முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது பெண்கள் யாராவது தலையில் பூ வைத்திருந்தால் அவற்றை எடுத்து விட்டு கோவிலுக்குள் செல்லும்படியும் கோவில் ஊழியர்கள் அறிவுறுத்துவார்களாம்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக திருமலை முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் `மைக்' மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பூக்களும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பக்தி என்ற பெயரில் கூறினால் பாமரர்கள் எதையும் ஏற்பார்கள் என்பதற்காக இப்படியுமா?
தேவைகள் ஏதும் அவசியமில்லாத கடவுளுக்கு தேவைகளை உருவாக்குவது இந்த மனிதர்கள் தான் என்பதை மக்கள் எப்போது புரியப்போகிறார்களோ.

Saturday, November 12, 2005

கஷ்டகாலம்!

நடிகர் சத்ருகன் சின்கா தனியார் டெலிவிஷனுக்கு நவ.12 அன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரிசபையில் குற்ற பின்னணி கொண்ட மந்திரிகள் பிரச்சினை பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி பேசுவதற்கு முன்பு, நீங்கள் நன்றாக சிந்தித்து பார்க்கவேண்டும். பா. ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்துவிட்டு, நாளை அவர்கள் வெற்றி பெற்று மந்திரிகளாகிவிட்டால், குற்ற பின்னணி உள்ள மத்திய மந்திரிகள் பற்றி பாராளுமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி பேச முடியும்?

நான் இப்படி கூறுவதற்காக என்னை கட்சியை விட்டு தூக்கி எறிந்தால், நான் வெளியேற தயார்.

இரட்டை வேடம் போடும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரிசபையில், குற்ற பின்னணி உள்ள மந்திரிகள் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டார்கள்.

ஏ.சி. அறைக்குள் இருந்து கொண்டு, பீகார் பிரச்சினை பற்றி தெரியாமலேயே அருண்ஜெட்லி போன்றவர்கள், பீகார் அரசியலை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு நடிகர் சத்ருகன் சின்கா கூறினார்.

உண்மைகள் சில நேரங்களில் வெளிப்பட்டாலும் காலப்போக்கில் அவை மறக்கப்படுகிண்றன அல்லது மறக்கடிக்கப் படுகின்றன. பாவம் சத்ருக்கனன் இன்னும் அரசியலை சரியாக புரிந்து
கொள்ளவில்லை போலிருக்கிறது. கஷ்டகாலம் சத்ருக்கனனுக்கா அல்லது சங்க்பரிவாரத்திற்கா?

Thursday, November 10, 2005

ஒரு பயோடேட்டா!

இந்திய அரசியல் என்பது எளிதில் பணம் சம்பாதிக்கும் கிரிமினல் குற்றவாளிகள் நிறைந்த கூத்தாடிகளின் கூடாரம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஒரு சர்வே எடுத்ததில் கிடைத்த தகவல்கள்:

* மோசடி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.

* பெண் கடத்தல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 29.

* பல குற்றங்களில் மூன்று வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.

* கொலை, கொள்ளை, கற்பளிப்பு, லஞ்சம், ரவுடிசம் போன்ற குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 117.

* பழைய கடனை திருப்பி செலுத்தாததின் பெயரில் வங்கிகளில் கடனோ, லோணோ பெற முடியாத மோசமான ஹிஸ்டரி கொண்டவர்களின் எண்ணிக்கை 71.

* பல்வேறு சட்டங்களை மீறியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21.

* அடிதடி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கோர்ட்டில் அபராதம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 84.

நாட்டு மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் இவர்கள் அவையில் இருந்து என்ன செய்வார்கள் என்பதை குறித்து ஆலோசனை செய்து பார்த்தால் மயக்கம் வருகிறது.

எல்லா வளங்களும் உள்ள நம் தாய்நாடு எதனால் உலக அரங்கில் முன்னேற இவ்வளவு சிரமப்படுகிறது என்பது புரிகிறதா?

Wednesday, November 9, 2005

ஆஹா! இன்றைய இரை கிடைத்து விட்டது!

உலகில் சாத்வீகத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும் பெயர்போன மற்றவர்களின் சொத்தை மனதில் போலும் எண்ணிப் பார்க்காத அப்பாவி நாடான இஸ்ரேலில் வசிக்கும் ஒரு முஸ்லிம் இஸ்ரேலிய இராணுவத்தினரின் கையில் கிடைத்தால் என்ன ஆவார் என்பதை கீழே பாருங்கள்.


1. சந்தேகப் பட்டு பிடிக்கப் படுகிறார்.

2. ஆயுதங்கள் ஏதாவது வைத்திருக்கிறாரா? என்று சோதனை

3. அடடா ஒன்றும் இல்லையே! அப்பாவியை பிடித்து விட்டோமோ?

4. இவர்களை நம்பவே முடியாது! ஜட்டியில் பாம் செய்து அணிந்தாலும் அணிந்திருப்பார்கள். எதற்கும் ஆடையை களைந்தும் சோதனை செய்து விடலாம்!

5. ஒன்றும் இல்லையே! இவனை கொல்வதற்கு ஒரு காரனமும் கிடைக்கவில்லையே! ஆங் கிடைத்து விட்டது. வயிற்றினுள் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்த பலஸ்தீன் தீவிரவாதி!. சரி இனி நாம் செய்வதை செய்து விடு.


அப்பாடா ஒரு வழியாக மற்றொரு முஸ்லிம் குடும்பத்தை இஸ்ரேலிலிருந்து விரட்டியாகி விட்டது. பணத்திற்கு ஆசைப் பட்டு போயும் போயும் நம்மிடம் தங்களுடைய சொத்துக்களை விற்றார்களே இவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஹா! ஹா! ஹா!