Tuesday, September 16, 2008

அமெரிக்க மோகத்தில் தத்தளிக்கும் காங்கிரஸ்!

இந்தியாவின் தனித்தன்மையை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் விதத்தில் "பஞ்சசீல கொள்கை வகுத்து", அயல்நாட்டு உறவில் நடுநிலைமை பேணி வந்த நேருவின் காங்கிரஸ், திடீரென எழுந்த அமெரிக்க மோகத்தில் தத்தளிக்கின்றது.

அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அண்ணனோடு கைகோர்க்க முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு, அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயார் என்பதைக் கடந்த தினங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தன.

கொலைகாரன் என நீதிமன்றம் தீர்ப்பளித்த சிபுசோரனிலிருந்து பாஜக அமைச்சர்கள் வரை பதவி, பணம் மூலம் விலைக்கெடுத்துத் தனது அரசைக் காப்பாற்றிக் கொன்டு புஷின் செல்லநாயாக வலம் வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸின் பாரம்பரியத்தையே குழிதோண்டி புதைத்துக் கொன்டிருக்கும் இன்றைய காங்கிரஸ் அரசு, அமெரிக்காவோடு ஒட்டி நிற்க புஷ் என்ன கூறினாலும் அதற்குச் சப்பைக் கட்டுகட்டி விளக்கங்கள் கொடுத்து வருகிறது.

தனது வளர்ப்பு நாய்க்கு "இந்தியா" எனப் பெயரிட்ட புஷோடு மானம், சூடு, சுரணை உள்ள எந்த இந்தியனும் தொடர்பு வைத்துக் கொள்ள முன்வர மாட்டான். ஆனால், சூடு சுரணையற்றத் தலைவர்களை இன்று தன்னகத்தே கொண்டுள்ள காங்கிரஸ், அதனைக் குறித்து எவ்வித சலனமும் இன்றி புஷின் வாயிலிருந்து விழுவது அனைத்தையுமே பஞ்சாமிர்தம் என்ற ரீதியில் விளக்கங்கள் கொடுத்து வருவது வெட்கக்கேடு!

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு அடிதாங்க முயன்று வரும் காங்கிரஸ், அதற்காக கூறிய முக்கிய காரணங்களில் ஒன்று, இந்தியாவிற்குத் தேவையான அணு எரிபொருளை அமெரிக்கா வழங்கும் என்பதாகும்.

ஆனால், தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் புஷ், "இந்தியா - அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தம் அமெரிக்காவின் 123 சட்டப்படி செயல்படுத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு அணு எரிபொருள் சப்ளை செய்வது தொடர்பாக அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிக்கு எந்த சட்ட வடிவமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையே இந்தியாவுக்கு நிரந்தரமாக அணு எரிபொருளை அமெரிக்கா வழங்கும் என்பது தான். ஆனால், அதற்கே எந்த உத்தரவாதமும் இல்லை என்று புஷ் கூறியுருக்கும் நிலையில், "இணைந்திருப்பவர்களுக்குத் துரோகத்தை மட்டுமே என்றும் பரிசாக அளித்துள்ள அமெரிக்கா"வுடனான இந்த ஒப்பந்தத்தைக் காற்றில் வீசி எறிவது மட்டுமே தன்மானமுள்ள எந்த அரசும் செய்யும்.

ஆனால், தன்மானத்தை புஷின் வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே விலைபேசி விற்றுவிட்ட காங்கிரஸ் அரசு இதற்கும், "அணு ஒப்பந்தம் அமெரிக்காவின் 123 சட்டத்தின் வழிகாட்டுதலின்படி கொண்டு வரப்பட்டாலும், அது நடை முறைக்கு வந்து விட்டால், சர்வதேச சட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களுக்கான சட்டங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதனால் 123 சட்டத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை" என வெட்கமில்லாமல் உளறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரியும், "ஒரு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் அளிக்கும் உறுதிமொழிக்கு மற்ற எல்லாவற்றையும் விட சக்தி அதிகம். இந்தியாவுக்கு அணு எரிபொருளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் புஷ் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் குறித்து கவலையில்லை" என்று நாட்டு மக்களின் காதில் பூச்சுற்ற முயன்றுள்ளார்.

புஷைப் பொறுத்தவரை "21 ஆம் நூற்றாண்டின் அதிபயங்கர திருடன்" என்பதும் அவரின் உறுதி மொழிகள், செயல்பாடுகள் அனைத்துமே நம்பகத்தகுந்தவை அல்ல என்பதை இன்று உலகம் முழுவதும் உள்ள சாமானியர்கள் கூட உணர்ந்துள்ள நிலையில், "புஷ் நமக்கு உறுதியளித்துள்ளார். அதனால் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியதைக் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை" என்று காங்கிரஸ் கூறியிருப்பது, தனது மூளையையும் சிந்திக்கும் திறனையும் அமெரிக்க விஷயத்தில் காங்கிரஸ் கழட்டி கீழே வைத்து விட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது.

"அவன் என்ன கூறினாலும் நாம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அவன் நமக்கு வாக்குறுதி தந்துள்ளான்" என திருடனின் மீதும் அயோக்கியனின் மீதும் நம்பிக்கை வைக்க, மறை கழண்டு விட்ட காங்கிரஸுக்கு வேண்டுமெனில் இயலக்கூடிய காரியமாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் இவ்விஷயத்தில் மிகத் தெளிவுடனே இருக்கின்றனர்.
காங்கிரஸ் தனது கண்மூடித்தனமான அமெரிக்க மோகத்தால் தன்னைத் தானே அழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது என்று தீர்க்கமாக கூறலாம்.

அய்யோ பாவம் காந்தியும் நேருவும்!

1 comment:

  1. Not too long ago, I did not give a lot of thought to making comments on blog page articles and have placed feedback even much less. Reading by way of your pleasant article, will support me to do so sometimes.
    Minh FarfallaOLANSI FACTORY

    ReplyDelete