Saturday, November 10, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...2

முன்னுரை , பாகம் 1
ஆரவாரமில்லாத இருட்டடிப்பு:

தந்திரமாகச் சூழ்ச்சிகள் செய்வதுடன் திட்டமிட்டு கையாளக் கூடியத் தலைவர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் இருந்தனர். கற்பழித்து, கொலை செய்து, கொள்ளையடித்து எனக் கட்டளைகளை முறையாகச் செய்து முடிக்கக் கூடியவர்களும் இருந்தனர். இந்த இனப்படுகொலை ஒரு சோதனை முயற்சியே.

கோத்ரா சம்பவத்திற்குப் பின் குஜராத்தில் நடந்த வன்முறைகள் இயல்பாகவே உருவானவைகள் அல்ல. மாறாகத் தூண்டுதல்களால் நடத்தப்பட்ட வன்முறைகளே. இவ்வன்முறைகள் சதி செய்யப்படாமலோ, திட்டமிடப்படாமலோ, குறிவைக்கப்படாமலோ நடந்த ஒரு வகுப்புக் கலவரமல்ல. இது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட படுகொலைகள். இது ஒரு இன அழிப்பாகும்.

குஜராத்திலுள்ள நகர்புறங்கள் மற்றும் கிராமங்களில் முஸ்லிம்கள் வசிக்கும் சுற்றுப்புறங்கள் தெளிவாக இனம் காணப்பட்டுத் தந்திரமாக மிகச் சாதுரியமாகத் திட்டமிடப்பட்டுத் தாக்கப்பட்டது. முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் சரி, எவ்வழியானாலும் சரி, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்னும் ஒரே குறிகோளோடு, ஹிந்துக்களிலுள்ளப் பல்வேறு பிரிவினரும் ஒன்றிணைந்தனர். தெஹல்காவின் உண்மை கண்டறியும் நிகழ்வின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களைக் கொல்லும் முறையில், உயிரோடு எரிப்பதையே அதிக விருப்பமுடையதாகத் தெரிவித்தனர். ஏனெனில் இறந்தவர்களை எரிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.

பிப்ரவரி -27, கோத்ராவில் சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின், குஜராத்தின் பிஜேபி அரசாங்கம் மக்கள் பார்வையிலிருந்து முழுமையாக மறைந்து கொள்ள, ஹிந்து அமைப்புகளிலுள்ள ஆயுத கூலிப்பட்டாளங்கள் அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வழிவிடப்பட்டது. மூன்று நாட்கள் எவ்வித சட்டஒழுங்கும் இல்லாத அராஜகமான சூழ்நிலை முழுமையாக நீடித்தது. ஹிந்து அமைப்புகளான VHP,RSS, பஜ்ரங்தள், கிஷான் சங், ABVP, BJP ஆகியவற்றிலிருந்து கொள்கை வெறியுடையத் தொண்டர்களைக் கொண்டக் கொலைப் பட்டாளங்கள் அமைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் மசூதிகளும், தர்காக்களும் தகர்க்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது. அஹமதாபாத்தில் மட்டும் முஸ்லிம்களின் மார்க்கத்தலங்கள் 73ம், சபர்கந்தாவில் 55ம், வதோதராவில் 22 இடங்களும் தீக்கிரையாக்கப்பட்டது.

குஜராத்திற்கு மிகப்பெரும் அவமானத்தை உருவாக்கியவர்கள் இரு வகையானவர்கள். அவர்களில் மிகச் சாதுரியமாக, எவ்வித தடுமாற்றமுமில்லாமல் தந்திரமாக திட்டமிடக்கூடியவர்களும், இரகசியமாக சதி செய்யக் கூடியவர்களும் இக்கொடூர மனிதவர்க்க படுகொலைச் சம்பவங்களின் போது பின்னாலிருந்து சதி திட்டங்களைத் தீட்டினார்கள். இன்னும் ஹிந்துத்வா என்று சொல்லப்படும் காவிப் பட்டாளக் கும்பல்கள், மிக மோசமான வெறி நோக்கத்தோடு கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் என எல்லாவிதமான அரக்கத்தனத்தையும் நடத்தினர். அச்சம்பவத்தில், வன்முறையாளர்களுக்கு உற்சாகமும் துணிவும் உண்டாக்கும் வகையில் திட்டம் தீட்டியத் தலைவர்களும் களத்தில் இறங்கிப் படுகொலைகளில் பங்கெடுத்தனர்.

அஹ்மதாபாத்: மனிதவர்க்கத்தின் படுகொலை தலைநகரம்!

நரோடா, குல்பர்க், கலுபூர், தரியாபூர் ஆகிய இடங்களில், கொலைகார வன்முறை கும்பல் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெறியுடன், சங்க்பரிவாருடைய ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றியது.

