Wednesday, December 28, 2005

பா.ஜ.க. வெள்ளிவிழா சிறப்பிதழ்

ஆட்சியில் இல்லாததால் வறுமையில் வாடும் பா.ஜ.க (ஊழல் முன்னேற்ற முன்னனி) எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியது, உமாபாரதியின் சண்டித்தனங்கள், ஜோஷியின் அஜால் குஜால் வேலைகளால் கலகலத்துள்ள RSS+BJP கூடாரம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் "பல" சாதனைகளைப் படைத்து விட்டு, கடந்த இருபத்தைந்து வாரங்களாக நடக்கும் உள்குத்துகள் வருத்தமளிப்பதாக அத்வானி பா.ஜ.கவின் வெள்ளி விழா மாநாட்டில் ஆதங்கப்பட்டுள்ளார்.

மதத்தின் பெயரால் மக்களை கூறு போட்டு ஓட்டு வேட்டையாடி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க பலமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடி என்பதை அறிவோம்.
13 நாட்களில் தொடங்கி பிறகு 13 மாதங்கள் ஆட்சி செய்து இறுதியாக ஐந்து வருடங்களை ஓட்டிய பா.ஜ.கவின் சாதனைகளையும் அதற்கு பின்னனியில் இருந்த சிந்தனைச் சிற்பிகளையும் அறிந்து கொள்வோம்.

அடல்பிகாரி வாஜ்பாய்

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை ஆங்கிலேய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்ததிலிருந்து (பார்க்க) திருவாளர் வாய்பாய் அவர்களின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. முதல்நாள் ஒரு அறிக்கை விட்டுவிட்டு மறுநாள் RSS இன் நெருக்குதலால் நான் அப்படிச் சொல்லவில்லை; பத்திரிக்கையாளர்கள் திரித்து எழுதிவிட்டார்கள்" என்று அந்தர் பல்டி அடிப்பதில் மன்னன்.

லால் கிருஷ்ண அத்வானி

400 ஆண்டுகால இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான பாபர் மசூதியை இடித்ததில் முக்கிய குற்றவாளியாக இருந்து பிறகு இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்?! இவர் கட்டுப்பாட்டின் கீழிருந்த CBI மறுமுறையீடு செய்யவில்லை. நாட்டிற்கு மட்டும் இவர் வில்லனல்ல தன் வீட்டிலும் வில்லனாகத்தான் இருந்திருக்கிறார்.

சுஷ்மா ஸ்வராஜ்

சானியா மிர்ஜா தொடையைக் காட்டி பொதுவில் விளையாடுவது, உடை ஒழுக்கம் பேணும் இஸ்லாமிய ஒழுக்கநெறிக்கு எதிரானது என்று முஸ்லிம் பெரியவர் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணுரிமை பேசிய இவர், நம் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த ராஜீவ் காந்தியின் துணைவி அன்னை சோனியா பிரதமரானால் மொட்டை அடித்து விதவைக் கோலம் பூண்வேன் என்று மிரட்டி தன் பெண்ணுரிமைப் போராட்டத்தின் முரண்பட்ட பக்கங்களைக் காட்டிக் கொண்டவர்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த போது அரசுமுறைப்பயனமாக அமெரிக்கா சென்றபோது, அமெரிக்க ஏர்போர்ட்டில் நிர்வாண சோதனை செய்யப்பட்ட உலகின் ஒரே பாதுகாப்பு அமைச்சர். டெகல்கா வெளிப்படுத்திய ஊழலிலும் கலந்து கொண்ட பெருமை இவருக்குண்டு.

நரேந்திர மோடி

குஜராத் கலவரத்தின் பிதாமகன். ஆர்.எஸ்.ஏஸின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செல்லப்பிள்ளை. இவர் தலைமையிலான பரிவாரக் கும்பலின் அட்டகாசங்களால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி சர்வதேச தலைவர்களை சந்திப்பேன்? என்று வாய்பாயே வருந்தும் அளவுக்கு தன் மாநில முஸ்லிம்களை நரலி கொடுத்து இரண்டாம் முறையாக முதல்வரானவர். தற்போதைய நிலவரப்படி இவர் ஆட்சியில் நடந்த கலவரத்தில் காணாமல் போனவர்களை கும்பலாக எரித்து புதைத்த சடலங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

உமாபாரதி:

பெண் துறவி என்று சொல்லிக் கொண்டாலும் RSS இன் கோவிந்தாச்சார்யாவை காதலித்து, கருத்த தோலுடைய தமிழரான கோவிந்தாச்சார்யவை உமாபாரதியின் அண்ணன் நிராகரித்தால் துறவியாகவே காலம் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்கும் இவருக்குள்ளது. இவரால் முதல்வராக நியமிக்கப்பட்ட பாபுலால் கவுர், கடைசியில் இவரையே கவுத்திய பெருமையும் அதனால் எழுந்த சச்சரவுகளால் பி.ஜே.பியிலிருந்து அடிக்கடி அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி-2006 இல் புதிய கட்சி தொடங்கவும் திட்டம் உள்ளதாம்.

வெங்கய்யா நாயுடு
இவரும் உழல் மன்னன் தான். ரூரல் மந்திரியாக இருந்தபோது 40 கோடியை சுருட்டியதாக இத்தளம் சொல்கிறது.

இப்படி பல அரிய சாதனையாளர்களை தன்னுள்ளே கொண்ட கட்சி வெள்ளி விழா கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள்.

Sunday, December 25, 2005

கேள்வி கேட்டவன் எங்கே?


கீற்றின் சிரிப்பூ பகுதியில் கண்ட ஒரு ஜோக்.

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், "கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்" என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

புஷ் : "உன் பெயர் என்ன?"

மாணவன் : "டேவிட்"

புஷ் :  "கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?"

மாணவன் :  "3 கேள்விகள் கேட்கப்போகிறேன்.
1. ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்?
2. கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்?
3. பின் லேடன் இப்போது எங்கே?"

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். "கேள்விகள் கேட்கலாம்" என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

மாணவன் :  "ராபர்ட்"

புஷ் :  "உன் கேள்விகள் என்ன?"

மாணவன் :  "5 கேள்விகள் கேட்கப் போகிறேன்.
1. ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்?
2. கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்?
3. பின் லேடன் இப்போது எங்கே?
4. வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது?
5. முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?"

நன்றி - கீற்று.

படித்த போது எனக்கு சிரிப்பு வரவில்லை; ..................! உங்களுக்கு?

Tuesday, December 20, 2005

கறுப்பு சட்டைக் காரர்கள் கவனத்திற்கு!

சமீபத்தில் படித்ததில் பிடித்த கி.வீரமணி அவர்களின் கடிதம்:

நீ தமிழன்; எப்படி? மொழியால், இனத்தால் பண்பாட்டால் நீ தமிழன். இந்த அளவுகோல்படி நீ தமிழனாக இருக்கிறாயா? இது என் கேள்வியல்ல _ தந்தை பெரியாரின் கேள்வி.

அறிஞர் அண்ணா தமிழர்கள் என்பதற்கு விளக்கம் சொன்னார் _ மொழியால், வழியால், விழியால் (பண்பாட்டில்) தமிழர் என்றார்.

உன் பெயர் முதலில் உன் தாய்மொழியில் இருக்கிறதா? உன் தாய்மொழி உன் வீதியில் இருக்கும் கோயிலுக்குள் ஒலிக்கிறதா?

உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?

தமிழா, நீ கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் உள்ளே சென்று பூசை செய்ய முடியுமா?

