Wednesday, April 23, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...27.

புகை மற்றும் தீ: கண்ணால் பார்த்த சாட்சியளான S-6 பயணிகள்.

கிட்டத்தட்ட காலை 8:30 மணியளவில், S-6 பெட்டியிலிருந்து புகை கிளம்புவதை, மீனா முதலாவதாக கண்டார். S-6ல் பயணம் செய்த பயணிகளும் முதலில் புகை வருவதையும் அதன் பிறகு தீயையும் பார்த்தனர். இராணுவ வீரரான பாண்டே, 1 ஏப்ரல் 2002 அன்று கொடுத்த வாக்குமூலத்தில், “பஜ்ரங்தள் ஆட்களும் மற்ற பயணிகளும் சத்தம் கொடுத்தவர்களாக பெண்களையும், குழந்தைகளையும் கடைசி இருக்கையின் கீழே மறைத்து வைத்தனர். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, இருக்கை எண் 72லிருந்து திடீரென்று புகை கிளம்ப ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திற்குள் தீ ஜுவாலையை பார்த்தேன். மேல் இருக்கையிலிருந்த நானும் இன்னும் மூன்று அல்லது நான்கு பேர்களும் கீழே இறங்கி, பெட்டியின் வலது புற கதவைத் திறப்பதற்காக மிகவும் சிரமப்பட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால், வெளியிலுள்ளவர்கள் கதவைத் திறப்பதைத் தடுக்கும் வகையில் பிரயாணிகள் தங்கள் உடமைகளை பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள கதவுகளின் பக்கமும் நிரப்பி தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். இன்னும் சிலரும் கரசேவகர்களும் பெட்டியிலிருந்து வெளியேறினோம்.

ராஜேந்திரசிங் ராஜ்புத் என்பவர் தனது தந்தையுடன் S-6 பெட்டியில் பயணம் செய்தார். அவர் கூறும் போது, “100 முதல் 150 பேர்களைக் கொண்ட வன்முறை கும்பல் வடக்கு புறத்திலிருந்து கற்களைத் தொடர் வண்டி மீது வீசினார்கள். அந்தக் கும்பலில் இருந்தவர்கள், இரும்பு குழாய்களையும், வாள்களையும் ஆயுதங்களாகத் தாங்கி இருந்தார்கள். நான் ஜன்னல் வழியாக வந்த போது, அவர்கள் எனது காலிலும், தோளிலும் மற்றும் கைகளிலும் இரும்பு குழாய்களாலும் கற்களாலும் தாக்கினார்கள். எனது தந்தையார் புகையின் காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெட்டியிலேயே மயக்கமுற்றார்கள். எனக்கு இரு கைகளிலும் மற்றும் காதுகளிலும் தீக் காயங்கள் ஏற்பட்டது. பிறகு கோத்ராவிலுள்ளவர்கள் என்னையும் எனது தந்தையையும் கோத்ரா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

தொடர் வண்டியிலிருந்து கீழே இறங்கிய போது 15 முதல் 16 வயது மதிக்கதக்க சிறுவர்கள் தொடர் வண்டியைச் சுற்றி வந்ததைப் பார்த்தேன். அவர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்திலே 70 முதல் 80 அடி தூரத்திற்கு ஓடினேன். பிறகு அவர்களில் சிலர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். கல்வீச்சின் காரணத்தால் எனது வலது கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. “அடி...அடிஎன்று அச்சிறுவர்கள் கூச்சலிட்டார்கள். நான் ஒரு இராணுவ வீரன் என்று அச்சிறுவர்களிடம் கூறினேன். அதற்கான அத்தாட்சியைக் கேட்டனர். எனது சட்டைப் பையிலுள்ள எனது வாரண்ட் தாளை எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த அவர்களில் ஒருவன் நான் இராணுவ வீரன் தான் என்று மற்றவர்களிடம் கூறியதோடு என்னை ஒருவரும் தொடக் கூடாது என்றும் உத்தரவிட்டான். மற்றவர்கள் என்னிடம் எனது பெயரை கூறுமாறு கேட்டார்கள். முதலில் கூறிய அதே சிறுவன் எனது பெயரை அத்தாளில் இருந்து படித்தான். இதைக் கேட்ட மற்றவர்கள் நான் ஒரு ஹிந்து என்று கூறவே, அவர்களில் ஒருவன் இரும்பு கம்பியால் என் தலையில் தாக்கினான். இரத்தம் என் தலையிலிருந்து வழிந்தோட, நானும் மயக்கமுற்று கீழே வீழ்ந்தேன். பிறகு என்னை முக்கிய வீதியில் போட்டு விட்டு சென்றனர்என பாண்டே கூறினார்.