குஜராத் இனப்படுகொலையில், மிகப் பயங்கரமாக திகிலடையச் செய்யும் படுகொலைகள், அஹமதாபாத்திலுள்ள நரோடா கவ்ன் மற்றும் நரோடா பாட்டியா ஆகிய இடங்களில் நடைபெற்றவைகளாகும். பஜரங்தள் உள்ளுர் தலைவனான பாபு பஜ்ரங்கி என்பவனே இக்கோர வன்முறைகளின் முக்கிய சதிகாரர்களில் ஒருவனாவான். கோத்ராவில் சபர்மதி தீஎரிப்புச் சம்பவம் வெளியான உடனேயே, படுகொலைகள் செய்வதற்குரியத் திட்டங்களை உடனடியாக இவன் தீட்டினான். பிப்ரவரி -27 மாலையிலிருந்தே, துப்பாக்கிகளும், எரி பொருள்களும் சேகரிக்கப்பட்டதோடு, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர்களைக் கொண்டு பஜ்ரங்கி ஒரு கலவரக் குழுவை உருவாக்கினான். குற்றச் செயல்களில் பிரிசித்தி பெற்ற இனமாகிய சாரா சமுதாயத்திலுள்ள மக்களும் இவ்வன்முறை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களில் சுரேஷ் ரிச்சர்ட், பிரகாஷ் ரதோட் என்ற இருவருடன் தெஹல்கா பேசியபோது, "முஸ்லிம்களைக் கொல்வதின் மூலம் ஹிந்து மதத்திற்கு தாங்கள் பெரும் சேவையாற்றுவதாக நம்புகிறோம்" என இவ்விருவரும் கூறினார்கள். இவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 28, 2002 அன்று பஜ்ரங்கி, கொலைகள் செய்யக் கூடிய வன்முறை கும்பலை நரோடா பாட்டியா மற்றும் நரோடா கூவுனிலுள்ள ஒடுக்கமான சந்துக்களில் முன்னோடியாக வழி நடத்திச் சென்றான். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், டாக்டருமான மாயாபென் கோடனி என்பவன், எதைப்பற்றியும் பொருட்படுத்தாத வகையில் வன்முறையாளர்களைத் தூண்டிக் கொண்டிருந்தான். கோடானி நரோடா முழுவதும் நாளெல்லாம் சுற்றி வலம் வந்தவனாக, வன்முறையாளர்களிடம் முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி அவர்களைக் கொல்லவும் ஊக்கமூட்டிக் கொண்டிருந்தான் என தெஹல்காவின் ரகசிய உளவு கேமராவில் பதிவாகியுள்ள ரிச்சர்ட் மற்றும் ரதோட் ஆகிய இருவரும் கூறினார்கள். கோடானியின் நம்பிக்கைக்குரியத் தளபதியும் பிஜேபின் உறுப்பினருமான பிபின் பன்ஜல் என்பவனும், வெறியோடு ஆயுதம் தாங்கிய தனது ஆதாரவாளர்களுடன் அங்கு வந்திருந்தான். பஜ்ரங்கியும், மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலும் இப்படுகொலை சம்பவங்கள் நடந்தேறிய நேரம் முழுவதும் தொலைபேசியுடன் உரையாடிய வண்ணம் இருந்தனர். ஆனால் பட்டேல் சதித் திட்டத்திலும் பங்கெடுத்தானா? என்பது பற்றி பஜ்ரங்கி ஏதும் தெரியப்படுத்தவில்லை. இருந்தாலும், படுகொலைகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அவ்வப்போது பட்டேலுக்குத் தகவல் சொன்னதாகக் கூறினான். நரோடா காவுன் படுகொலை வன்முறையின் போது உயிர் தப்பியப் பலரும், நரோடா வன்முறை கும்பலுக்கு பட்டேல் தான் தலைவனாக இருந்தான் எனத் தெரிவித்தனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..... பாகம் 3

2 comments:

  1. நேற்று தனே மாவட்டத்தில் 25 கீருஸ்துவ பாதியார்கள் VHP குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளர்கள்.
    தெஹல்காவால் சங்பரிவார வெறியர்களில் கோர முகங்கள் தோல் உரித்து காட்டிய பின்பும், இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. கோயமுத்தூர் குண்டு வெடிப்புக் காரணமான அல்-உம்மா தடை செய்யப்பட்டது எந்த அளவுக்கு நியாயமானாதே அதை விட பல்லாயிரக்கணக்கணாக மடங்குகளுக்கு மேல் நியாயமான சங்பரிவார அமைப்புகளின் தடையை பற்றி இது வரை எந்த அரசியல் கட்சிகளும் கூட வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறதுஇ தெஹல்கா அரசியல்வாதிகளின் சாயத்தை வெளியாக்குவதால், ஒட்டு மொத்த அரசியல்வாதழகளுக்கும் தெஹல்கா விரோதமாகி விட்டதோ?
    இதுவரை பயங்கரவாத நடவடிகடகைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கபடும் சாட்சியங்கள் எதுவும் இல்லாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில் சிமி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. நிரூபனம் ஆக்கப்பட்டும் சங்பரிவார அமைப்புகளின் தடையை பற்றி இது வரை எந்த அரசியல் கட்சிகளும் கூட வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
    இப்படி பொறுபற்ற தன்மை நிலைக்குமானால், இந்தியாவில் ரத்த ஆறுகள் ஓடுவதும், குண்டுகள் வெடிப்பதும், வளறும் சிசுக்கள் உள்ளிட்ட பாலகர்களும், பெரியவர்கள், கர்பிணி உள்ளிட்ட பெண்களும் ஈவுஇரக்கமின்றி கொள்ளபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் மதசார்பின்மையை பற்றி வாய் கிளிய பேசும் அரசியல்வாதிகள் நாட்டின் நன்மைக்காக முன்வர போகிறார்களா? அல்லது சாராசரி அரசியல் கூத்துகளிலே (ஓட்டு பொறுக்கி அரசியல் நடத்துவது) காலம் கழிக்க போகிறார்களே? என தேசமே நீ நிம்மதியாக இருக்க போகும் நாள் என்று வரும்

    நிம்மதிக்காக ஏங்கும் இந்திய பிரஜை

    ReplyDelete
  2. நாட்டை காக்கும் போரில் தன் இன்னுயிர் ஈந்தார்கள் நமது ராணுவ வீரர்கள். அந்த வீரர்களின் பிணத்தின் மேல் நின்று கொளுத்த பணம் தின்றார்கள் தேச பக்தியை குத்தகைக்கு எடுத்த இந்த பிணம் தின்னி பாசிஸ்டுகள். சவப்பெட்டி ஊழல் அம்பலத்திற்கு வந்ததும் தேச பக்தி வேடம் கலைந்து அம்மணமாய் நின்றார்கள் நாட்டு மக்கள் முன்னிலையில். உடனே நடந்தது(நடத்தப்பட்டது) பாராளுமன்ற தாக்குதல். சவப்பெட்டி ஊழலை மறைத்து பொடவை கொண்டு வந்து விட்டார்கள்.

    இந்த இருபதாம் நூற்றாண்டு நரபலி பைத்தியம் மோடிக்கு தன் சக பாசிஸ்டுகளிடமிருந்து கட்சிக்குள்ளே ஒரு சின்ன எதிர்ப்பு. உடனே நடத்தப்பட்டது என்கவுண்டர். 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகானை மர்மஸ்தானத்திலே சுட்டு கொன்றார்கள். ஊடகங்கள் இவர்களை கதாநாயகர்களாக்கி இறந்தர்வர்களை பயங்கரவாதிகளாக்கியது. கட்சி எதிர்ப்பு கலகலத்தது.

    மோடிக்கு மீண்டும் அரிப்பெடுத்தது. சொக்ரபுட்தீன் ஷேக்கை சுட்டு கொன்றார்கள். அவர் மனைவி கவ்சர் பீவியை கற்பழித்து எரித்து கொன்றார்கள். அனைத்தும் என்கவுண்டர் என்ற பெயரில். உண்மை வெளி வந்து மோடி மீது விசாரணை என்றெல்லாம் நாடு அல்லோகலப்பட்டது. 'எதிர்பார்த்தது போல்' ஹைதராபாத் மஸ்ஜிதில் குண்டு வெடித்து அங்கே சில முஸ்லீம் பிணங்கள் விழுந்ததும் அனைத்தும் முடிவுக்கு வந்து 'பயங்கரவாதிகளை' தேட ஆரம்பித்து விட்டார்கள்.

    இப்போது தெகல்காவினால் நாட்டு மக்களுக்கு இந்த பாசிஸ்டுகளின் கோர முகம் தெரிந்துள்ளது. இவர்களின் வழி என்ன என்பதை மேலே சில உதாரணங்கள் மூலம் பார்த்தோம். முஸ்லிம்கள் மீது பழி போட அடுத்து என்ன நடக்குமோ என்று சமுதாயம் பதை பதைப்போடு பார்த்து கொண்டிருக்கிறது.. அல்லாஹ் போதுமானவன்.அவனே ஆற்றல் அனைத்தும் நிறைந்தவன்.

    ReplyDelete