முடியாது! காரணம் என்ன? நீ ''சூத்திரன்'', ''பஞ்சமன்'' _ சாஸ்திரப்படி மட்டுமல்ல; இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும் கூட!
அதனால்தானே தந்தை பெரியாரும் 10 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்களும் 1957 நவம்பர் 26_இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26_வது மதப் பாதுகாப்பு பிரிவினை _ ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தினர். மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையும் ஏற்றனர்.
இன்று வரை அதில் மாற்றம் இல்லையே _ பின் எப்படி நாம் மானமுள்ள தமிழர்கள்?

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் ''நீச்ச பாஷை'' என்பவர்தானே உமக்கு ஜெகத்குரு?
நீ கொண்டாடுவது ''பண்டிகைகளே'' தவிர விழாக்கள் அல்லவே!
தீபாவளியாக இருந்தாலும், வேறு எந்தத் தெருப் புழுதியாக இருந்தாலும் ''தேவர்கள், அசுரர்களைக் கொன்றார்கள்'' என்கிற கதை வராத பண்டிகைகள் உண்டா?

அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று விவேகானந்தர் முதல் நேரு உள்ளிட்டு பி.டி.சீனிவாச அய்யங்கார்கள் வரை எழுதியுள்ளனரே _ அவற்றைப் பற்றி ஒரு நொடி நேரம் அறிவைச் செலுத்தி சிந்தித்தது உண்டா?

சுரர்கள் அசுரர்களைச் சூழ்ச்சியால் அழித்தார்கள் என்று எழுதி வைத்த கதைகளை நம்பி அசுரர்களாக்கப்பட்ட நாமே நமது அழிவைப் பெருமைப்படுத்திக் கொண்டாடுவது, ஒரு இனத்தின் தன்மானத்துக்கு அழகாக இருக்க முடியுமா?

இதனைத் தானே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 60 ஆண்டு காலத்திற்குமேல் படித்துப் படித்துச் சொன்னார். _ இதற்கு மேலும் நம் தோல் மரத்துக் கிடக்கலாமா?

தமிழன் படிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றுதானே ஓயாது பாடுபட்டோம். குலக் கல்வியை பெரியார் ஒழித்ததால்தானே தமிழன் இன்று படிப்பும், பதவியும் பெறும் நிலை!
ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறாயே! தமிழா, நீ தமிழனாக, மானம் உள்ள மனிதனாக இருக்கவேண்டாமா? அதனைத் திசை திருப்பும் ஜாதிச் சாவுக் குழி வெட்ட வேண்டாமா? உன் உடன்பிறப்பையே ''தீண்டத்தகாதவன்'' என்கிறாயே _ உன்னைச் சூத்திரன் என்பவனை 'சாமி' என்கிறாயே!

படித்த இளைஞனே _ இரண்டு பேர் நீங்கள் சந்தித்தால் உங்களின் உரையாடல் என்ன? நம் இனத்தைப் பற்றியா _ மொழி உணர்வைக் குறித்தா? பண்பாட்டுத் தளத்தைப் பற்றியா? இல்லையே!

சினிமாவைப்பற்றிதானே சிரித்துச் சிரித்துப் பேசுகிறாய்!

சீரழிக்கும் சினிமாக்கள்தான் உன் குருதி ஓட்டமா? சினிமாக்காரர்கள்தான் உங்கள் கனவு லோக லட்சியப் புருடர்களா?

உலகில் சினிமாக்காரர்களுக்காக டிக்கெட்டுகளை விற்பதும், திரைப்படப் பெட்டிகளுக்கு ஊர்வலம் விடுவதும், அதில் யார் முந்தி என்பதில் அடித்துக் கொண்டு கொலை வரை நடப்பதும் இங்கல்லாமல் வேறு எங்கு?

இந்த நாட்டைப் பீடித்துள்ள அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறியதை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாயா?

விஞ்ஞானம் வளர்ந்தால் அறிவு வேட்கை வளரும் என்பது பொது நியதி. ஆனால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?

தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனம் மற்றும் ஏடுகள், இதழ்கள் மூடத்தனத்தின், பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகையாகத்தானே செயல்படுகின்றன?

அஞ்ஞானத்தை, விஞ்ஞானத்தின் மூலம் பரப்புகிறார்களே _ இது அறிவு நாணயமா? படித்த தமிழனே, பகுத்தறிவை இழந்து இந்த வலையில் வீழ்வது விவேகம் தானா?

செல்போன், இணைய தளம் என்பது தேவையான விஞ்ஞான சாதனங்கள்தான். சினிமாக் கலாச்சாரத்தால் சீரழிந்துபோன உன் சிந்தனை அவற்றில் எவற்றைத் தேடிக் கொண்டு இருக்கிறது?

இளைஞனே, இலட்சியங்கள் உன்னை கொள்ளை கொள்ள வேண்டாமா? அவற்றிற்கு மாறாக பல்வேறு ''போதைகள்'' அல்லவா உன்னைப் பாதை மாற்றத்திற்குச் செலுத்துகின்றன.

போதைகளால் தடுமாறும் உனக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன _ சமுதாயம் சீரழிந்தால் என்ன _ மொழி மூக்கறுபட்டால் என்ன _ பண்பாடு பாழ்பட்டால்தான் என்ன?

அளவுக்கு மீறி கேளிக்கை உணர்ச்சிகள் ஒரு சமூகத்தில் புகுத்தப்படுவதற்கு உள்நோக்கம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால், உப்பே உணவாகலாமா?

தமிழனிடத்தில் இன உணர்வும், நாட்டு உணர்வும், இலட்சியக் கோட்பாடுகளும் ஆட்கொண்டு விடக் கூடாது என்கிற சூழ்ச்சிதானே!

கறுப்புச் சட்டை உனக்குச் சுயமரியாதையை ஊட்டியது _ பகுத்தறிவைக் கொடுத்தது _ சமூக நீதியைச் சொல்லிக் கொடுத்தது _ பெண்ணுரிமையைப் பேணும் பண்பாட்டை உணர்த்தியது.

அந்த மண்ணில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்ட காவிகள் காலடி எடுத்து வைத்தால், பழைய சரிதம் மறந்து, அவற்றிற்கு நடைபாவாடை விரிக்க மல்லுக்கட்டி நிற்கலாமா?

உன் இனத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்களை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்த சிலர் துடிக்கும் பொழுது, 'ஏதோ ஒரு மயக்கத்தில்' அவர்களுக்குக் கைலாகு கொடுக்கிறாய். கேட்டால் விமர்சனம் என்கிறாய் _ விமர்சனத்தின் விளக்கம் தெரியுமா உனக்கு?

திராவிடன், தமிழன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கடைசியில் எதிரிகளின் காலடிக்குள் உன்னை அறியாமல் பதுங்கப் பார்க்கிறாய். புத்தம் அழிந்த வரலாறு தெரியுமா உனக்கு?

நண்பன் யார்? பகைவன் யார்? என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் உன் எதிர்காலம் எங்கே போய் முடியும்?

'போதை'யை விடு _ சமுதாயப் பாதையை தேர்ந்தெடு! இலட்சிய மிடுக்குடன் வீறு நடை போடு!

5 நட்சத்திர ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுகிறாய். சிக்கனம் என்பதைச் சிறுமையாகக் கருதுகிறாய் _ இது உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று சிந்திக்க மறுக்கிறாய்.

தாயை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு, தாய் மூகாம்பிகைக் கோயிலுக்குக் கடன் வாங்கிக் குடும்பத்துடன் செல்கிறாய்!
ஏனிந்த போதைகள்?

உரத்தின் மூலம் உணவு விளையும் உண்மைதான்; அதற்காக உரத்தையே உண்ண முடியுமா?

எண்ணிப் பார் தமிழா!

நன்றாகத் தான் உள்ளது. ஆனால் என்ன செய்ய! இப்படி சிந்திக்கக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டார்களே! நாளை இதே கறுப்புச் சட்டைகள் அவரை கடவுளாக்காமல் இருந்தால் சரி தான்.