முரண்பாடுகளின் உருவாக்கங்கள்: வன்முறையாளர்கள் திரவ எரிபொருள்களான பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையைக் கொண்டு சென்றார்களா? S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில், கரசேவகர்கள் மட்டுமே இவ்வாறு கூறுகின்றனர்.

கலவரகாரர்களை மிக நெருக்கமாக பார்த்த ஒரே ஒரு அரசு அதிகாரியான மீனாவும் சரி, அல்லது S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில் கரசேவகர்கள் அல்லாத பயணிகளான இராணுவ வீரர் பாண்டே மற்றும் ராஜேந்திரசிங் ராஜ்புத் ஆகியோர்களும் சரி, கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களான பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை போன்றவைகளைக் கொண்டு சென்றதைப் பார்த்தாக கூறவே இல்லை. இன்னும் S-6 பெட்டி தீயிட்டு கொளுத்தப்பட்டதையும் பார்த்தாக இவர்களில் எவரும் கூறவில்லை. உத்திரபிரதேசத்திலுள்ள சுல்தான்பூரிலிருந்து தனது குடும்பத்தோடு S-6 பெட்டியில் வதோதராவிற்கு திரும்பிய வியாபாரியான சதீஷ் மிஸ்ரா கூறும் போது,” பெட்டியின் மீது கல்வீசப்படுவதாக கேட்டதுமே, கதவுகளையும் ஜன்னல்களையும் நாங்கள் மூடிக் கொண்டோம்... தீயின் காரணமாக புகை வந்தது. எவரும் கல்வீசியதையோ அல்லது பெட்டியின் மீது தீ வைத்தததையோ நான் பார்க்கவில்லைஎன்று கூறினார். இவருடைய மனைவியும் தீயில் கொல்லப்பட்டார்.

அயோத்தியில் ராம்ஜப் யாஃக்னாவில் அஹுட்டியைக் கொடுக்க சென்று, வீடு திரும்ப S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த மேஹ்சனாவை சேர்ந்த நான்கு கரசேவகர்கள்அம்ருத்பாய் பட்டேல், தினேஷ்பாய் பட்டேல், ராம்பாய் பட்டேல் மற்றும் நிதின்பாய் பட்டேல் ஆகியோர் 8 மார்ச் 2002 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் வாக்குமூலத்தில், எவரும் எரிபொருள்களைக் கொண்டு வந்ததையோ அல்லது பெட்டியைத் தீயிட்டு கொளுத்தியதையோ தாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியிருந்தனர். மேலும் அவர்கள் புகையின் காரணத்தால் மயக்கமுற்று விழுந்து விட்டதாகவும் கூறியிருந்தனர். S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களும் இன்னும் மற்ற பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்கள் மட்டும் தான், வன்முறையாளர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு சென்றதாக கூறுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், கடுமையான கல்வீச்சின் காரணமாக கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்திவிட்டதாக கூறும் எல்லா கரசேவகர்களும், அதே மூச்சோடு வன்முறையாளர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு சென்றதை பார்த்தாகவும் கூறுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Tuesday, April 22, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...26.

முதல் நிறுத்தம்:

சங்கிலி இழுக்கப்பட்டு, தொடர் வண்டி நிலையத்திற்கு சற்று வெளியே சபர்மதி தொடர் வண்டி நிறுத்தப்பட்டது.