புத்தரை இந்நாட்டை விட்டு ஓட்ட ஆரியர்கள் செய்த தந்திரம் தான் சிலை வணக்கத்தை எதிர்த்த புத்தருக்கே சிலை வைத்து அவரை பின்பற்றியவர்களுக்கு அவரை கடவுளாக்கியது. ஆரியர்களின் மும்மூர்த்தி தெய்வங்களும், அவர்களுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்நாட்டில் மற்றொரு கடவுளால் பிடித்து நிற்க முடியுமா என்ன?

எனவே "அவாள்"களுக்கு எதிரான கருத்துக்களோடு வரும் சிந்தனாவாதிகளை ஒழிக்க "அவாள்"கள் செய்யும் தந்திரங்களில் ஒன்று தான் அச்சிந்தனாவாதிகளுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் முதலில் சிலை வைத்து கொடுப்பது. நம் நாட்டு மக்கள் தானே பின்னர் அவர்களாகவே அச்சிந்தனாவாதிகளை கடவுளாக்கிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் இல்லாமல் ஆக்குவது ஒன்றும் "அவாள்"களுக்கு கடினமல்ல.

இஸ்லாத்தில் இவ்வாறு முஹம்மது நபிக்கு ஒரு சிலை வைத்து கொடுக்க முடியவில்லையே என்ற கவலை தான் "அவாள்"களுக்கு இஸ்லாத்தின் மேலும், இஸ்லாமியர்களின் மேலும் இவ்வளவு "கரிசனத்திற்கு" காரணம்.

கவனம் கறுப்பு சட்டைக் காரர்கள்!

Saturday, December 17, 2005

நம்பினால் நம்புங்கள்!










மதிப்பிற்குரிய பாகிஸ்தான் உளவாளி!

இன்றைய தினத் தந்தியில் வந்த ராஜஸ்தானில் பிடிபட்ட ஓர் பாகிஸ்தான் உளவாளியைப் பற்றிய செய்தி:

பாகிஸ்தான் உளவாளி ராஜஸ்தானில் கைது!
2 ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல்
அனுப்பியவர்!

2 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் அனுப்பிய பாகிஸ்தான் உளவாளியை போலீசார் கைது செய்தார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் பாகிஸ்தான் உளவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி ராஜஸ்தான் போலீசாரும்,மத்திய உளவு படை போலீசாரும் இணைந்து ஜோத்பூரில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அங்குள்ள ஓட்டல்கள், பங்களாக்கள், மற்றும் சில ரகசிய இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள ஏராளமான இ-மெயில் முகவரிகளுக்கு ரகசிய தகவல்களை ஒருவர் அனுப்பியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி நடந்த விசாரணையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் ஜோத்பூர் நகரில் பதுங்கி இருக்கும் விவரம் தெரிய வந்தது.

அப்போது ஜோத்பூர் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த மகேந்திர குமார் ரிஷி (வயது28) என்பவரை போலீசார் கைது செய்தார்கள். அவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் மாவட்டம் சிந்து நகரை சேர்ந்தவர்.

2 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி, பாகிஸ்தான் ராணுவத்துக்கு உளவு வேலை பார்த்து, பல தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவர் அனுப்பி வந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

வங்காளதேசத்துக்கு போவதற்காக காலாவதியான விசாவை அவர் வைத்திருந்ததை, புனேயில் உள்ள தெற்கு ராணுவ உளவு பிரிவும், மத்திய உளவு பிரிவும் கண்டுபிடித்தது. இவர் அஜ்மீரில் தங்கி, ராஜஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள், நசிராபாத், பார்மர், ஜெய்சால்மர், அகமதாபாத், மற்றும் உ.பி. மாநிலத்தில் சில பகுதிகளையும். குஜராத் மாநிலம் சூரத், மராட்டிய மாநிலம் புனே, மும்பை ஆகிய நகரங்களையும் பார்வையிட்டு, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஏராளமான தகவல்களை மகேந்திரகுமார் ரிஷி அனுப்பி வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

இன்டர்நெட் மற்றும், எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவர் பல ரகசிய தகவல்களை அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி மகேந்திரகுமார் ரிஷி, ஜோத்பூரில் உள்ள உளவு போலீசின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.

விட்டால் அவருக்கு ஆரத்தி எடுத்து பூவும் தண்ணியும் வைத்து கும்பிட்டு விடுவார்கள் போலுள்ளது. இரண்டு வருடங்களாக நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை செய்த ஓர் உளவாளிக்கு இந்தளவிற்கு மரியாதை தரப்பட வேண்டிய அவசியமென்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

பெயரில் முஸ்லிம் அடையாளம் இருந்தால் அவன் எந்தளவிற்கு சிறிய தவறு செய்தாலும் அவன், இவன் என்று எழுதுவதும் முஸ்லிம் அடையாளம் இல்லாத போது அவன் ஏதோ இந்திய பாதுகாப்பிற்காக உயிரையே பணயம் வைத்து தீர செயல் செய்தது போன்று செய்திகள் இடுவதும் - இது தான் இன்றைய இந்திய பத்திரிக்கைகளின் மதசார்பற்ற தன்மை. இவை யாரை திருப்திபடுத்த.

இந்தியா என்றாலே இந்துக்கள் மட்டுமே தேசபக்தர்கள் எனவும் முஸ்லிம்கள் என்றால் பாகிஸ்தானுக்குரியவர்கள் என்பது போலவும் மக்களுடைய மனதில் மத துவேசமான எண்ணத்தை வலிந்து வளர்க்கும் சங்க்பரிவாரத்தினர்களுக்கு துணை போகும் இதுபோன்ற பத்திரிக்கைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் பிறந்தவன் அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் அந்நாட்டின் முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பான் என்பதும், அந்நாட்டு பாதுகாப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதையும் நாம் அனைவரும் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் இதுபோன்ற புல்லுருவிகளை அவன் யாராக இருந்தாலும் இது போன்ற மதிப்புகள் கொடுப்பதும், மத துவேசத்தை மக்கள் மனதில் விதைக்கும் விதத்தில் செய்திகளை வெளியிடுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு முதுகெலும்பாக திகளும் பத்திரிக்கை துறைக்கு அழகல்ல! அது மக்கள் மனதில் வேற்றுமையையும், பிளவையும் மட்டுமே வளர்க்குமே தவிர எவ்விதத்திலும் பத்திரிக்கையின் நம்பகத்தன்மையையும், விற்பனை எண்ணிக்கையையும் உயர்த்தாது என்பதையும் பத்திரிக்கைத் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

கயவர்நேய காவலர்கள்!

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் காலம் காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மட்டும் எந்த விதத்திலும் குறைந்த பாடில்லை. ஒரு காலத்தில் பெண்களை மனிதப் பிறவியாகவே இந்த ஆண்வர்க்க சமூகம் அங்கீகரிக்கவில்லை. காலம் காலமாக பெண்களை ஆண்களுக்காகப் படைக்கப்பட்ட போகப் பொருளாகவே இந்த சமூகம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆண்களை "சந்தோஷப்" படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த, படைப்புகளிலேயே உயர்வானதான,மதிக்க வேண்டிய தாய்மை குணம் உடைய பெண் சமூகம் காலம் மாற மாற கொஞ்சம் கொஞ்சமாக அரக்கத்தனமான கட்டுப்பாடுகளை மீறி இந்த சமூகத்தில் தனக்கென ஒரு நிலையை நிச்சயிக்க ஆரம்பித்தது.

காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் இந்நாகரீக காலத்திலும் கூட பெண்களை இந்த கேடுகெட்ட ஆண் வர்க்கம் பார்க்கும் பார்வை மட்டும் மாறவில்லை. எப்படி அந்த காலத்தில் தங்களுடைய இச்சையை தீர்க்க பயன்படும் விதத்தில் சட்டங்களை இந்த ஆண் வர்க்கம் இயற்றியதோ அதே பாணியைத் தான் இப்பொழுதும் பின்பற்றி வருகிறது. இக்காலத்தில் இனி பெண்களை அடக்கி ஒடுக்கி விட முடியாது என்றுணர்ந்த இவர்கள் போராடப் புறப்பட்ட பெண்களின் மனதில் இருந்த சம அங்கீகாரம் என்ற எண்ணத்தை பயன்படுத்திக் கொண்டு "ஆடையை அவிழ்த்தால் அல்லது ஆடையில் தாங்கள் நினைப்பது போல் நடப்பதற்கு தடையிடாதிருந்தாலே உண்மையான அங்கீகாரம் கிடைத்ததாக ஆகும்" என்று, ஒரு சில கீழ்மட்ட "கர்ப்பப்பை சுதந்திரம்" போன்ற சிந்தனையுள்ள பெண்களின் மனதில் எண்ணத்தை தோற்றுவித்து அதன் மூலம் தங்களுடைய வக்கிர எண்ணத்திற்கு வடிகால் அமைக்க முயல்கிறது.

இவ்விஷயத்தில் அனைவரும் ஒன்றை கவத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் அரை குறை ஆடையில் வருவது தான் அவர்களின் உண்மையான சுதந்திரம் என்று கூறும் வக்கிர சிந்தனையுள்ள ஆண்கள் அதையே ஆண்களுக்கும் கூற முன்வருவதில்லை. சம அந்தஸ்து எனில் குறைந்த பட்சம் ஆண்களின் உடை அளவிற்காவது பெண்களும் உடை அணிவது தானே சரி. ஆனால் இங்கு என்ன நடக்கிறது. முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்களில் கூட ஏதாவதொரு விதத்தில் அரைக்குறை ஆடையுடன் பெண்களை தோன்ற செய்து விடுகின்றனர். எதற்காக? இப்படி காட்டினால் தான் அப்பொருள் விலை போகும் என்பற்காகத் தானே! இது எதை உணர்த்துகிறது. காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதையல்லவா?. இது பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியிருக்கிறதா அல்லது தாழ்த்தியிருக்கிறதா? இதையா பெண்கள் சுதந்திரம் என விரும்புகிறார்கள்.

இவ்வாறு இன்று எங்கு திரும்பினாலும் எந்த இடத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் காணக்கிடைக்கிறாள். இது யாருக்கு இலாபம் யாருக்கு நஷ்டம். பொருளாதாரத்தை பெருக்குவதற்காக வக்கிர சிந்தையுள்ள வன்கிட முதலாளிகள், பெண்களை ஓர் சந்தைப் பொருளாக ஆக்கியதன் விளைவு? காலம்காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் இதே கொடுமை இன்று பச்சிளம் குழந்தைகளையும் நோக்கி; முன்னேறிய காலம் வக்கிர சிந்தையுள்ள ஆண்களின் உதவியால் நமக்கு தந்த பரிசு இது; ஒரு சில உதாரணங்கள்:


லால்குடி அருகே சிறுமிகளை மானப்பங்கம் செய்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ வாளாடி கிராமத்தை சேர்ந்த ராஜாமணி. அவருடைய மகள் லட்சுமி (வயது 6) அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மகள் வனிதா (5). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

இந்த சிறுமிகள் அங்கே உள்ளள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக் கூடத்துக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளையும் அதே பகுதியைச் சேர்ந்த தவமணி என்கிற குமார் (38) என்பவர் தனது வீட்டுக்கு டி.வி பார்க்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். வீட்டில் குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்று இருந்தனர். வீட்டுக்குள் அழைத்து சென்ற 2 சிறுமிகளையும் குமார் மானப்பங்கம் படுத்தியதாக தெரிகிறது.

வீட்டுக்கு சென்ற 2 குழந்தைகளும் குமார் நடந்து கொண்ட சில்மிஷங்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுமிகளின் பெற்றோர் லால்குடி அனைத்து மகளில் போலீசில் புகார் செய்தனர்.

16 வயது சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய 14 வயது சிறுவன்

13 வயது சிறுமியை 2 கயவர்களுடன் சேர்ந்து கற்பழித்து கர்ப்பமாக்கிய சித்தப்பா
- தினகரன் 30/11/2005 பதிப்பு.

நெல்லையில் 13 வயது மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றாள் - சீரழித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
- தினகரன் 30/11/2005 பதிப்பு.

வடநாட்டு பெண்களிடம் குறும்பு! கோவில் காவலர் நீக்கம் - தினகரன் 29/11/2005 பதிப்பு.

பெண் மானபங்க முயற்சி தொழிலாளி கைது
- தினகரன் 30/11/2005 பதிப்பு.

மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்
மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல் - தினகரன் 30/11/2005 பதிப்பு.

கல்லூரி மாணவி கடத்தல். 4 பேர் மீது தந்தை புகார்
- தினகரன் 29/11/2005 பதிப்பு.

பெண்ணின் கை துண்டிப்பு
கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் வெறிச்செயல்


காட்டுக்கு சென்ற பெண்ணை கற்பழிக்க முயற்சி! பெருசு, சிறுசு 3 பேருக்கு வலை - தினகரன் 06/12/2005 பதிப்பு.

குழந்தைக்கு தந்தை டிரைவரா? கிளீனரா? 2 போpடம் கற்பிழந்த நெல்லை மாணவியின் கண்ணீர் கதை- தினகரன் 05/12/2005 பதிப்பு.

திசையன்விளையில் நர்சை கற்பழித்த வாலிபருக்கு நெல்லை கோர்ட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டடது.>- தினகரன் 05/12/2005 பதிப்பு.

டியூஷன் படிக்க சென்றபோது ஆசை வார்த்தை கூறி 9-ம்வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த சித்தப்பா கைது >> - தினகரன் 02/12/2005 பதிப்பு.

வகுப்பறையில் ஆசிரியை கற்பழிப்பு, நான்கு பேருக்கு வலை

வேலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கற்பழித்துக் கொலை! கம்பெனி வேன் டிரைவர் கைது

கல்லூரி மாணவியின் சோகக்கதை!``மிஸ் ஆக்ரா`` அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியின் சோகக்கதைகணவனின் நண்பர்களால் கற்பழிக்கப்பட்டார்

கடந்த சில நாட்களில் கண்ணில் பட்ட சில செய்திகள் இவை. இவற்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் மற்றைய அக்கிரமங்கள் அடங்காது. 20 நாட்களுக்குள் இவ்வளவு அக்கிரமங்கள். இவற்றினை களையவும் இனி நடக்காதிருக்கவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்காவது ஒரு மூலையில் தங்களுடைய வசதிக்காக "4 பெண்கள் ஒரு டிரைவரை" திருமணம் முடித்த விஷயங்கள் கூட எழுதப் படும் விஷயங்களாக கண்ணில் படும் போது கண் முன்னில் நம் இடத்தில் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும் யாருடைய கண்களுக்கும் அவை செய்திகளாகப் படுவதில்லை. அல்லது கண்டிக்கத் தக்க அளவில் பெரிய சம்பவங்களாக இப்படிப்பட்ட அக்கிரமங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.
குறைந்த பட்சம் இவற்றைக் குறித்து கண்டித்து எழுதுவதற்கு கூட இந்த சிந்தனாவாதிகள் முன் வருவதில்லை.