சில நிமிடங்கள் கழித்து, தொடர் வண்டி நடைமேடையிலிருந்து சென்றது. தொடர் வண்டியின் ஓட்டுனரான ராஜேந்திர ராவ் ரகுநாத் ராவ் கூற்றுப்படி காலை 7:45 மணியளவில் தனக்கு பச்சை சமிக்ஞை காட்டப்பட்டதாகத் தெரிவித்தார். “தொடர் வண்டி வதோதரா நோக்கி புறப்பட ஆரம்பித்து” என ராவ் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். "காலை 7:47 மணியளவில் சங்கிலி இழுக்கப்பட்டதும் தொடர் வண்டி நின்று விட்டது. பெட்டி எண்கள் 83101, 5343, 51263 மற்றும் 88238 ஆகியவற்றிலிருந்து சங்கிலி இழுக்கப்பட்டிருப்பதை, எனது உதவி ஓட்டுனரும், தொடர் வண்டி பாதுகாவலரும் அறிந்து கொண்ட பின் தொடர் வண்டி நிலைய அதிகாரிக்கு கை தொடர்பு பேசியின் மூலமாக தகவல் அளித்தோம்”.

இந்தச் சமயத்தில் நடைமேடையிலிருந்து கல்வீச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தகவல் இராணுவ வீரரான பாண்டே மற்றும் இன்னொரு பயணியான 19 வயது அமர்குமார் (இவர் தனது தந்தை தாய் அண்ணி மற்றும் மருமகள் ஆகியோருடன் உத்திரபிரதேசத்திலுள்ள சொந்த ஊரிலிருந்து அஹ்மதாபாத்திற்கு பயணம் செய்தார்) ஆகியோரால் உறுதி செய்யப்பட்டது.

பாண்டேயின் கூற்றுப்படி, “தொடர் வண்டி 30 முதல் 40 மீட்டர் தூரத்திற்கு ஓடிய பிறகு சங்கிலி இழுக்கப்பட்டதால் நின்றது. அதன்பிறகு பஜ்ரங்தள் ஆட்கள் அதிகமானோர் ஓடி வந்து நாங்கள் இருந்த S-6 பெட்டிக்குள் ஏறினார்கள். இந்தச் சமயத்திலும் நடைமேடையின் புறத்திலிருந்து கற்கள் வீசப்பட்டு கொண்டிருந்தது.”

தொடர் வண்டி நடைமேடையை விட்டு புறப்பட்ட மறு கணத்திலேயே நிறுத்தப்பட்டதாக திவாரி என்பவரும் கூறினார். “பெட்டியின் மீது கல் வீசும் சத்தத்தையும் கேட்டேன்” எனவும் அவர் கூறினார். மேலும் கூறும் போது, “சில கற்கள் ஜன்னல்கள் வழியாக பெட்டியின் உள்ளேயும் வர ஆரம்பித்தது”. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே தொடர் வண்டி ஊழியர்கள், மேலே குறிப்பிட்ட 4 பெட்டிகளில், சங்கிலி இழுக்கப்பட்டதால் உருவான பிரச்சனையை தீர்த்து வைத்ததால் தொடர் வண்டி மீண்டும் நகர ஆரம்பித்தது.

மிகவும் துரதிஷ்டவசமான நிறுத்தம்: மீண்டும் சங்கிலி இழுக்கப்பட்டதால், சபர்மதி தொடர் வண்டி அறை A அருகே நின்றது.

காலை மணி 8:00. சிறிது தூரம் சென்றவுடன், மீண்டும் சங்கிலி இழுக்கப்பட்டதால், சபர்மதி தொடர் வண்டி அறை A அருகே நின்றது. அந்த அறையில் இருந்த தொடர் வண்டி நிலைய உதவி அதிகாரியான ஹரிமோகன் மீனா இந்த நேரத்தை குறித்து வைத்து கொண்டார். 900 முதல் 1000 வரை எண்ணிக்கையிலான வலுவானதொரு கும்பலை தான் அறை A அருகே கண்டதாக ஓட்டுனர் ராவ் கூறினார். கல்வீச்சு சம்பவம் மிகவும் வலுவானதைத் தொடர்ந்து, பெட்டியின் ஜன்னல்கள் உடைய தொடங்கின. மீனாவும் மற்றும் இச்சம்பவத்தின் போது S-6 பெட்டியில் பயணித்து உயிர் பிழைத்தவர்களும் இதனையே தங்களது வாக்குமூலத்திலும் தெரிவித்தனர்.

அமர்குமார் திவாரி என்பவர் கூறும் போது, இரண்டாவது முறையாக தொடர் வண்டி ஓடத் தொடங்கி பின் நிறுத்தப்பட்ட தருணத்திலிருந்தே, இடது புறத்திலிருந்து கல்வீச்சுகள் தொடர்ச்சியாக இருந்தது. “இதன் காரணமாக எங்களது பெட்டியிலுள்ள ஜன்னல்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு, எனது சகோதரரின் மனைவி, தாய் மற்றும் நானும் கற்களால் தாக்கப்பட்டோம்.” இராணுவ வீரரான பாண்டேயும் இதே போன்றே கூறினார், “இரண்டாவது முறையாக தொடர் வண்டி நிறுத்தப்பட்ட தருணத்தில், இடது புறத்திலிருந்து கடுமையான கல்வீச்சுகள் வந்தன. பெட்டியின் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டும், சில ஜன்னல்களில் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் சில பயணிகள் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்து இரத்தம் ஓடியது.

பூஜ்ஜிய தளம்: கலவர கும்பல்களின் கோபம் தீவிரமடைந்தது. முஸ்லிம் கலவர கும்பல் அறை A வரை தொடர் வண்டியை விரட்டி கொண்டு ஓடினார்கள். ஓட்டுனர் ராவ் கலவர கும்பலைப் பார்த்தார், ஆனால் 8 முதல் 10 பெட்டிகள் வரை பிரிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேராத இந்நிலையில், அறை Aயிலிருந்த அதிகாரிகளான மீனாவும் அவருடன் பணிபுரியும் AK சர்மா என்பவரும் பூஜ்ஜிய தளத்திற்கு மிக அருகாமையிலிருந்த அதிகாரிகளாகும். இதுவே, கோத்ரா சம்பம் நிகழ்ந்ததற்கு மறுநாள்,1 மார்ச் மாதம் 2007 அன்று மீனா காவல்துறையிடம் வாக்குமூலத்தில் கூறியவையாகும்.

“கிட்டதட்ட காலை 7:55 மணியளவில் மீண்டும் தொடர் வண்டி ஓட தொடங்கியது. 5 நிமிடத்திற்குள் அது அறை A அருகே வந்தது. அந்த சமயத்தில் சபர்மதி தொடர் வண்டியின் ஓட்டுனர் சங்கிலி இழுக்கபட்டதற்கான விசில் ஒலியை எழுப்பினார். தொடர் வண்டியும் நின்றது. கிட்டதட்ட 8 முதல் 10 பெட்டிகள் ஏற்கனவே அறை Aயையும் கடந்து சென்றுவிட்டது. சங்கிலியைச் சரி செய்யும் பொருட்டு அறையை விட்டு நான் வெளியே வந்ததோடு என்ன நடந்தது என்றும் விசாரித்தேன். தொடர் வண்டி அருகே நான் சென்ற போது, பின்பக்கத்திலிருந்தும் சுற்றுபுற இடங்களிலிருந்தும் 200 முதல் 500 பேர் வரையில் ஒரு கலவர கும்பல் தொடர் வண்டி நோக்கி வருவதை கண்டேன். அவர்கள் கற்களை வீசினார்கள். நான் எனது அறையை நோக்கி ஓடிச் சென்றதுடன், அங்கிருந்தே பெட்டியின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொள்ளுமாறு பயணிகளிடம் கூறினேன். (தொடர் வண்டியிலிருந்து) கீழே இறங்கிய பயணிகளில் சிலர் கலவர கும்பலால் தாக்கப்பட்டார்கள்.

மீனாவுக்கும் கலவர கும்பலுக்கும் இடையே உண்மையில் நிகழந்தது என்ன?