எங்காவது பெண்கள் தன்னை மூடிக் கொண்டு போனாலோ, ஏதாவது முல்லா அவசியமில்லாமல் பெண்கள் மூடிக் கொண்டு போவதைக் குறித்து பத்வா கொடுத்தாலே இவர்கள் கிளர்ந்தெழுவார்கள். பெண்கள் "மூடிக் கொண்டால்" பின் இவர்களின் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது யாராம்.

எனவே பெண்கள் ஆண்களை நம்பி பிரயோஜனமில்லை. தங்களை தாங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் இப்படிப்பட்ட கயவர்களை கயவர்களாக மட்டுமே எண்ணி, பொது மக்கள் முன்னிலையில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்வதற்கு சட்டமியற்ற பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இதனைக் காட்டுமிராண்டி சட்டம் என்று பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் சூறையாடும் கல்நெஞ்சம் படைத்த காமகொடூரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வரும் "மனிதநேய" வேடதாரிகளிடம், "இச்சட்டம் தேவையில்லையெனில் இப்படிப்பட்ட ஈவிரக்கமில்லாத குற்றங்களை ஒழிக்க என்ன வழி" என்று அவர்களிடம் கேள்வி கேட்டு இக்குற்றங்கள் குறையாமல் இருக்க மறைமுகமாக துணைபுரியும் "கயவர்நேய" ஆர்வலர்களை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும்.

Monday, December 12, 2005

எம்.பி க்களின் வாயில பொன்னு, மக்களின் வாயில மண்ணு!

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்களை ஆஜ்தக் டெலிவிஷன் நிருபர்கள் குழு மடக்கியது. எம்.பி.க்கள் கேள்வி கேட்க ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்.


ஆஜ்தக் டெலிவிஷன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களை `பொறி' வைத்து பிடிக்க 2 நிருபர்களை நியமித்தது. அனிருத்தா பகல் மற்றும் சுஹாசினிராஜ் ஆகிய 2 நிருபர்கள் இந்த புலன் விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழுவின் தலைவர் அனிருத்தா பகல். இவர்தான் முன்பு தெகல்கா பேர ஊழலை அம்பலப்படுத்தியவர். பின்னர் இவர் `கோப்ரா போஸ்ட் டாட்காம்' என்ற இணைய தளத்தை தொடங்கினார்.

எம்.பி.க்கள் தங்களிடம் லஞ்சம் வாங்குவதை கையும், களவுமாகப் பிடிக்கும் இந்த திட்டத்துக்கு `ஆபரேஷன் துரியோதனன்' என்று பெயரிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் தங்களது புலன் விசாரணையைத் தொடங்கினார்கள்.

புலன் விசாரணை நிருபர்கள், `வட இந்திய சிறுஉற்பத்தியாளர்கள் சங்கத்தின் (நார்த் இண்டியன் ஸ்மால் மேனுபாக்சரர்ஸ் அசோசியேசன்-நிஸ்மா) பிரதிநிதிகள் என்று போலியான ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களை அதன் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டனர்.

நிருபர்கள் இருவரும் சுமார் 51 எம்.பி.க்களையும், அவர்களது புரோக்கர்களையும் சந்தித்து, தங்களது சங்கத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு எம்.பி.க்கள் ஒத்துக்கொண்டனர். 11 எம்.பி.க்கள் `ஆபரேஷன் துரியோதனன்' திட்டத்தில் சிக்கினார்கள்.


கேள்விகள் மற்றும் அது தொடர்பான துணைக்கேள்விகள் கேட்க எம்.பி.க்கள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை நிருபர்கள் குழுவிடம் லஞ்சமாகப் பெற்றனர். வருடம் முழுவதும் இப்படி கேள்விகள் கேட்க, துணைகேள்விகள் கேட்க சில எம்.பி.க்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த எம்.பி.க்களிடம் 60 கேள்விகளை நிருபர்கள் கொடுத்து, பாராளுமன்றத்தில் புயலை கிளப்பச் சொன்னார்கள். அதில் 25 கேள்விகளை எம்.பி.க்கள் தேர்ந்து எடுத்தனர். இந்த கேள்விகளை அவர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பினார்கள். ஒருவர் கேட்ட ஒரே கேள்வியை சில சமயம் வேறு சில எம்.பி.க்களும் கேட்டிருக்கிறார்கள்.

சிறுதொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்பான கேள்விகள் தவிர, சில சமயம் பங்கு மார்க்கெட் தொடர்பான, பொது மக்களுக்குப் பயன்படும் கேள்விகளையும் நிருபர்கள் கொடுத்துள்ளனர். அவற்றையும் அந்த எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளனர்.

ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த `ஆபரேஷன் துரியோதனா' கடந்த மாதம் (நவம்பர்) வரை ரகசியமாக நடைபெற்றது.

எம்.பி.க்களிடமும், அவர்களது ஏஜெண்டுகளிடமும் புலன் விசாரணை நிருபர்கள் குழு லஞ்சப்பணம் கொடுத்ததை மொத்தம் 56 வீடியோ கேசட்டுகளில் ரகசியமாக படமாக்கினார்கள். எம்.பி.க்கள் புலன் விசாரணைக்குழு நிருபர்கள், எம்.பி.க்களின் புரோக்கர்கள் மற்றும் யார்-யாருடன் அவர்கள் பேசினார்களோ, அந்த உரையாடல்களை 70 கேசட்டுகளில் ரகசியமாக பதிவு செய்தனர். 900-க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் குழுவிடம் எந்த, எந்த எம்.பி. எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்ற விவரம் வருமாறு:-

1. அன்னா சாகேப் எம்.கே.பாட்டில் (பா.ஜனதா)-ரூ.45 ஆயிரம்
2. சந்திரபிரதாப்சிங் (பா.ஜனதா)-ரூ.35 ஆயிரம்
3. பிரதீப் காந்தி (பா.ஜனதா)-ரூ.55 ஆயிரம்
4. ஒய்.ஜி.மகாஜன் (பா.ஜனதா)-ரூ.35 ஆயிரம்
5. சுரேஷ்சண்டேல் (பா.ஜனதா)-ரூ.30 ஆயிரம்
6. சத்ரபால்சிங் லோதா (பா.ஜனதா மேல்-சபை எம்.பி.)-ரூ.15 ஆயிரம்
7. நரேந்திரகுமார் குஷ்வாகா (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.55 ஆயிரம்
8. லால்சந்திராகோல் (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.35 ஆயிரம்
9. ராஜாராம்பால் (பகுஜன் சமாஜ் கட்சி)-ரூ.35 ஆயிரம்
10.மனோஜ்குமார் (ராஷ்டிரீய ஜனதாதளம்-ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்
11.ராம்சேவக்சிங் (காங்கிரஸ்)-ரூ.50 ஆயிரம்.


இந்த எம்.பி.க்களை சிக்கலில் சிக்க வைத்துள்ள புலன் விசாரணைக்குழுவின் தலைவரான நிருபர் அனிருத்தா பகல் கூறியதாவது:-

"பாராளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் உயிரோட்டமுள்ள சின்னம். பொதுமக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மூலம் தங்களது குரலை எதிரொலிக்கும் இடம் அது. அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் தங்களது பிரதிநிதி மூலம் (எம்.பி.) ஆட்சியில் பங்கு பெறும் இடமும் அது. தன்னிகரற்ற உறுப்பினர்கள் மூலம் ஜனநாயகத்தின் வலிமையை-புகழை பரப்பும் இடம் அது.