காவல்துறையிடம் தந்த தனது வாக்குமூலத்தில், மீனா பிரச்சனை குறித்து மெளனம் சாதித்தார். ஒரு ஆய்வு நிபுணராக காட்டிகொண்டு மீனாவை சந்திக்க, (குஜராத் உண்மைகளை வெட்டவெளிச்த்திற்கு கொண்டு வந்த) தெஹல்காவின் நிருபர் முடிவு செய்தார். தான் ஒரு நிருபரிடம் பேசுவதாகவோ இன்னும் தனது பேச்சுக்கள் பதிவு செய்யபடுகின்றன என்பனவற்றை உணராத நிலையில் மீனா சொல்லும் போது, தான் தனது அறையிலிருந்து வெளியேறி பிறகு, ஏன் தொடர் வண்டியை பின் தொடர்ந்து ஓடுகிறீர்கள் என கலவர கும்பலிடம் கேட்ட போது, தங்களில் ஒருவர் கரசேவகர்களால் தொடர் வண்டிக்குள் இழுத்து செல்லபட்டதாக அவர்களில் சிலர் கூறினார்கள். இன்னும் அவர்களில் சிலர், தொடர் வண்டிக்கு தீவைப்பதன் மூலம் அவற்றில் உள்ளவர்களை வெளியேற்றி விடலாம் என்று யோசனை சொன்னதை தான் கேட்டதாகவும் மீனா கூறினார். ஆனால் வாள்களையோ, கூரிய ஆயுதங்களையோ அல்லது எரிபொருள்களையோ கலவர கும்பல் கொண்டு சென்றதைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் மாறுபட்டதாக அவர் கூறிய மற்றொரு கூற்றானது, கலவர கும்பலில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். அவர்கள் தங்கள் கைகளில் தடிகளைத் தூக்கி சென்றதுடன், கற்களையும் வீசினார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Wednesday, April 2, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...25.

கோத்ராவில் நடந்த தீ வைப்பு சம்பவத்துக்கு மோடியின் பின்னணியே காரணம் என சில அரசியல் குழுவினரும், சமூகத்திலுள்ள சில பொதுமக்களிலுள்ள பிரிவினரும் குற்றம் சுமத்துகின்றனர். திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தி, அதனடிப்படையில் அரசியலில் இன ரீதியில் பிரிவு மற்றும் பிளவுகளை அறுவடை செய்திட இவன் (மோடி) S-6 பெட்டியை எரித்தான் என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது உண்மையா?


கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்வுற்றது என்ன? என்னும் பேருண்மையை பெறுவதற்காக, தெஹல்கா 6 மாத காலங்களாய் நெடிய புலனாய்வை நடத்தியது. பொய் வலைகள் உண்மைகளோடு சேர்த்து பின்னப்பட்டதையும், உண்மை நிகழ்வுகளோடு கற்பனைகளும் கலந்து தரப்பட்டதையும், மிகுந்த எச்சரிக்கையுடனும், அதி கவனத்துடனும் நடத்தப்பட்ட புலனாய்வு வெளிப்படுத்தியது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையை கண்டறிவது மிகக் கடினமாக உள்ளதே என்றல்ல, மாறாக மேலே கூறப்பட்ட புனைவுகள் ஏராளமாக இருந்த காரணத்தாலே அதிர்ச்சியாக இருந்தது. இப்புனைவுகள் எல்லா இடத்திலும் இருந்ததை பார்க்க முடிந்தது. தாள்களிலும், உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலத்திலும் இன்னும் தெரு வெளிகளிலும் காணக் கூடியதாகவே இருந்தது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையே அதிர்ச்சியாக இருந்தது என்பதால் அல்ல, மாறாக மிக விவரத்துடனும் தீய நோக்குடனும் உண்மைகள் அழிக்கபட்டு இருந்ததனாலேயாகும். நாங்கள் பார்த்தது என்னவென்றால்.. மோடியும் அவனது அரசாங்கமும் சொல்லும் அனைத்தும் பொய்யே என்பதனை இது நிரூபிக்கின்றது. இது ஒரு சாதரண பொய்யல்ல, மாறாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்கள். லஞ்சம் வழங்கப்பட்டும், நிர்பந்திக்கப்பட்டும், மிரட்டபட்டும் செயல்படுத்தபட்டவைகள்.


இதுவே நாம் கண்ட தகவல்கள். எப்போதும் போல், உண்மைகள் விளக்கமாக..


வந்து சேருதல்: சர்மதி விரைவு தொடர் வண்டி கோத்ரா நிலையத்தில் நுழைகிறது.

27 பிப்ரவரி 2002, காலை மணி 7:43, அயோத்தியிலிருந்து கரசேவகர்களை தங்கள் இருப்பிடங்களுக்கு திருப்பி அழைத்து கொண்டு சபர்மதி விரைவு வண்டி எண் 9166, கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் வந்து சேருகிறது. இவ்வண்டி சுமார் ஐந்து மணி நேர காலதாமதத்திற்குப் பிறகு வருகிறது.

கோபத்தை தூண்டிய நிழ்வு முதல் நிகழ்வு: நடைமேடையில் தேநீர் விற்பனை செய்யும் முஸ்லிம் வியாபாரிகளிடம் கரசேவகர்கள் மோதினார்கள்.

கோத்ரா சம்பத்தில் முக்கிய அம்சமே ஒரு கேள்வி தான். அது என்னவென்றால் கலவரக் கும்பலை உசுப்பி விட்டது எது? மோடி அரசாங்கமோ இது உணர்ச்சி மேலீட்டால் தற்செயலாக நடந்து விட்ட சம்பவம் அல்ல, மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றே உறுதிபட கூறி வருகிறது. S-6 பெட்டியில் பயணித்து, அக்கொடூர சம்பத்திலிருந்து உயிர்பிழைத்தாக கூறப்படும் இரு பயணிகளால் சத்திய பிரமாணம் அளித்து தரப்பட்ட சாட்சியத்தில் பொய்யாக தரப்பட்டிருந்தது. இவ்விருவரும் கரசேவகர்களோ அல்லது விஹெச்பியின் மற்றும் பஜ்ரங்தள் உறுப்பினர்களோ அல்ல, மாறாக தாங்கள் வேலை பார்க்கும் அஹ்தமாபாத்திற்கு தங்களுடைய சொந்த ஊரிலிருந்து பயணித்து கொண்டிருந்தவர்கள் ஆவர். தொடர் வண்டி நிலைய நடைமேடையில் கரசேவகர்களுக்கும் தேநீர் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் இடையில் மோதல் நடந்ததாக இவ்விருவரும் காவல்துறையினரிடம் தெரிவித்து இருந்தனர். அவர்களுடைய பிரமாண வாக்குமூலம் இதோ.

லால்டாகுமார் பாலகிருஷ்ணன் ஜத்ஹவ் வயது 32, காந்திகிராம் கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தில் உதவி மேலாளர் (சிவில்) ஆக பணியாற்றி வந்தவர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள தனது சொந்த ஊரான குணாவிலிருந்து அஹ்மதாபாத் நகருக்கு சென்று கொண்டிருந்தார். இவருக்கு S-7 பெட்டியில் இருக்கை எண் 32ல் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கரசேவகர்கள் அந்த பெட்டியில் அவரை பயணிக்க விடவில்லை. “அதன் பிறகு”, என கூறத் தொடங்கிய ஜத்ஹவ் தனது வாக்குமூலத்தில், “S-6 பெட்டியின் வாயிலில் நின்று கொண்டிருந்த இராணுவ வீரனிடம் கேட்டு கொணடதன் பயனாக, நான் இருக்க சிறிது இடம் தந்தோடு மட்டுமல்லாமல் எனது உடமைகளை அங்கு வைப்பதற்கும், நின்று கொண்டு பயணிப்பதற்கும் அனுமதியளித்தார். இவ்வாறு 26 பிப்ரவரி 2002 அன்று இரவு 8:15 மணிக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டி S-6 ல் எனது பயணத்தை நான் துவக்கினேன். 27 பிப்ரவரி 2002 அன்று சபர்மதி விரைவு தொடர் வண்டி, கோத்ரா தொடர் வண்டி நிலைய நடைமேடை எண் 1ல் வந்து சேர்ந்தது. தொடர் வண்டியிலிருந்து நான் கீழே இறங்கவில்லை. அந்த நேரத்தில் கரசேவகர்கள் மற்றும் பஜ்ரங்தள் தொண்டர்களில் சிலர் முஸ்லிம் வியாபரிகளிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.”