பாராளுமன்றத்தின் நீதிநெறிக்குழு வகுத்துள்ள நடத்தை விதிமுறைகளை அதன் உறுப்பினர்களான எம்.பி.க்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால் எங்களது புலன் விசாரணையின்போது சிலர் இந்த புனிதமான சபையை தலைகுனிவுக்கு ஆட்படுத்துவதை கண்டோம். பாராளுமன்றத்தின் மீது எங்களது புலன் விசாரணைக்குழு ஆழமான மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளது. இந்த எங்களது புலன் விசாரணையின் மூலம் பாராளுமன்றத்தின் புனிதத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க லஞ்சம் கேட்ட எம்.பி.க்கள், சில பிரச்சினைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று யோசனை தெரிவித்து, அதற்காக ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அனிருத்தா பகலின் `கோப்ரா போஸ்ட் டாட்காம்' என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி : தினதந்தி

Sunday, December 11, 2005

பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை.

பத்திரிக்கைகள் இம்ரானாவுக்கும் சானியா மிர்சாவுடைய அரை நிர்வாண உடம்பைப் பற்றி ஏதோ மதப் பண்டிதன் தெரிவித்த அபிப்பிராயத்திற்கும் முன் பக்கத்தில் இடம் கொடுத்தபோது ஹரியானா கோஹானா கிராமத்தில் ஒரு தலித் கிராமம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி தலைமையில் மேல்ஜாதிக்காரர்கள் தீ வைத்து நாசப்படுத்திய சம்பவத்திற்கு அதன் உட்பக்கம் ஒரு சிறிய இடம் கூட கொடுக்கவில்லை.

இதற்கு முன் செப்டம்பரில் மஹாராஷ்டிரா அகோலாவில் ஒரு தலித் கிராமம் தீக்கிரையாக்கப் பட்ட சம்பவம், சில தலித் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே ஒரு விஷயமாகப் பட்டது. கோஹானாவில் வீடுகள் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நாசமாக்கப் பட்டதாக அவ்விடம் பின்னர் பார்வையிட்ட மனித உரிமை கழகத்தினர் கூறுகின்றனர். வால்மீகி சமுதாயத்தில்பட்ட வீடுகளும் வீட்டு சாதனங்களும் குறிவைத்து நாசமாக்கப்பட்டது. குஜராத் மாதிரியில் இருந்தது இந்த அழிப்பு. பி.ஜே.பி எம்.பி யாய கிஷன்சிங்க் ஸங்க்வினுடைய மகனும் சகோதரனும் இந்த தாக்குதலுக்கு சுக்கான் பிடித்தனர்.

இதில் சமையல் கியாஸ் தாராளமாக பயன்படுத்தப் பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மேல்ஜாதிகாரரில் ஒருவரை தலித்கள் கொன்றதற்கான பதிலடியாக இந்த தாக்குதல் என்று அவர்கள் கூறினர். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அதில் சம்பந்தமுள்ள வால்மீகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அக்கிராமத்தை தாக்கி அழிப்போம் என்று ஏற்கெனவே பி.ஜே.பி தலைவர்கள் அறிவித்திருந்தனர். கிராம பஞ்சாயத்து கூட்டியப் பிறகு மேல்ஜாதிக்காரர்கள் தலித்துகளுக்கு எதிராக திரும்பினர். தாக்குதல் 5 மணி நேரம் நீண்டு நின்றது.

வால்மீகிகள் சமீப காலமாக பொருளாதார ரீதியில் சற்று மேலே வந்தது பிரபல சமுதாயமான ஜாட்டுகளுக்கு அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. சுத்தம் செய்யும் துப்புரவு பணிக்காரர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுவது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் ஜில்லா நிர்வாகம் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு துணை நின்றது. பி.ஜே.பி எம்.பி யுடைய மகனையும், மருமகனையும் போலீஸ் கைது செய்யவில்லை. வீடுவிட்டு வெளியேறியவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு உதவவும் ஜில்லா நிர்வாகம் தயாராகவில்லை.

இந்தியாவில் தலித் அக்கிரமங்களை தடைவதற்குண்டான சட்டங்களுக்கு ஒரு குறையும் இல்லை. 1955 - ல் தீண்டாமைக்கெதிரான சட்டம் முதல் 1989 -ல் தலித்களுக்கு எதிராக நடக்கும் தாகுதல்களுக்கு எதிரான சட்டம் வரை பல சட்டங்கள் ஏடுகளில் உண்டு. ஆனால் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் தலித்துகளுக்கு எதிரேயுள்ள அக்கிரமங்கள் கொஞ்சமும் குறையவில்லை என்பதை தெளிவிக்கின்றன. சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ள தலித்துகள் தங்களுடைய சுயநிர்ணயத்திற்காக குரல் கொடுக்க எழும்புவது தான் இது போன்ற அக்கிரமங்கள் நடக்க காரணமாகின்றன.

ராஜஸ்தானில் கும்கர் கூட்டுக்கொலையிலிருந்து தப்பிய சுன்னிலால் இவ்வாறு கூறுகிறார்,"சுப்ரீம் கோர்ட்டின் எல்லா நீதிபதிகளும் சேர்ந்தாலும் அவர்களுக்கு கிராமத்தில் ஒரு கான்ஸ்டபிளிற்குள்ள அதிகாரம் இல்லை. எங்களை பாதுகாப்பதும் அழிப்பதும் அந்த கான்ஸ்டபிளின் கையில் உள்ளது. அவர் அவருக்குக்காக சட்டம் உண்டாக்குகின்றார்."

எப்படிப்பட்ட அக்கிரமம் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைத்தான் இப்படிப்பட்ட சட்ட விரோதிகளை ஊக்குவிக்கின்றது. உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் ஆட்சி காலத்தில் மேல்ஜாதிக் காரர்களுக்கு எதிராக தலித் அக்கிரமங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றாக பின்வலிக்கப் பட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா அரசும் இது தான் செய்தது. பின்னர் வந்த என்.ஸி.பி - காங்கிரஸ் கூட்டணி அரசும் அதே பாணியைத் தான் பின் தொடர்ந்தது.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட பஞ்சாயத்துக்களில் கூட அவர்களுக்கு போட்டியிடவும், வெற்றி பெற்றால் பதவி வகிக்கவும் முடியாது. மேலவளவில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரின் தலையை மேல் ஜாதிக்காரர்கள் வெட்டி கிணற்றில் வீசினர்.

பத்வா முல்லாக்களின் ஏகாதிபத்தியத்தைக் கூறி பத்திரிக்கைகள் கவலைக் கொள்வது, தொடர்கதையாக மாறிய தலித்துகளுக்கு எதிரான அக்கிரமங்கள் மக்களுடைய கவனத்திற்கு வருவதை தடைவதற்கான தந்திரம் என சந்தேகப் படவேண்டியிருக்கிறது.

நன்றி: தேஜஸ் நவ. 1௧5 பக்கம் 47.

Saturday, December 10, 2005

பால் விற்க வாரீயளா?

ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தான். ஊரின் எல்லையில் இருந்த குளத்தங்கரையில் அவன் வீடு அமைந்திருந்தது. அதிகாலையில் எழுந்து பால் கறப்பது தான் அவனுடைய முதல் வேலை. கறந்தபாலை பெரும்பாலும் வீட்டின் முன் அமர்ந்து விற்பது அவன் வழக்கம்.

வாரத்தில் வெள்ளிக் கிழமை மட்டும் ஊரின் உள் சென்று பால் விற்பான். வீட்டின் முன் அமர்ந்து பால் விற்கும் பொழுது கிலோ கணக்கில் நிறுத்தும், ஊரின் உள் செல்லும் பொழுது லிட்டர் கணக்கில் அளந்தும் பால் விற்பது அவனுடைய பழக்கம். ஊரில் பால் விற்று திரும்பும் பொழுது பால் விற்கத் தேவையான உபகரணங்களை ஊரின் உள் இருக்கும் அவனுடைய சகோதரியின் வீட்டில் வைத்து விட்டு வந்து விடுவான்.