கோவிந்சிங் ரத்னசிங் பாண்டே, வயது 46 அஹ்மதாபாத்தில் இராணுவ வீரராக பணியாற்றும் இவர், லக்னோவிலிருந்து அஹ்மதாபாத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார். “ எனக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டியில் பெட்டி எண் S-6 படுக்கை எண் 9ல் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 26 பிப்ரவரி 2002 அன்று நள்ளிரவு 1:15 மணிக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டி லக்னோ தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. நான் பெட்டி எண் S-6 ல் ஏறிய போது 5 முதல் 6 பெண்கள் படுக்கை எண் 9ல் இருந்தனர். எனது பயண சீட்டை அவர்களிடம் காண்பித்து அதிலிருந்து போகுமாறு அப்பெண்களை கேட்டு கொண்டேன். அப்போது 50லிருந்து 52 வயது வரை மதிக்கதக்க பஜ்ரங்தள் தொண்டர் ஒருவர் என்னிடம், பெண்கள் மேல் படுக்கைக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது எனவே நான் அந்த மேல்படுக்கையை எடுத்து கொள்ளுமாறு கூறி படுக்கை எண் 3ஐ தந்தார். எனது உடமைகளை படுக்கை எண் 9க்கு கீழே வைத்து விட்டு, நான் படுக்கை எண் 3ல் அமர்ந்து கொண்டேன். அந்த பெட்டியில் கிட்டதட்ட 250 பேர் வரையில் இருந்திருப்பார்கள. அவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களே, மேலும் இவர்கள் பஜ்ரங்தள் அமைப்பை சார்ந்தவர்கள். ஒவ்வொரு தொடர் வண்டி நிலையத்திலும் வண்டி நிற்கும் போது பஜ்ரங்தள் ஆட்கள் நடைமேடையில் இறங்கி “ஜெய் சிரிராம்” என்று கோஷமிட்டு வந்தனர். 27 பிப்ரவரி 2002 அன்று காலை 7:30 லிருந்து 7:45 க்குள் தொடர் வண்டி, கோத்ரா தொடர் வண்டி நிலைய நடைமேடை எண் 1ல் வந்து சேர்ந்தது. எனவே நான் எழுந்தேன். பத்து முதல் பன்னிரெண்டு எண்ணிக்கையிலான பஜ்ரங்தள் ஆட்கள் எனது பெட்டியிலிருந்து இறங்கி “ஜெய் சிரிராம்” என்று கோஷமிட ஆரம்பித்தனர். அதன் பிறகு மற்ற பெட்டிகளிலுள்ள பஜ்ரங்தள் ஆட்களும் இறங்கி “ஜெய் சிரிராம்” என்று கோஷமிட்டனர். நடைமேடையில் அதிக சப்தமாக இருந்தது. பிறகு 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து பஜ்ரங்தள் ஆட்களில் சிலர் பெட்டியின் உள்ளே ஓடி வந்து ஜன்னல்களை மூடிய பிறகு, நடைமேடையில் தர்க்கம் ஏற்பட்டதால் கல்வீச்சு நடப்பதாக சத்தம் போட்டார்கள். கதவுகளையும் ஜன்னல்களை மூடி விடுமாறு எல்லோரிடமும் சொன்னார்கள்.”

கோபத்தை தூண்டிய நிழ்வு இரண்டாம் நிகழ்வு: கரசேவகர்களில் சிலர் நடைமேடையிலிருந்து ஒரு முஸ்லிம் இளம் பெண்ணை வலுகட்டாயமாக தூக்கிச் சென்றனர்.

வாக்குவாதத்திற்கும் மேலாகவே நடைமேடையில் சர்ச்சை நிகழ்ந்துள்ளது. கரசேவகர்களில் சிலர் நடைமேடையிலிருந்து ஒரு முஸ்லிம் இளம் பெண்ணை வலுகட்டாயமாக தூக்கிச் சென்றனர். 18 வயதிற்கு சற்றே குறைவான சோபியா பானு செய்கு என்ற இளம் பெண் தனது தாயார் மற்றும் சகோதரியோடு கோத்ராவிலுள்ள தங்களது உறவினர்களை பார்த்து விட்டு தங்களது சொந்த ஊராகிய வதோத்ராவுக்கு செல்ல, தொடர் வண்டி நிலையத்திற்கு வந்தனர். கோத்ரா துர்சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்திற்கு பின்பு 28 மார்ச் 2002ல் தான் இவர்களது வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்திருந்தும் கூட, 22 மே 2002ல் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப் பத்திரிக்கையில் இந்நிகழ்வு பற்றிய எந்தவொரு தகவலையுமோ அல்லது இவர்களுடைய வாக்குமூலங்களையோ குறிப்பிடவில்லை.
தொடர் வண்டி தீ வைப்பு சம்பவத்திற்குக் கொண்டு சென்ற மற்ற நிகழ்வுகளின் சங்கிலித் தொடரை, நான்கு மாதங்களுக்குப் பின், 20 செப்டம்பர் 2002 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தான் இவ்வாக்குமூலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

காவல்துறைக்கு சோபியா அளித்த வாக்குமூலத்தில் கூறுவதாவது: “நானும் எனது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் எனது மாமாவின் வீட்டிலிருந்து காலை 7:30 மணியளவில் கால்நடையாகவே கிளம்பி கோத்ரா தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். EMU இரயில் நடைமேடை எண் 1லிருந்து புறப்படுவதால், அந்நடைமேடையிலுளள்ள தண்ணீர் வீட்டின் அருகே நாங்கள் காத்திருந்தோம். இந்த நேரத்தில் தான் சபர்மதி தொடர் வண்டி தஹுத் புறத்திலிருந்து வந்து நடைமேடையில் நிறுத்தபட்டது. தொடர் வண்டியிலிருந்து சிலர் நடைமேடையில் இறங்கினார்கள். அவர்களுடைய தலையில் காவி நிற பட்டி கட்டப்பட்டிருந்ததோடு, அதில் “ஜெய் சிரிராம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இவர்கள் தேநீர் மற்றும் சிற்றுண்டி அருந்துவதற்காக தொடர் வண்டியிலிருந்து இறங்குவதைப் போன்று தான் தெரிந்தது. இந்த நேரத்தில், காவிபட்டை அணிந்திருந்த சிலர், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் தாடி வைத்திருந்த ஒருவரை கம்பால் தாக்கினார்கள். (தாடி வைத்திருந்த) அவர் ஒரு முஸ்லிம். அவர்கள், “அடியுங்கள்..... முஸ்லிம்களைக் கொல்லுங்கள்” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். எனவே நாங்கள் மிகவும் பயந்து போய் இருந்தோம்.

அதன் பிறகு எனது தாயார் மற்றும் சகோதரி ஆகியோருடன் நான் பயணிகள் தங்கும் அறைக்கு செல்ல நகர்ந்தோம். இந்த நேரத்தில் அந்த குழுவிலிருந்தவர்களுள் ஒருவன் பின்புறமாக வந்து அவனது கைகளால் எனது வாயை பொத்தி தொடர் வண்டியின் பெட்டிக்குள் கொண்டு செல்ல முயன்றான். இதை பார்த்தப் எனது தாயார், “அவளைக் காப்பாற்றுங்கள்.... அவளைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். இதன் பின்னர் என்னை இழுத்து சென்று கொண்டிருந்தவன் என்னை விட்டுவிட்டான். நாங்கள் மிகவும் பயந்து போய் இருந்தோம். பயண பதிவு செய்யும் குமஸ்தாவின் அறைக்குள் நின்று கொண்டோம். சிறிது நேரத்திற்கு பின், வதோதராவுக்கு செல்லும் எண்ணத்தை விட்டு விட்டு நாங்கள் வெளியே வந்து ஒரு ரிக்ஷாவை பிடித்துக் கொண்டு பலிய்யாவிலுள்ள (கோத்ரா தொடர் வண்டி நிலையத்திற்கு பக்கத்திலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி) எனது மாமி வீட்டிற்குத் திரும்பி விட்டோம்.”
சோபியாவின் கூற்றுப்படி, பர்தா அணிந்திருந்த மற்றொரு பெண்ணையும் கூட கரசேவகர்கள் நடைமேயிலிருந்து இழுத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். ஆனால் இன்று வரையிலும் காவல்துறையினர் அப்பெண்ணை அடையாளம் காணவோ அல்லது அவளது வாக்குமூலத்தை பதிவு செய்யவோ தவறிவிட்டனர்.

இது போன்ற சர்ச்சைகள் கரசேவகர்களுடன் ஏற்பட்ட காரணத்தால், முஸ்லிம்கள் தொடர் வண்டி மீது கல் வீச தொடங்கினார்கள். S-6ல் பயணம் செய்த இராணுவ வீரரான பாண்டே உள்பட அத்தொடர் வண்டியில் பயணம் செய்த மற்ற பிரயாணிகளும் இவ்வுண்மையை உறுதி செய்துள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...