அன்றும் பதிவு போல் அதிகாலையிலேயே எழுந்து பால் கறந்தான். அன்று திங்கள் கிழமையாதலால் வீட்டின் முன் அமர்ந்து பால் விற்க எல்லா ஆயத்தங்களையும் செய்ய ஆரம்பித்தான்.

பால் விற்க தேவையான எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்து வீட்டின் முன் வைத்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து விட்டு கடைசியாக பாலை எடுக்க வீட்டின் உள் சென்றான்.

இந்நேரம் பல நாள் இவன் செயலை கவனித்துக் கொண்டிருந்த கள்வன் ஒருவன் மெதுவாக வந்து கல்லாப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அப்பொழுது தான் பாலை வெளியில் கொண்டு வந்த பால்காரன் இதைக் கவனித்து விட்டான். பால்காரனின் கத்தலில் கள்வன் வேகமாக ஓட ஆரமித்தான். அவன் ஓடிய வேகத்தில் எடைக் கற்கள் அனைத்தும் கீழே விழுந்து விட்டன.

கல்லாப் பெட்டியும், தராசுடனும் கள்வன் ஓடி மறைந்து விட்டான்.

பால் வாங்குவதற்கு மக்கள் வர ஆரம்பித்தனர். பால்காரனுக்கோ இக்கட்டான நிலை. பாலும் எடைக் கற்களும் மட்டுமே தற்போது அவன் கையில் உள்ளன. நிறுப்பதற்கு தராசு இல்லை.

விழித்துக் கொண்டிருக்கும் பால்காரனுக்கு பாலை விற்க உங்களின் மேலான ஆலோசனைகளைக் கூறுங்களேன்.

ஏதாவது சீரியசாக நினைத்து வந்தவர்களுக்கு ஸாரி. எப்பொழுதும் சீரியசாகவே இருக்க வேண்டுமா என்ன?

சரி. சரி. வந்ததே வந்தாயிற்று, பாவம் அந்த பால்காரனுக்கு முடிந்த ஆலோசனைகளைக் கூறிவிட்டு செல்லலாமே!

வித்தியாசமான, சிறந்த ஆலோசனைகளுக்கு "தகுந்த" வெகுமதி அளிக்கப் படும்.

பிற்சேற்கை:

"தகுந்த" வெகுமதி அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட நம்ம ஐடியா அய்யாசாமி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தேவைப் பட்டவர்களுக்கு அவரவர் கேட்ட அளவு மிகச் சரியாக அளந்து கொடுத்து மொத்த பாலையும் விற்றுவிட்டார்.

எப்படி அவர் மொத்த பாலையும் விற்றார்?

Monday, December 5, 2005

பாதிக்கப்பட்ட ஜாதிக் கட்சி!

குடைக்குள் மழை என்பதைப் போல, காவி உடுத்திய "நெருப்பு', உமாபாரதி!

அந்த நெருப்பு இப்போது பாஜகவை வறுத்தெடுக்கிறது. ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, அத்வானிக்கு எதிராக சவால் விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. "உங்கள் மகளைப் போன்றவள்' என்று கூறி, வாஜபேயி, அத்வானியைச் சமாதானப்படுத்தி மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார்.

ஆனால், இந்த முறை உமாபாரதி ஏந்தியிருக்கும் ஆயுதம் மிகவும் கூர்மையானது. இழந்துவிட்ட மத்தியப் பிரதேச முதல்வர் பதவி, பிகார் தேர்தலுக்குப் பிறகு தனக்கு மீண்டும் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்த அவரது ஆசையில் மண்ணைக் கொட்டிவிட்டது பாஜக தலைமை. தலைமையின் விசுவாசி சிவராஜ் சிங் சௌஹானை, பாபுலால் கௌருக்குப் பதிலாக முதல்வராக அறிவித்தது. அந்த ஆத்திரம் தாங்க முடியவில்லை.

அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினார்கள். வார்த்தைக் கணைகளால் தலைமையை அடித்து நொறுக்கினார் உமா. தில்லியில் நான்கு பேர் (அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு) அமர்ந்து கொண்டு அடுத்தவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கலாசாரத்தை ஏற்க முடியாது என்றார். அந்த நால்வரும் சேர்ந்து, வாஜபேயி, அத்வானி இயக்கும் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் செல்கிறார்கள் என்றார். அதாவது, கட்சித் தலைவருக்கு சுயமாக சிந்திக்கும் சக்தி இல்லை என்று ஆத்திரமூட்டியிருக்கிறார்.

உமாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாரதீய ஜனதா கட்சியைப் பாதிக்காது என்று அதன் தலைவர்கள் ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அது கட்சியின் வெற்றி வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும்.

வாஜபேயி பிரதமராக இருந்தபோது, அவரை விமர்சனம் செய்தார் கல்யாண் சிங். அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சியையும் துவக்கினார். ஒரு கட்டத்தில் சோனியா காந்திக்குக் கூட புகழாரம் சூட்டினார். 2002-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதன் பிறகு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு, கட்சிக்குள் இழுக்கப்பட்டார் கல்யாண் சிங். ஆனாலும் கூட, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பாஜகவின் பலம் 59-ல் இருந்து 10 ஆகக் குறைந்தது.

பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்யாண் சிங், உ.பி.யில் பாஜகவைப் பலவீனப்படுத்தும் அளவுக்குப் பலமுள்ளவராக இருந்தார். அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க, தொண்டர்கள் ஆதரவு பெற்ற தலைவராக இருப்பவர் உமாபாரதி. அவரும், லோத் என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

ஒழுங்கு தவறியதாக தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தான் ஏற்கப்போவதும் இல்லை, அங்கீகரிக்கப்போவதும் இல்லை என்று சொல்கிறார் உமா. தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கிறார். "ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அருண்ஜேட்லி ஆஜராகவில்லையா? குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக கட்சிப் பத்திரிகையில் மகாஜன் கடிதம் எழுதியது தவறில்லையா? தில்லி மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்கட்சி தகராறுதான் காரணம் என்று சுஷ்மா குற்றம் சாட்டியது மட்டும் நியாயமா? ஜின்னா பற்றி அத்வானி சொன்னது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டதா? அவர்கள் மீதும் விசாரணை நடத்துங்கள்' என்று ஆவேசப்பட்டிருக்கிறார் உமாபாரதி.

முக்கியத் தலைவர்களை முரட்டுக் காளைகளாகவும், அவர்கள் குறி வைக்கும் "ஆடு' -எனத் தன்னையும் சித்தரித்து இன்னும் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்.

கட்சிக்குள் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக(பாவம் பங்காரு லக்ஷ்மணன்) முக்கியமான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார் அவர். குஜராத்தில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா (தற்போதைய மத்திய அமைச்சர்) புறக்கணிக்கப்பட்டதால்தான் காங்கிரஸில் சேர்ந்தார். அதேபோல, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக கட்சிக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், உமா விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜக தலைமை இந்த முறை மிக உறுதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், கட்சியில் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று உணர வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கருதும் பாஜக தலைவர்களும் உண்டு. வெளிப்படையாக அதைச் சொல்லாவிட்டாலும், பிகாரின் புதிய துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பாஜகவின் சுஷில் மோடி போன்ற தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இப்படித்தான் புலம்புகிறார்கள். "பிகாரில் கிடைத்த வெற்றியை ஆதாரமாக வைத்து, கட்சிக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ம.பி.யில் கை வைத்து பிகார் வெற்றியை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். பாபுலால் கௌர் இன்னும் சில காலம் தொடர அனுமதித்திருக்கலாமே. அப்படி அவசரமாக முதல்வரை மாற்ற வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது?' என புலம்புகிறாராம் சுஷில் மோடி.

உமாபாரதியின் குருவான உடுப்பி பெஜாவர் மட சீயர், தன் சிஷ்யை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முறையானது அல்ல என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சங்கப் பரிவாரங்கள் உமா மீது பரிவு காட்டுவதாக இல்லை. உள்கட்சி விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் ஆகிய இரண்டு அமைப்புகளுமே ஒதுங்கிக் கொண்டுவிட்டன. மத்தியப் பிரதேச பாஜக விவகாரங்களில் ஆர்எஸ்எஸ்ஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் சோனி தலையிடுவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சனுக்கு கடிதம் எழுதினார் உமா. அதை பத்திரிகைகளுக்கும் கொடுத்துவிட்டார். அதனால், ஆர்எஸ்எஸ் அவர் மீது கடும் ஆத்திரத்துடன் இருக்கிறது.

ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா உமாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"கர்வம் கொண்ட சில தலைவர்களின் திருப்திக்காக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக கட்சித் தலைமை எனக்கு உத்தரவாதம் தர வேண்டும். அதாவது, புதிதாக வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்குள் சாதி, மத, இனப்பாகுபாடுகளை அகற்ற வேண்டும். பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் மற்ற தலைவர்களுக்கு எதிராக செய்தி கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பவை அந்த நிபந்தனைகள். ஏற்கெனவே, கடந்த முறை தான் கட்சிக்குள் சேர்க்கப்பட்டபோதே இந்தக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதாக தலைமை உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என்று கூறியிருக்கிறார்.

சண்டைக் கோழி உமா, சமாதானமாகச் செல்லும் மனநிலையில் இல்லை. "நான்தான் உண்மையான பாஜக' என்று அவர் கூறிக்கொண்டாலும், அடுத்துவரும் மாதங்களில் தனியாக மாநிலக் கட்சி துவக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை பலவீனப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாத இறுதியில் பாஜக தலைவர் அத்வானி தனது மகுடத்தை இறக்கி வைக்கப் போகிறார். இப்போது, உமாவை ஓரங்கட்டிவிட்ட நிலையில், நால்வர் அணி (அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், சுஷ்மா, வெங்கைய நாயுடு) தங்களுக்குள் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடும். அதற்குக் குறுக்கே நிற்கும் ஆர்எஸ்எஸ் ஆசி பெற்ற முரளி மனோகர் ஜோஷியை வீழ்த்துவது எப்படி என்று அவர்கள் சிந்தனை அடுத்த பாதையில் திரும்பக்கூடும்.

ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்கும் முன்பு, உண்மையான கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து வந்த பாஜக, இப்போது "காங்கிரஸ் கலாசாரத்துக்கு' முற்றிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்டது. அதனால், மீண்டும் ஒரிஜினல் கட்டுப்பாட்டுக்குத் திரும்புவது என்பது பாஜகவுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

உமாபாரதி ஒரு போராளி. அவரை எளிதில் அடக்கிவிட முடியாது. ஒரு உமாபாரதியை ஒழித்துக் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதைவிட, இன்னும் பல உமாபாரதிகள் உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதில் தனது கவனத்தைத் திருப்புவதே பாஜகவின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

- நன்றி : தின மணி

எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே!

Saturday, December 3, 2005

வளர்ச்சிப் பாதையில் இந்தியா!

வருங்கால இந்தியா எவ்வாறு இருக்கும்?

ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது. சில கிரிமினல் அரசியல்வாதிகளின் ஊழலால் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட சுமார் 50 ஆண்டுகள் பின் தங்கி இருக்கும் நாம் வருங்காலத்தில் மற்றவர்களுக்கு சமமாக எல்லாத்துறையிலும் முன்னேற முடியுமா என்பது நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருத்தரின் மனதில் எழும்பும் மிகப் பெரிய சந்தேகமாகும்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில் முதலில் அந்நாடு தன்னிறைவு அடைய வேண்டும். முக்கியமாக தனக்கு தேவையான சாதனங்களுக்கு மற்றவரின் முன் கையேந்தும் நிலை மாற வேண்டும். இது சாதாரண ஒரு மனிதனில் ஆரம்பித்து ஒரு நாடு வரை எல்லாவற்றுக்கும் பொதுவான விஷயமாகும்.

அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தி என்னவெனில்,
சமீப காலங்களில் இந்தியா ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களில் தனக்கு தேவையான சாதனங்களை தானே தயாரித்து அதனை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி(விற்கும்) செய்யும் நிலையை சமீப காலங்களில் எட்டியுள்ளது தான். இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் ஊழல் ராஜாக்களின் பிடியில் கைப்பாவையாக இருக்கும் இந்தியாவில் இது ஒரு மாபெரும் சாதனையாகும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் சவாலாக இருப்பது பாதுகாப்புத் துறையாகும். முக்கியமாக இத்துறையில் எந்நாடு மற்றவரை எதிர் பார்க்காமல் வித்தியாசமான பாதுகாப்பு சாதனங்களை தன்னால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை உலகுக்கு காட்டுகிறதோ அந்நாடு உலகின் முன் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அமெரிக்கா உலகில் இறுமாந்து நிற்பதற்கு இது தான் காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்த வரை கடந்த காலங்களில் நமது பாதுகாப்பு தளவாடங்களுக்கு மற்றவரைச் சார்ந்து நிற்கும் நிலை இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு தான் வருங்கால உலகிற்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் இன்றைய உலக அதி பயங்கர தீவிரவாதி அமெரிக்கா, ராணுவ தளவாடங்களை நமக்கும் அதே நேரத்தில் நமக்கு சவாலாக இருக்கும் பாகிஸ்தான் போன்ற சுற்று புற நாடுகளுக்கும் விற்று தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொண்டது. (சகோதரர்களுக்கிடையில் குழப்பமும், பிரச்சினயும் என்றும் நிலை நின்றாலே மூன்றாம் மனிதனுக்கு அங்கு இடமிருக்கும் என்ற சாதாரண மூன்றாந்தர சிந்தனை).

இந்நிலைக்கு இதோ இந்தியா ஆப்பு வைக்க ஆரம்பித்து விட்டது.

ஆம். இன்றைய மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியில் உருவான ஆகாஷ் ஏவுகணையை நேற்று இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். இது நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஓர் மைல் கல்லாகும்.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் ஓர் மிகப் பெரிய சாதனையை மிக அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இது நிச்சயம் நமது வளர்ச்சிக்கு உறு துணை புரியும். அதே நேரம் கவனிக்கப் பட வேண்டிய மற்றொரு விஷயமும் உண்டு. உலகில் எந்த நாடும் தன்னை விட மிஞ்சுவதை என்றுமே உலக அண்ணன் அனுமதித்ததில்லை. அதற்கு சோவியத் யூனியனிலிருந்து பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும். தனக்கு சவாலாக வளரும் என்று தோன்றினால் அந்நாட்டை எந்த அயோக்கியத்தனம் செய்தாவது அடித்து வளர விடாமல் தடுப்பதில் அது கவனம் செலுத்தும்.

சமீப காலங்களில் இந்தியாவுடன் அண்ணன் நெருங்குவதற்கு காரணமும் அது தான். ஆசியாவில் சோவியத் யூனியன் உடைந்த பிறகு சொல்லப் படும் ஒரே சக்தியாக வளரும் சீனா தான் அதற்கு காரணம். நாளை ஏதாவது காரணம் கூறி இந்தியாவிற்கு எதிராக களமிறங்காது என்பதும் நிச்சயமில்லை.

இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தந்திரமாக நீங்கினால் வரும் காலங்களில் இந்தியா உலகில் ஓர் பெரும் சக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதற்காக இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உழைப்போம். வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்!